"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:19

Mother Goddess
இன்று இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மனித வடிவ கடுமட் சிறு உருவச் சிலை [terracotta figurines] காணப்படுகிறது.அவை அந்தந்த பகுதி பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றன. உதாரணமாக,இப்படியான உருவச் சிலைகள் தெய்வத்திற்கு படைக்கப் படுகின்றன.சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்  பட்ட   பெருவாரியான, பலதரப்பட்ட  கைவினைப்பொருட்கள், ஒன்றில் யோகாவின் இயல்பை அல்லது தாந்த்ரீக  இயல்பை கொண்டுள்ளன. இவை சிந்து வெளி மக்கள் ஒரு வித உருவ வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதை எமக்கு எடுத்து உரைக்கிறது. தாந்த்ரீகம் பொதுவாக பெண்களுக்கு உயர் மதிப்பு, மரியாதை  கொடுப்பதுடன்,அவர்களின் இனவிருத்தி அல்லது குழந்தை பெறும் ஆற்றலால், சமூகத்தில் அவர்களுக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கிறது. இதனால்,சிந்து வெளியில் தோண்டி எடுக்கப் பட்ட சிறு உருவச் சிலைகளில் பெண்களின் சிலைகளே கூடுதலாக காணப்படுகிறது.மேலும் பெண் மக்களில் காணப் பட்ட  மரபணு உறவில் இருந்து,புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் பொதுவாக பெண்ணின் குடும்பத்தாருடன் வாழ்ந்தார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஹரப்பா,மொஹெஞ்சதாரோ பகுதிகளில் உள்ள மனித புதை குழிகளை[கல்லறைகளை] ஆய்வு செய்த பொழுது,கல்யாணமான ஆண், தனது மனைவியின் குடும்பத்தாருடன் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. அங்கு கண்டு பிடிக்கப்பட்ட அதிகமான பெண் சிலைகளின் உடை
Earth Goddess
அரைகுறையாகச் சித்ததரிக்கப் பட்டிருந்த போதிலும், எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதி யான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம், ஒட்டியாணம் போன்ற அகன்ற இடுப்புக் கச்சையையும் பல கழுத்து மாலைகளையும் அணிந்துள்ளன. அத்துடன், விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின் மேல் புகை படிந்து இருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப்பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப்படலம் சொல்கிறது. நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை யுடைய  ராயிருந்தனர் என்பது விந்தையான தன்று.பண்டைய நாகரிகம் நிலவிய எகிப்து,சுமேரியா முதலிய இடங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின என்பது குறிப்படத்தக்கது. எந்த ஒரு சமுதாயத்திலும் தலைமை தெய்வம் பெண்ணாக இருந்தால் அங்கு பெண்கள் கட்டாயம் நாளாந்த வாழ்வில் மதிப் பளிக்கப் படுவார்கள்.அத்துடன் சர் ஜான் மார்ஷல் சிந்து வெளி சமயத்தில் பெண் இயல்புகள் ஆண் இயல்புகளை விட உயர இல்லாவிட்டாலும் குறைந்தது சமமாக இருந்து உள்ளது என
Tree worship
குறிப்பிட்டு உள்ளார்.சில சிலைகள் தாய் தனது முலையிலிருந்து குழந்தைக்கு பாலூட்டுவதை காட்டு கிறது.மற்றும் இன்னும் ஒரு சிலையில் பெண்ணின் கருப்பையில் இருந்து [வயிற்றிலிருந்து] செடி ஒன்று வளர்ந்திருக்கிறது. இது அதிகமாக பூமா தேவியை குறிக்கலாம்.மேலும் எண்ணற்ற சுடுமண் தாய் தெய்வ சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டதால்,அவை அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபட்டு இருக்கலாம்.எனவே இந்த சிந்து வெளி சமூகம் ஒரு தாய் வழி சமூகமாக கட் டாயம் இருந்து இருக்கும்.இயற்கையின் உற்பத்தி /இனப்பெருக்க ஆற்றலையும் தாய் தெய்வத்தையும்  மையமாக வைத்து இவர்களின் மத வழி பாடு பொதுவாக அமைந்து இருந்தது. 


சிந்து வெளி முத்திரையிலும் மற்றும் மடபண்டங்களிலும் மிருகங்களின் உருவங்கள் அதிகமாக காணப்படுவதில் இருந்து,ஹரப்பா நாகரிகம் மும்மரமாக நகரமயமாக்களில் ஈடுபட்டிருந்தாலும்,அவர்கள் இயற்கைக்கும் சுற்றாடலிற்கும்,தமது பண்பாட்டில், நாகரிகத்தில் முக்கிய இடம் கொடுத்தார்கள் என்பது அறிய முடிகிறது.அத்துடன் அங்கு மிருக வழிபாடும் இருந்திருக்கலாம்? எனவே அவர்களின் மத நம்பிக்கையும் வழி பாடும் அதை ஓத்தே இருக்கும் என நாம் ஊகிக்கலாம்.சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே, தலையில் கொம்புகளுடன்[நிற்கும் மூல-சிவாக இருக்கலாம் ?]  

Animal seals
ஆடைகளின்றி,நிர்வாணமாக  தெய்வமொன்று காணப்படுகின்றது.நீண்ட கூந்தலும்  இரு கைகளில் காப்புகளும் [பெண் தெய்வமாக இருக்கலாம்?] காணப்படுகின்றன.அத் தெய்வம் தனக்கு முன் முழங்காளில் நிற்கும்[அல்லது அமர்ந்து இருக்கும்] அடியாரை [அல்லது மத குருவை] உற்றுப் பார்க்கிறது.மேலும் பல மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன.இது [அரச]மர வழிபாடை [அல்லது சிவ/சக்தி வழிபாடை]  குறிக்கலாம்.பெண் சிலைகளுடன் ஒப்பிடும் போது ஆண் சிலைகள் மிக மிக குறைவாகவே அங்கு காணப்படுகிறது. கூடுதலான ஆண் சிலைகள் அம்மணமாக இருக்கின்ற படியால், அவர்களின் அணிகலன்களைப் பற்றி சிறிதளவே கூறக்கூடியதாக உள்ளது. ஆண் சிலைகள் சம்பந்தப் பட்ட  சடங்குகள் பொதுவாக  அவர்களின் வலிமை மற்றும் வீரியத்துடன் [ஆண்மையுடன் ] தொடர்புடையதாக இருப்பதால்,அப்படி நிர்வாணமாக வடிவமைக் கப்பட்டு இருக்கலாம்.

Tantric Sculptures on Temples
எனவே,பண்டைய ஹரப்பா,மொஹெஞ்சதாரோ நகரங்களை உள்ளடக்கிய  சிந்து வெளி நாகரிகத்தின் ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தாந்த்ரீக[தாந்திர/தந்த்ரா]  முறையாக இருந்தன.இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது.இது ஒருவர் தனது எண்ணங்களையும்   உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும்.ஆகவே ஆரியர்களின்  அகநிலை உணர்வுக்குப் புறம்பான,வெளிப்புற சடங்கில் இருந்து மாறுபட்டது.தாந்த்ரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னோர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். தாந்த்ரீக முறையில் உடம்பு,மனது,உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன் படுத்துவ தாகும்.காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும்பொழுது நமது கவனச் சிதறல் குறைக்கப்படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. இதுதான் தாந்த்ரீக முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தாந்த்ரீக முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவதுதான்  மற்ற வழிபாட்டு முறைகள் ஆகும். தாந்த்ரீக முறை,தியானம், யோகா இவைகளின்  ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற்படுவது.தாந்த்ரீக முறையின் படி,போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம்.எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி
குறைபாடான, நிறைவுறாததில் இருந்து  பூரணமாக்க, முழுநிறைவாக்க முயலும் முயற்சி,பிரயத்தனமே தாந்த்ரீக முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும்.தாந்த்ரீகம் என்ற வார்த்தைக்கு, காமம் என்ற அர்த்தம் தங்கிவிட்டது. ஆனால் தாந்த்ரீகத்திற்கும் காமத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தாந்த்ரீகம் என்பது ஒரு வழிமுறை – நமக்கு வேண்டியதை உருவாக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம். 

ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல் பொருட்கள் (கல்வெட்டுகள்,மனித மிச்சங்கள் ) மற்றொன்று இலக்கியம்.சிந்து வெளியில் எந்தவொரு இலக்கியமும் இதுவரை கண்டு பிடிக்காதலால்,கல்வெட்டுகள்,சிறு உருவச் சிலைகளை தவிர இடுகாடையும் நாம் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எந்தவொரு நாகரிகத்திலும், அடக்கம் செய்யும் முறையும் அதனுடன் தொடர் புடைய சடங்குகளும்,அவர்கள் பின்பற்றும் சமயத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.எனினும் ஹரப்பான் மக்கள்,எகிப்தியரின் பிரமிடுகள் போன்ற எந்த வொரு  நினைவுச் சின்னத்தையோ அல்லது  மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகர் அரச கல்லறை சமாதி போல ஒன்றையோ கட்டவில்லை. இது ஒரு குறை பாடாக இருக்கிறது. என்றாலும் அவர்களின் புதை குழியை ஆய்வு செய்யும் பொழுது பல முக்கிய தக வல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக,இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில்,வடக்கு தெற்காக வெட்டப் பட்ட  சவக்
குழிக்குள்,தலைகளை வடக்குப் பக்கமாகவும் கால்களை தெற்குப் பக்கமாகவும்  கிடத்தி புதைத்தார்கள்.வட மொழியில் எழுதிய வாஸ்து சாஸ்திரத்தின் படி,ஒருவர் படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் என்றுமே தலை வைத்து உறங்கக் கூடாது, இறந்த  உடலின் தலை மட்டுமே வட திசையில் வைக்கவேண்டும் என்கிறது. ஆனால் சிந்து வெளி வேத காலத்திற்கு முற் பட்டது.வாஸ்து சாஸ்திரம் வாய்வழியாக இருந்து பின்னர் வட மொழியில் எழுதப் பட்டது.ஆகவே சிந்து வெளியை வென்ற ஆரியர் ,அவர்களின் இறந்தவரின் அடக்கம் முறையை கட் டாயம் பார்த்திருப்பார்கள். ஆகவே,சிந்து வெளியில் இருந்து இந்த யோசனையை கடன் வாங்கி இருப்பார்கள் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். கடைச்சங்க காலத்தை சேர்ந்த  பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை உறங்கும் முறையை 
"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி."
என்று பாடுகிறது. அதாவது படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும் என்கிறது. ஹரப்பா,கலிபங்கன்,ராகிகர்ஹி,லோதல்,ரோஜ்டி,ரோபர்[Harappa,Kalibangan,Rakhigarhi,Lothal,Rojdi,and Ropar] போன்ற இடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போது,சிந்து வெளி  மக்கள் இறந்தவரை,அவர் பாவித்த, அவருக்கு சொந்தமான பொருட்களுடனும் மற்றும் அணிகலன் களுடனும் அடக்கம் செய்தார்கள் என்பது தெரிய வந்தது. பொதுவாக 0 தொடக்கம் 40 வரையான மட்பாண்டப் பொருட்கள் [pottery vessels] அங்கு காணப் பட்டன.இது,சிந்து வெளி மக்கள் மறு பிறவியில் நம்பிக்கை கொண்டிருந் தார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது.மேலும் நகரங்கள் செங்கற் களால் கட் டப்பட்டு ,அங்கு சகலரும் பாவிக்கக் கூடிய பொது குளியல் இடங்களை கொண்டிருந்தன.நேர்த்தியாக,நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த குளியல் ஏற்பாடு,குளிப்பது மூலம் சுத்தஞ்செய்தல்,அவர்களின் பண்பாட்டில்,ஆகவே மதத்தில் ஒரு அங்கமாக இருந்ததை காட்டு கிறது.இந்த  சிந்து வெளி மக்களின் சுத்தரித்தல் முறை பின்னர் சைவ சமயத்திலும் இந்து சமயத்திலும் உள்வாங்கப் பட்டன.ஆகவே ஆலயத்துடன் அமைந்த செயற்கை தாமரை குளங்கள் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.அந்தக் காலத்தில்,தாமரை, அல்லி போன்ற மலர்களை கோயில் குளத்தில் வளர்த்து,கோயிலில் பூசை செய்தார்கள்.அந்தக் குளத்தில்
குளித்து,பின்னர் சுத்தமான குளத்து நீரை எடுத்து வந்து ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்தார்கள்."சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்".இது அவர்களின் பண்பாடாக இருந்தது.பெண் தெய்வத்துடன் சம்பந்தப் பட்ட  தேவதாசிகளுடன் சடங்கு முறை மூலம் ஒன்று சேரும் முன்பு,ஒரு வித சடங்கு குளியல், மொஹெஞ்சதாரோவில் நடை பெற்றிருக்கலாம் என சிலர் முன்மொழிகின்றனர்.போதுமான நூல்கள்,இலக்கியங்கள் அங்கு இல்லாததால், ஹரப்பான் சமய நம்பிக்கைகளை திட் டமாக கூற முடியாமல் இருக்கிறது.சிந்து வெளி நாகரிகம் கி மு 1700 அளவில் முற்றாக அழிந்தாலும் சில ஹரப்பான் தெய்வங்கள் அங்கிருந்து தப்பி பிழைத்து பின் சைவ சமயத்திலும்/இந்து சமயத்திலும் இடம் பிடித்துள்ளார்கள்.
comparison of Ahmuvan with Coin of the Yaudheyas and palani 

சிந்து சம வெளி இடுபாடுகளுக்கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவா லிங்கத்தின் முந்தை வடிவம் ஆகியவற்றுடன் இன்னும் ஒரு முக்கியமான தெய்வம் பொறிக்கப்பட்ட  முத்திரையும் கண்டு எடுத்தார்கள்.சொற்குறியிடு 'ஆ','மு','வான்' இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது.ஆகவே இந்த தெய்வத்தை ஆமுவான் என பரிந்துரைத்தார்கள்.சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு  நீண்ட மனிதவுரு கொடுக்கப் பட் டுள்ளது.அதன் தலையில் மூன்று கொம்பு உள்ளது.மேலும் இந்த கடவுள்"ஆமுவான்/Ahmuvan " முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார். சில சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை அதன் முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத் தையும்,அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும்,மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார்.பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை[matriarchal] நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர்கள் காட்டும் உண்மையாகும்.அங்கு அன்னைத் தெய்வமே முழு முதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் யார்?எந்த மொழி பேசினார்கள் என்பதில் ஒருமித்த கருத்து இன்னும் இல்லை.அது மட்டும் அல்ல எல்லோரும் ஏற்றுக் கொள்ளுமாறு இன்னும் சிந்துவெளி எழுத்துக்களின் வரி வடிவங்கள் இன்றுவரை வாசிக்கப் பட வில்லை. எனினும் பிற்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள்,எமக்கு இப்பொழுது தெளிவான விபரங்களை தருகின்றன.உதாரணமாக, சுமேரியர்களின் வரலாற்றுக் குறிப்புகளில், சிந்து வெளி மக்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. “மிலேக்கா” நாட்டு வணிகர், மொழி பெயர்ப்பாளர் பற்றிய சுமேரியர்களின் குறிப்புகள், சிந்துவெளிக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது.அப்படியானால், சிந்துவெளியில் இருந்த நாட்டிற்கு, மிலேக்கா அல்லது அது மாதிரியான பெயர் இருந்திருக்க வேண்டும்.மேலும் ஆரியர்களின் ரிக் வேதம், “மிலேச்சர்கள்” என்று ஒரு இன மக்களை பெயர் சொல்லி அழைக்கின்றது. பிற்காலத்தில் ஒரு சாதியாக மாறி விட்ட மிலேச்சர்கள், வேத காலத்தில் ஆரிய தேசத்திற்கு வெளியே இருந்த அந்நியர்களைக் குறித்தது. இது, கிரேக்கர்கள் தமது தேசத்திற்கு வெளியே இருந்த அந்நிய இனங்களை, “பார்பாரியன்கள்” (Barbarian) என்று அழைத்ததைப் போன்றது.ஆகவே மேற்குறிப்பிட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.அவர்கள் பேசிய மொழி பழைய தமிழாக இருக்கலாம்?மேலும்  கி மு 2000 ஆண்டு அளவில் ஆரியர்களின் இந்தியா வருகைக்கு பின்  அவர்களின்  முன்னேறிய இராணுவ தொழில்நுட்பத்தால் தெற்கிற்கு  இவர்கள் தள்ளப் பட்டார்கள் எனவும் அறிய முடிகிறது.எனவே சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு,சைவ சமயத்தின் வரலாற்றை கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது.சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரை தோண்டி ஆய்வு செய்தார்.ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும்.பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான,டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [ History of Hinduism] என்ற நூலில் சைவ சமயத்தின் ஆரம்பம்,நாம் இது வரை ஏற்றுக் கொண்டதை விட மேலும் சில நூற் றாண்டுகள் கூடுதலாக இருக்கலாம். ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு அடையாள படுத்தப் படவில்லை.ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார்.இவை எல்லாம் எமக்கு காட்டுவது,இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும். இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது.இது சைவ சமயத்தை உலகின் மிகப் பழமையான மதமாக்கிறது!


[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


    பகுதி 20 தொடரும்.....                                              



0 comments:

Post a Comment