உயிர் பெற்ற தமிழர்

[குயில் பாட்டு]

பல்லவி:

இனிஒரு தொல்லையும் இல்லை-பிரி

வில்லை,குறையும் கவலையும் இல்லை (இனி)

 

ஜாதி:

மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;

கனிதரும் மாமரம் ஒன்று-அதில்

காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

 

பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்

பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு

நாவிற் கினியதைத் தின்பார்-அதில்

நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார்.

 

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;

இன்று படுத்தது நாளை-உயர்ந்

தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

 

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த

நாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின்,

எந்தக் குலத்தின ரேனும்-உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

 

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

0 comments:

Post a Comment