எந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகுமா!!!

இணுவில், இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேச ன்துறை வீதியில் அமைந்துள்ளது.


 இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில்உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன.

சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமே இணுவை யம்பதியாகும்.
இணுவில் கிராமமானது ஆதிகாலத்தில் குளத்தங்கரை நாகரீகத்திற்கு பெயர்போன குடியிருப்புக்களில் ஒன்றாகும். “இணையிலி” என்ற பெயரே இணுவில் ஆக மருவி வந்திருக்கின்றது.  இணுவில் என்பது முங்கில் அடர்த்தியாக இருந்த படியாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இக்கிராமமானது தற்போதும் பனை, தென்னை, வாழை, மா, பலா, போன்ற கனிமரங்களைக் கொண்டு பசுமையாகவே காட்சி தருகின்றது.  இங்கு பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற செம்மண் உடைய விவசாய நிலங்களைக் கொண்ட பூமி இது.வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.தமிழரசர் காலத்தில் திருக்கோவலூரில் இருந்து வருவிக்கப்பட்ட,பேராயிரமுடையான் எனும் வேளாளனும், அவனது பரிவாரத்தினரும் இணுவிலில் குடிஅமர்த்தப்பட்டார்கள் என்று “யாழ்ப்பாண வைபவமாலை” எனும் வரலாற்று நூல் கூறுகின்றது. அப்போது பேரூர்களாக விளங்கிய பன்னிரண்டு ஊர்களில் இணுவில் கிராமமும் ஒன்றாகும்.



இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக இராமநாதன் மகளிர் கல்லூரி, யாழ். பலகலைக்கழக இசை, நுண்கலைப்பிரிவு, இணுவில் மத்திய கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி என்பன விளங்குகின்றன.



இணுவில் பெற்றெடுத்து புகழ் பூத்தவர்களான இணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர், வி. தெட்சணாமூர்த்தி - தவில் வித்வான்,இணுவில் சின்னராசா - தவில் வித்வான், இணுவில் வீரமணி ஐயர்- சாகித்ய கர்த்தா/ நடன ஆசிரியர், க. சண்முகம்பிள்ளை மிருதங்கக் கலைஞர், ஆர். சிவலிங்கம் (உதயணன்)- சிறுகதை.நாவல் எழுத்தாளர், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்- எழுத்தாளர்


இணுவையூர் மயூரன் (-ஈழத்துப்பித்தன்)- எழுத்தாளர்/வானொலி கலைஞர்,என்போர் இணுவிலிற்கு பெருமை தேடித் தந்தவர்களாவர்.
பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இணுவிலில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் காரைக்கால் சிவன் கோவில், சிவகாமி அம்மன் கோயில், செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்,

இணுவில் கந்தசுவாமி கோயில், மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில், இணுவில் இளந்தாரி கோயில், இணுவில் அண்ணமார் கோயில், இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது), இணுவில் வைரவர் ஆலயம் என்பனவாகும்.

 விளையாட்டுத் துறையில் இணுவில் இந்து விளையாட்டுக் கழகம் ஆற்றும்பணிகள் பாராட்டுக்குரியன. மேலும்,இணுவில் இந்துவின் சிறுவர் அணி  பட்டாளம் பல வெற்றிகளை இந்துவுக்காக தேடி கொடுத்திருக்கிறது.

கல்வியினையும், விளையாட்டினையும் கருவிகளாகக் கொண்டு இணுவில் கிராமத்தினை வளர்த்துக்கொண்டிருக்கும் எம்மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே!
-இணுவில் தாசன்


1 comments:

  1. இப்பதிவில் எழுத்தாளர் இணுவில் கே-எஸ்- ஆனந்தன், கவிஞர் ச-வே/பஞ்சாட்சரம்(இவருக்கு 25 ஆவது வயதில் எழிலி என்னும் காவியத்திற்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது) இவர்களை எப்படி மறந்தீர்கள் என்று புரியவில்லை.

    ReplyDelete