இனியவை நாற்பது /07/இனிது,இனிது இவை இனிது

 [இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.இவரது காலம் கி.பி.725750 எனப்பட்டது.இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது.]

 


இனிது,இனிது இவை இனிது- தொடர்கிறது.....

 

 

வெண்பா 31:

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே

கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே

சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.       

 

விளக்கம்தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.

 

வெண்பா 32:

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே

பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே

தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்

பத்திமையிற் பாங்கினியது இல்.     

 

விளக்கம்கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

 

வெண்பா 33:

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே

தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே

வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்

தானை தடுத்தல் இனிது.       

 

விளக்கம்ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.

 

வெண்பா 34:

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே

சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே

புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை

கொள்ளர் விடுதல் இனிது.   

 

விளக்கம்இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

 

வெண்பா 35:

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே

முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே

பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்

வெற்வேறில்(@) வேந்தர்க்கு இனிது.

(@) -வெற்றல் வேல்     

 

விளக்கம்வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.

இனியவை நாற்பது பகுதி 08 வாசிக்க 

அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது/08/இனிது,இனிது இவை இனிது:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிதாகும், இனிது, முன்இனிதே, ஆராய்ந்து, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், நாற்பது, இனியவை, மாறாத, பெருமை, சொல்லுதல், உடைய, ஊக்கம், கருமப், சங்க, இனிதே, செய்தல், இனியது, வேறு



0 comments:

Post a Comment