'ஸ்மார்ட்- காண்டாக்ட் லென்ஸ்’:

'ஸ்மார்ட் வாட்ச்' போல வருகிறது 'ஸ்மார்ட்- காண்டாக்ட் லென்ஸ்’: வசதிகள், சிக்கல்கள் என்ன?


இப்படிக்  கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அது குறித்து நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளைப் பார்ப்பதற்காக நீங்கள் குனிய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் கண்களிலேயே நீங்கள் படிக்க வேண்டிய குறிப்புகள் திரையில் ஓடுவதைப் போல ஓடுகின்றன. இது எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் இதுவும் நடக்கும் என்கிறார்கள் ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸ்' ( contact lenses) தயாரிப்பாளர்கள்.


"நீங்கள் ஓர் இசைக் கலைஞர். உங்கள் கண்ணிலேயே பாடல்வரிகளோ அல்லது ஸ்வரங்களோ ஓடுகின்றன. அல்லது, நீங்கள் ஒரு தடகள வீரராக இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான பயோமெட்ரிக்ஸ், நீங்கள் ஓடிய தூரம் மற்றும் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கின்றன. நினைத்துப் பாருங்கள்," என்று ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸ்களை' உருவாக்கிவரும் மோஜோ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் சின்க்ளேர் கூறுகிறார்.


அவரது நிறுவனம் மனிதர்கள் மீது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தி சோதனையைத் தொடங்க உள்ளது. இதை அணிபவர்களுக்கு, அவர்கள் கண்கள் முன் வரிகள் மிதப்பது போல இருக்கும்.


இந்த தயாரிப்பின் ஸ்க்லரல் லென்ஸ் (Scleral Lens) (கண்ணின் வெள்ளைப்பகுதி வரை நீண்டு இருக்கும் ஒரு பெரிய லென்ஸ்) பயனரின் பார்வையை சரி செய்கிறது. இதில் ஒரு சிறிய மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே (MicroLED Display), ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் திட-நிலை பேட்டரிகள் ஆகியவற்றையும் இருக்கும்.


"உண்மையில் பயன்படுத்தப்படும், அணியக்கூடிய அம்சங்கள் கொண்ட 'முழுமையான' ஸ்மார்ட் கான்டாக்ட் லென்சை நாங்கள் உருவாக்கியுள்ளோம் . விரைவில் அதை நாங்கள் சோதிக்க இருக்கிறோம்," என்கிறார் சின்க்ளேர்.


"இப்போது இதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. நாங்கள் இதன் செயல்திறனை மேம்படுத்தத் தொடங்குகிறோம். நாள் முழுவதும் நாம் இதை அணியலாம் என்று நிரூபிக்க இதை நீண்ட நேரம் பயன்படுத்தி பார்ப்போம்," என்கிறார்.


ஒருவரது உடல்நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்க மற்ற ஸ்மார்ட் லென்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன.


இந்த லென்ஸ்கள் "ஒருவரது உடல்நலம் குறித்த சுய கண்காணிப்பு, கண் அழுத்தம் மற்றும் குளுக்கோஸைக் கண்காணிக்கும் திறனை உள்ளடக்கியிருக்கலாம், " என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆப்டோ மெட்ரிக் அறிவியல் பயிற்றுவிப்பாளர் ரெபேக்கா ரோஜாஸ் கூறுகிறார். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் குளுக்கோஸ் அளவை கண்காணித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய் முதல் கண் நோய் வரை உள்ள நோய்களுக்கு, அவர்களின் நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய லென்ஸ்களை உருவாக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. புற்றுநோய் இருப்பவர்களுக்கு, புற்றுநோய் தொடர்பான மூலக்கூறுகள், குளுக்கோஸ் அளவு போன்ற பயோ மார்கர்களை கண்காணிக்கவும் இது உதவலாம்.


சர்ரே பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழு, ஒரு ஸ்மார்ட் 'காண்டாக்ட் லென்ஸை' உருவாக்கியுள்ளது. அதில், ஒளியியல் தகவல்களை பெறுவதற்கான போட்டோ-டிடெக்டர்கள் (photo detector), கருவிழி தொடர்பான நோயைக் கண்டறிவதற்கான வெப்பநிலை சென்சார், கண்ணீர் திரவத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்கும் குளுக்கோஸ் சென்சார் ஆகியவை உள்ளன.


"மிக மெல்லிய அடுக்குடன் நாங்கள் அதை மிகவும் தட்டையாக உருவாக்குகிறோம். மேலும் சென்சார் லேயரை நேரடியாக காண்டாக்ட் லென்ஸில் வைக்கலாம். ஆகவே, அது நேரடியாக கண்ணை தொடும், என்று சர்ரே பல்கலைக்கழகத்தில் பயோ எலக்ட்ரானிக்ஸ், ஆற்றல் சேமிப்பு பிரிவின் விரிவுரையாளர் யுன்லாங் சாவோ கூறுகிறார்.


"இது வளையும் தன்மை கொண்டதால், இதை அணிவது மிகவும் வசதியாக இருப்பதைப் போல உணர்வீர்கள். மேலும் நேரடி தொடர்பு இருப்பதால், இது மிகவும் துல்லியமான உணர்திறன் முடிவுகளை அளிக்க முடியும், " என்று டாக்டர் சாவோ கூறுகிறார்.


இந்த ஸ்மார்ட் லென்ஸ் தொழில்நுட்பம் குறித்து கேட்க நன்றாக இருந்தாலும், இது இன்னும் பல தடைகளை கடக்க வேண்டும்.

அதில் ஒன்று, பேட்டரிகள் மூலம் அவற்றை இயக்குவது தொடர்பான சவால். இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும். அப்படி சிறியதாக இருக்கும்போது அது பயன்படும் வகையில் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

மோஜோ அதன் தயாரிப்பை இன்னும் சோதித்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் அவர்களின் லென்ஸ்களை ரீசார்ஜ் செய்யாமல் நாள் முழுவதும் அணிய வேண்டும் என்றும் அந்த நிறுவனம் விரும்புகிறது.

"நீங்கள் லென்ஸ்கள் மூலம் தகவல்களை தொடர்ந்து பெறாமல், நாள் முழுவதும் சிறிது நேரம் அவ்வப்போது பெற வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. அது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் போலவே, ஒரு பேட்டரியின் திறன் எப்படி, எவ்வளவு முறை பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. " என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்குகிறார்.

இதில் இருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், 2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து தனியுரிமை பற்றிய பிற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். கூகுளின் இந்த முயற்சி தோல்வியும் அடைந்தது.

"முகத்திற்கு முன்னே இருக்கும் கேமராவை கொண்ட எந்தவொரு சாதனமும் பயனர் படங்களை எடுக்க அல்லது வீடியோவை பதிவுசெய்ய அனுமதிக்கும். இது எதிரில் இருப்பவர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கிறது," என்கிறார் ஆக்சஸ் நவ் (Access Now) என்ற டிஜிட்டல் உரிமைகள் விழிப்புணர்வு குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் டேனியல் லியூஃபர்.

"ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம், சுற்றி இருப்பவர்களைப் பதிவு செய்யும்போது, அவர்களுக்கு சமிக்ஞை அளிக்க சில வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, சிவப்பு எச்சரிக்கை ஒளி. ஆனால் காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம் அத்தகைய அம்சத்தை எவ்வாறு செயல்படுவது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம்," என்கிறார் அவர்.


இது தவிர, அதன் தயாரிப்பாளர்ள் லென்ஸ் அணிந்தவர்கள் பற்றிய தரவு-பாதுகாப்பு குறித்த கவலைகளையும் கொண்டிருப்பார்கள்.


ஸ்மார்ட் லென்ஸ்கள் பயனரின் கண் அசைவுகளைக் கண்காணித்தால் மட்டுமே அவற்றின் செயல்பாட்டைச் செய்ய முடியும். மேலும் இதுவும் அவர்களைப் பற்றய மற்ற தரவுகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்.


"இந்தச் சாதனங்கள் நான் எதைப் பார்க்கிறேன், எவ்வளவு நேரம் அவற்றைப் பார்க்கிறேன், ஒரு குறிப்பிட்ட நபரைப் பார்க்கும்போது என் இதயத் துடிப்பு அதிகரிக்கிறதா அல்லது ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டால் எவ்வளவு வியர்க்கிறது என்பதைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து பகிர்ந்தால் என்ன செய்வது?," என்று லியூஃபர் கேட்கிறார்.

"எங்கள் பாலியல் நிலைப்பாடு முதல் விசாரணையின் கீழ் நாங்கள் உண்மையைச் சொல்கிறோமா என்பது வரை தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி) கண்ணாடிகள் அல்லது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் போன்ற சாதனங்கள் மிகவும் தனிப்பட்ட தரவுகளின் சாத்தியமான களாமக பார்க்கப்படும் என்பது எனது கவலை." என்கிறார்

கூடுதலாக, வழக்கமான லென்ஸ்க்கள் அணியும் எவருக்கும் நன்கு தெரிந்த தயாரிப்பு பற்றிய கவலைகளும் உள்ளன.

"எந்த வகை கான்டாக்ட் லென்ஸும் சரியாகப் பராமரிக்கப்படாவிட்டாலோ அல்லது சரியாகப் பொருத்தப்படாவிட்டாலோ கண் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மற்ற மருத்துவ சாதனங்களைப் போலவே, நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் எந்த சாதனம் பயன்படுத்தினாலும் ஆபத்தை விட அதிக நன்மைகள் இருப்பவையாக இருக்க வேண்டும்." என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஜாஸ்.

"லென்ஸ் பராமரிப்பை முறையாக செய்யாமல் இருந்தல், நீண்ட நேரம் அணிந்திருப்பது பற்றி நான் கவலையடைகிறேன். இவை எரிச்சல், வீக்கம், தொற்றுகள் அல்லது கண் ஆரோக்கியத்திற்கு ஆபத்து போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்", என்கிறார்.

மோஜோவின் லென்ஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு வருடம் வரை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சின்க்ளேர் இது கவலைக்குரியது என்று ஒப்புக் கொள்கிறார்.

ஆனால், ஸ்மார்ட் லென்ஸ் என்றால் அது போதுமான அளவு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறியவும், அதை மாற்ற வேண்டியிருக்கும் போது பயனர்களை எச்சரிக்கவும் திட்டமிட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது தொடர்பாக கண் மருத்துவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

"நீங்கள் ஒரு ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் போன்ற ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி, முதல் நாளிலேயே அனைவரும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்" என்கிறார் சின்க்ளேர்.

"எல்லா புதிய நுகர்வோர் தயாரிப்புகளைப் போலவே இது ஏற்கப்படுவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆனால் நம் லென்ஸ்கள் அனைத்தும் இறுதியில் 'ஸ்மார்ட்' ஆகப் போவது தவிர்க்க முடியாதது என்று நாங்கள் நினைக்கிறோம்." என்கிறார்.

:எம்மா வூல்லாகாட்-/-தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர் /பிபிசி 

உங்கள் நகங்கள் காட்டும் நோய்கள்

நகங்கள் வெள்ளையாக, மஞ்சளாக, நீலமாக மாறினால் அதற்கு என்ன பொருள்?



நகங்களைப் பராமரிப்பது, அழகு நிலையம் அல்லது நெயில் சலூனுக்கு செல்வதை விட மிகவும் முக்கியம். உடலின் இந்தப் பகுதியானது உங்கள் உடல்நலம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கிறது.

 

எனவே, நகங்களின் நிறம் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நகங்களில் புள்ளிகள் அல்லது அவை உடைதல் அல்லது வேறு ஏதாவது அறிகுறிகள் தோன்றுவது, வரவிருக்கும் நோய்க்கான எச்சரிக்கையாக இருக்கலாம்.

 

இப்படி ஏற்பட்டால் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் மருத்துவர் நோயாளியின் நிலையை ரத்த பரிசோதனைகள் மற்றும் பிற முறைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

 

மேலும் தீவிரமான சந்தேகம் ஏற்பட்டால், நிபுணர் ஒரு பயாப்சி மேற்கொள்ளும்படி கேட்கலாம்.

 

நம் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை பாதிக்கும் நோய்களும் உள்ளன. பெரும்பாலான உடல்நலப் பிரச்னைகள் சிறுநீரகம், தோல், கல்லீரல், நாளமில்லா சுரப்பி (எண்டோகிரைன் சுரப்பி), ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

 

நல்ல விஷயம் என்னவென்றால், நகத்தின் எந்த ஒரு மாற்றமும் எப்போதும் கடுமையான உடல்நலப் பிரச்னையைக் குறிக்கும் என்பது இல்லை. சில சமயங்களில் இது சாதாரணமாகவும் ஏற்படுகிறது.

 

"கால் நகங்கள் அவ்வளவு நன்றாக பராமரிக்கப்படுவதில்லை என்பதால் சில நேரங்களில் அவற்றில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, அவை மஞ்சள் நிறமாகி, கரடுமுரடானதாக மாறும்" என்கிறார் தோல் மருத்துவர் வலேரியா சானெல்லா ஃபிரான்சென்.

 

வரவிருக்கும் சிக்கல்களைக் குறிக்கின்ற மற்றும் கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

 

வெள்ளை நகங்கள்

தனது நகங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்படுவதாக யாராவது உணர்ந்தால், முதலில் அதன் நிறத்தைப் பார்க்க வேண்டும்.

 

நகத்தின் நிறம் வெண்மையாக இருந்தால், அது மைக்கோசிஸ், சொரியாசிஸ், நிமோனியா மற்றும் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

 

ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த புரத உணவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

 

"நகங்கள் நிறமிழந்தால் அது ரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இரும்புச்சத்து இல்லாமல் இருந்தால் நகங்கள் ஸ்பூன் வடிவமாகவும், குழிவாகவும் இருக்கும்," என்று சரும மருத்துவ நிபுணர் ஜூலியானா பிக்வெட் கூறுகிறார்.

 

நகங்களில் வெள்ளைத்திட்டுகள் தோன்றும் லுகோனிகியா போன்ற ஒரு நிலையும் உள்ளது. ஆனால் அது எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. அவை உடலில் எந்த மாற்றத்தையும் குறிக்காது.

 

இந்த நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளிடமிருந்து பிரச்சினையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.

 

உங்கள் நகங்களின் நிறம் வெண்மையாகத் தெரிய ஆரம்பித்தால், தோல் மருத்துவரிடம் சென்று, அவர் ஏதேனும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி சொன்னால் கண்டிப்பாகச் செய்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரைத் தொடர்புகொள்ளலாம்.

 

மஞ்சள் நகங்கள்

நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுவது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் அல்லது வயோதிகமும் அதற்கு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் நகங்கள் பருமனாகும், அவற்றில் மஞ்சள் நிறமும் காணப்படும்.

 

பூஞ்சை தொற்று காரணமாகவும் இது நிகழலாம். மேலும் சில கடுமையான சூழல்களில் இது சொரியாஸிஸ், எச்..வி மற்றும் சிறுநீரக நோயைக் குறிக்கிறது.

 

அதிகம் புகைப்பிடிப்பவர்களின் நகங்கள் சிகரெட்டுடன் நேரடித்தொடர்பில் வருவதால் மஞ்சள் நிறமாகத் தெரிய ஆரம்பிக்கும்.

 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மஞ்சள் நிறமானது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் அதிகமாக காணப்படுகிறது.

 

நகங்களில் வெள்ளை புள்ளிகள்

தோல் சிறப்பு மருத்துவர்கள் இதை 'பீட்டிங்' என்பார்கள். இவை நகங்களில் சிறிய புள்ளிகள் போல் இருக்கும். பெரும்பாலும் ஒரு நகத்தில் ஒன்றுதான் இருக்கும்.

 

இது அடோபிக் டெர்மடிடிஸ் (ஒரு வகை அரிக்கும் தோலழற்சி), சொரியாஸிஸ் அல்லது வேறு ஏதேனும் தோல் நோய் அல்லது முடி பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

 

"நகங்களில் வெள்ளைப் பகுதி தெரிந்தால், அது அலோபீசியா அரேட்டாவுடன் (திடீர் முடி உதிர்தல்) தொடர்புடையதாக இருக்கலாம். இந்த நிலையில் முடிக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்," என்று ஃபெடரல் யூனிவர்சிட்டி ஆஃப் சாவ் போலோவின் தோல் மருத்துவரான ஜூலியானா டோமா கூறுகிறார்,

 

சில நேரங்களில், இது சிபிலிஸ் எனப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

 

நீல நகங்கள்

சில மருந்துகளின் பயன்பாடு காரணமாக நீல நகங்கள் ஏற்படலாம்.

 

முகப்பரு அல்லது மலேரியாவுக்கு மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்களின் நகங்களில் இத்தகைய நிறம் காணப்படுகிறது.

 

இது நிகழும்போது, ஒரு குறிப்பிட்ட மருந்தை நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா அல்லது சிகிச்சையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை மருத்துவர் பார்க்க வேண்டும்.

 

நகத்தில் மீண்டும் மீண்டும் பூஞ்சை தொற்று

மைக்கோசிஸ் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது . சிகிச்சை நிறுத்தப்பட்டால் அது மீண்டும் ஏற்படலாம். இது சரியாக கண்காணிக்கப்படாவிட்டால், அது மீண்டும் மீண்டும் வெளிப்படும்.

 

இந்த பிரச்சனை பெரும்பாலும் கால் நகங்களில் ஏற்படுகிறது. ஒருமுறை சிகிச்சையைத் தொடங்கினால், ஆறு மாதங்களுக்குத் தொடர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

இது கையில் ஏற்பட்டால் மூன்று முதல் நான்கு மாதங்கள் சிகிச்சை செய்யப்பட வேண்டும். நோயாளி சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருத்துவர் சொன்னால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

 

இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்கவேண்டும். நீச்சல் குளம் மற்றும் சோனா போன்ற தொற்று ஏற்படக்கூடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

 

நகங்கள் மீது கோடுகள்

இவை 'பியோஸ் லைன்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நகத்தின் மீது கிடைமட்ட கோடுகள் போலத்தோன்றும்.

 

அதிக காய்ச்சல் அல்லது கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது.

 

இந்த கோடுகள் கருமை நிறத்தில் தோன்றி ஒரு விரலில் மட்டும் தெரியும் போது, அது மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

 

மெலனோமா என்பது ஒரு வகை தோல் புற்றுநோயாகும்.

 

நகங்களில் உலர்வு

ரசாயனப் பொருட்களுடன் நகங்கள் தொடர்பில் வந்தால் அவை உடையும் அல்லது விழுந்துபோகும் அளவிற்கு உலர்ந்துவிடும்.

 

இப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் கிரீம் போன்றவற்றின் மூலம் உடலின் அந்த பகுதியில் ஈரப்பதத்தை பராமரிக்கவேண்டும்.

 

உணவில் புரதம், பயோட்டின் (B7) மற்றும் பிற பி வைட்டமின்கள் இல்லாமை போன்ற காரணங்களாலும் பலவீனமான நகங்கள் ஏற்படலாம்.

 

சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொண்டால், நகங்கள் உடைவதைத் தவிர்க்கலாம்.

 

பிரிசில்லா கார்வால்ஹோ-/-பிபிசி பிரேசில் செய்தியாளர்