மகாவம்சத்தில் புதைந்துள்ள ... /பகுதி- 03

'உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனாரின் நற்றிணை 366  ஆம் பாடலை ஒரு உதாரணமாக கீழே தருகிறேன்.


"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்

வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்

திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள்

மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,

கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி

மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த

இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்

வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,

முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை

மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும்

வட புல வாடைக்குப் பிரிவோர்

மடவர் வாழி, இவ் உலகத்தானே!"

[நற்றிணை 366] 

அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல் கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அந்தக் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு, வாடைக் காலத்திலும் பொருள் தேடிக்கொண்டிருப்போர் உண்மையில் மடவர் (மடையர்) என்கிறது அந்த பாடல். பேசுவதற்கு முதலில் சைகை தோன்றி, பின் குரல் மூலம் ஒலி எழுப்பி, பின் அது மற்றவர்களால் கேட்டு உணரக் கூடிய, அடையாளப் படுத்த கூடிய, குரல் அல்லது ஒலி மொழியாக மாறி, அதற்கு, ஒரு முதல் கட்டமைப்பாக எழுத்து தோன்றி, பின் அதற்கு ஒரு கட்டுப்பாடாக இலக்கணம் வரையறுத்து, அதன் பின் தான் இலக்கியம் மலர்கிறது. சிங்களம் என்ற இனம்மற்றும் சிங்கள மொழி தோன்ற முன், இந்த ஈழத்து புலவர் எப்படி அழகாக, ஆழமாக, கவர்ச்சியாக, ஆனால் மறை முகமாக தன் மனக்கிளர்ச்சியை உங்களுடன் பகிர்கிறார் என்று பாருங்கள் !! 

 

தீபவம்சம், பாடம் 19 இல் [Dīpavaṁsa [The Chronicle of the Island] XIX.], 17 ஆவது பாடல், இந்த அரசனை கொன்று, தட்டிகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கடைசி ஐந்து ஆட்சிகள் தமிழரினதாக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்] மொத்தம் 14 ஆண்டுகள் 7 மாதம்,  கிமு 103 ஆண்டில் இருந்து ஆட்சி செய்தனர் என்கிறது [ Having killed this king, a person Dāṭhiya by name reigned two years. These five sovereigns belonging to the Damila tribe governed fourteen years and seven months in the interval between the two parts of Vaṭṭagāmani’s reign] இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவியது எனவும், சேனன், குத்திகன்(கி.மு  237-கி.மு 215) என்ற இரு தமிழர் ஆட்சி செய்தனர் எனவும் அது மேலும் கூறுகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், தமிழர் என்ற சொற்பதம் பல இடங்களில் மொழியையும் இனத்தையும் குறிக்க இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ளது, ஆனால் முதலில் கி பி 4ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட பாளி நூல் தீபவம்சதில் ஒரே ஒரு முறை தான் சிஹல [‘Sihala' / lion in Pali] என்ற சொல் பாவிக்கப் பட்டுள்ளது. அதுவும் சிங்கத்திற்குப் பிறகு, தீவு சிஹல என் அறியப்படும் என்று மாத்திரமே குறிக்கப் பட்டுள்ளது [“The island of Laṅkā was called Sīhala after the Lion (sīha); listen ye to the narration of the origin of the island which I am going to tell.” Dipavamsa IX, Vijaya’s Story].

 

" குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்; " கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே " என்றும்; "குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்; ... திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடியுள்ளார். எனவே பாடும் அளவிற்கு பெருமை அடைவதாயின், இந்த சிவ ஆலயம் கட்டாயம் இதற்கு முன்னதாகவே, மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்திருக்கும். மகாவம்சம் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட  துணை- விளக்க உரையின் படி [According to the Tika]  கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும்  'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு  துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலய உடைப்புகளும், உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதை இன்றும் கண்கூடாக சில சந்தர்ப்பங்களில் ஓரளவு காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக குறுந்தூர் மலை நிகழ்வை கூறலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 04 தொடரும்,அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக  Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள ....../ பகுதி 04:  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment