திருக்குறள் தொடர்கிறது…
30. வாய்மை
👉குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்தீமை யிலாத சொலல்.
மு.வ உரை:
வாய்மை என்று கூறப்படுவது
எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்மை என்று சொல்லப்படுவது
எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
கலைஞர் உரை:
பிறருக்கு எள்முனையளவு
தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
English Explanation:
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
👉குறள் 292:
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
மு.வ உரை:
குற்றம் தீர்த்த நன்மையை
விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் அற்ற நன்மையைத்
தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
கலைஞர் உரை:
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக்
கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
Even falsehood has the
nature of truth, if it confer a benefit that is free from fault.
👉குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய
ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே
தன்னை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச்
சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
கலைஞர் உரை:
மனச்சாட்சிக்கு எதிராகப்
பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
Let not a man knowingly tell
a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory
of his guilt).
👉குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
மு.வ உரை:
ஒருவன் தன் உள்ளம் அறியப்
பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல்
ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
கலைஞர் உரை:
மனத்தால்கூடப் பொய்யை
நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
He who, in his conduct,
preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
👉குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.
மு.வ உரை:
ஒருவன் தன் மனதோடு பொருந்த
உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறிய உண்மை பேசுபவன்,
தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
கலைஞர் உரை:
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்
English Explanation:
He, who speaks truth with
all his heart, is superior to those who make gifts and practise austerities.
👉குறள் 296:
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
மு.வ உரை:
ஒருவனுக்கு பொய் இல்லாமல்
வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும்
கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் இருப்பது
போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும்
தரும்.
கலைஞர் உரை:
பொய் இல்லாமல் வாழ்வது
போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது
அந்த வாழ்வேயாகும்.
There is no praise like the
praise of never uttering a falsehood: without causing any suffering, it will
lead to every virtue.
👉குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.
மு.வ உரை:
பொய்யாமை ஆகிய அறத்தை
உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் ஒருவன்
வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.
கலைஞர் உரை:
செய்யக்கூடாததைச் செய்யாததால்
விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி
நன்மை தருவதாகும்.
If a man has the power to
abstain from falsehood, it will be well with him, even though he practise no
other virtue.
👉குறள் 298:
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
மு.வ உரை:
புறத்தே தூய்மையாக விளங்குதல்
நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்;
உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
கலைஞர் உரை:
நீரில் குளிப்பதால் உடலின்
அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும்
செயலிலும் வாய்மை வேண்டும்.
Purity of body is produced
by water and purity of mind by truthfulness
👉குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
மு.வ உரை:
(புறத்தில் உள்ள இருளை
நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்)
பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும்
விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
கலைஞர் உரை:
புறத்தின் இருளைப் போக்கும்
விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன்
எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
English Explanation:
All lamps of nature are not
lamps; the lamp of truth is the lamp of the wise.
👉குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
மு.வ உரை:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள்
வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
சிறந்தவை என்று நான் கண்டு
அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு
ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை:
வாய்மையைப் போல் சிறந்த
பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
Amidst all that we have seen
(described) as real (excellence), there is nothing so good as truthfulness.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்…
0 comments:
Post a Comment