குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

 


24 மணி நேர வலிக்கு பிறகு பிறந்த தன் ஆண் குழந்தையை மெதுவாக தொடுகிறார் அமூல்யா. அவர் முகம் முழுவதும் புன்னகை.

தான் மறு பிறவி எடுத்ததாக அவர் உணர்கிறார். அறுவை சிகிச்சை வேண்டாம் என, சுகப்பிரசவத்திற்காக காத்திருந்து குழந்தை பெற்றிருக்கிறார் அமூல்யா.

குழந்தையின் உடல் நலன், எடை, குழந்தை யார் மாதிரி உள்ளது என்ற பல கேள்விகளோடு அமூல்யாவின் மாமியாரும் மாமனாரும் அவரது அறைக்குள் நுழைந்தனர்.

ஆனால், அவர்கள் கேட்ட முதல் கேள்வி, குழந்தையின் நிறம் குறித்துதான்.

அமூல்யாவின் தாயிடம், குழந்தை வயிற்றில் இருக்கும்போது குங்குமப்பூ கலந்த பால் கொடுத்தார்களா இல்லையா என்பதுதான் அந்த கேள்வி. குங்குமப்பூ கலந்த பால் கொடுத்திருந்தால் மகன் இவ்வளவு கறுப்பாக பிறந்திருக்க மாட்டானே?

மேலும் தன் மகளுக்கு குங்குமப்பூ கலந்த பால் கொடுத்ததால் சிவப்பான குழந்தை பிறந்துள்ளதாகவும் அமூல்யாவின் மாமியார் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தை சண்டையில் போய் முடிந்தது. அப்போதுதான் நான் அறையினுள் நுழைந்தேன்.

குங்குமப்பூ பாலை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குடிப்பதற்கும், சிவப்பாக குழந்தை பிறப்பதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்றும் அதற்கான காரணத்தையும் கூறினேன்.


தோலின் நிறம் எப்படி உண்டாகிறது?

ஒருவரது தோலின் நிறம் என்பது, அக்குழந்தையின் பெற்றோர், அவரது மரபணுக்கள், மெலனின் உற்பத்தி ஆகியவற்றை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

மெலனின் அதிகமாக இருப்பவர்களின் தோல் நிறம் கருமையானதாகவும், மெலனின் குறைவாக இருக்கும் நபர்கள் சிவப்பாகவும் இருப்பார்கள்.

மேலும், சூரியனும் நம் தோல் நிறத்தை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து மெலனின் நம் தோலை பாதுகாக்கிறது.

பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் மக்களின் தோல் நிறம் கறுப்பாக இருக்கும். பூமத்திய ரேகைக்கு தொலைவில் இருக்கும் மக்கள் வெள்ளையாக இருப்பார்கள். உதாரணமாக மேற்கத்திய நாடுகள். இதுவும் மெலனினின் மாயம்தான்.

பூமியில் பிறந்த முதல் மனிதர் மிகவும் கருமையான நிறத்தில் ஆஃப்பிரிக்காவில் பிறந்தார்.

மக்கள் குடிபெயர்தல், கலப்பு கலாசார திருமணங்கள், மரபணு மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து மனிதர்களின் தோல் நிறத்தை கறுப்பில் இருந்து வெள்ளையாக மாற்றியது. இது குங்குமப்பூவால் ஏற்பட்ட மாற்றம் கிடையாது.

உண்மையில், எந்த நிறமும் பெரியதோ அல்லது சிறியதோ கிடையாது. நிறத்தை அடிப்படையாக வைத்து மக்களை வேறுபடுத்துவது வருத்தமாக உள்ளது.

நம் தோலின் நிறம் என்னவாக இருந்தாலும், அதனுள் ஓடும் ரத்தத்தின் நிறம் ஒன்றுதான். மனித உணர்வுகள் ஒன்று போலதான் இருக்கும்.

குழந்தை பெற்றுக் கொள்ளும்போது, உங்கள் மருமகள் தாங்கிக் கொண்ட வலியை யோசித்து பார்த்தீர்களா என்று கேட்டேன்.

இதையெல்லாம் கேட்ட அமூல்யா, தன் குழந்தையை தூக்கி அணைத்துக் கொண்டார்.

-மருத்துவர் ரோம்பிசர்ல பார்கவி

நன்றி:பி பி சி தமிழ்


0 comments:

Post a Comment