திருக்குறள்..-/24/-... புகழ்

திருக்குறள் தொடர்கிறது…

 


24. புகழ்

 

👉குறள் 231:

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல

தூதிய மில்லை உயிர்க்கு.

 

மு. உரை:

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

கலைஞர் உரை:

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

English Explanation:

Give to the poor and live with praise There is no greater profit to man than that.

 

👉குறள் 232:

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்.

 

மு. உரை:

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

கலைஞர் உரை:

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

English Explanation:

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

 

👉குறள் 233:

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

 

மு. உரை:

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

கலைஞர் உரை:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

English Explanation:

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.

 

👉குறள் 234:

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு.

 

மு. உரை:

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

சாலமன் பாப்பையா உரை:

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.

கலைஞர் உரை:

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

English Explanation:

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

 

👉குறள் 235:

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

 

மு. உரை:

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

கலைஞர் உரை:

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

English Explanation:

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

 

👉குறள் 236:

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

மு. உரை:

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.

கலைஞர் உரை:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

English Explanation:

If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born.

 

👉குறள் 237:

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்.

 

மு. உரை:

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

சாலமன் பாப்பையா உரை:

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

கலைஞர் உரை:

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

English Explanation:

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

 

👉குறள் 238:

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.

மு. உரை:

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை:

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

கலைஞர் உரை:

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.

English Explanation:

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

 

👉குறள் 239:

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

மு. உரை:

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

கலைஞர் உரை:

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

English Explanation:

The ground which supports a body without fame will diminish in its rich produce.

 

👉குறள் 240:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.

மு. உரை:

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

கலைஞர் உரை:

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

English Explanation:

Those live who live without disgrace Those who live without fame live not.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 


அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக  
Theebam.com: திருக்குறள்...-/25/-...அருளுடைமை:

 

0 comments:

Post a Comment