என் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.

நீண்ட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் வருவதால் வாசகர்களுக்காக ஒரு முன் கதைச் சுருக்கம் ஒன்றைத் தருகின்றேன்.
நிலா தகப்பன் இல்லாத தன் இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேலை தேடி அலைகிறாள் ,அப்போது தன் போராட்ட கால வாழ்வில் சந்தித்த தன் தோழி மதியை சந்திக்கிறாள் .இருவரும் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி தங்கள் துயர வாழ்க்கை பற்றி உரையாட ,மதியின் கணவன் புனர்வாழ்வு பெற்று மீண்டும் இராணுவத்தினரால் கைது செய்யப்படட செய்தியை அறிந்த நிலா தமிழனின் தலைவிதியை எண்ணி வேதனையடைந்தாள்.அங்கே டீ கடையை நடாத்தி வரும் ரவியின் சோகமும் ,பின் அவர் காலையடி இணைய உதவும் கரங்களின் உதவியுடன் தேநீர்கடையை நாடாத்தி வருவதையும் அறிந்து கொள்கின்றனர் .நிலாவின் கஷடங்களை கடைக்காரர் சொல்ல அறிந்து கொண்ட மதி நிலாவின் கடந்த காலத்தை எண்ணிப்பார்க்கிறாள் .நிலா சிங்களவர்களால் கொலை செய்யப்பட்ட  தன் தந்தைக்காக சிங்களத்தை பழி வாங்க போராடடத்தில்  தன்னை இணைத்துக் கொண்டவள் .ரவியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது அங்கே விநோதன் என்ற போராளியின் மனைவியும் இவர்களை சந்தித்து தன் துயரங்களை கூறுகின்றாள் .ஒரு காலையும் கையையும் இழந்த தன் கணவனின் நிலையறிந்து மாடு ஒன்றை உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் பெற்று ஓரளவு சீவியத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது ,யார் இந்த மாடு தந்தவை என்று கேட்டு அந்த புலம் பெயர் புலியை விசாரிக்க என்று சொல்லி ,அவரையும் மாட்டையும் கொண்டு
போட்டினம் என்று சொல்ல, டீ கடைக்காரர் ரவியும் தன் கடந்த கால சோகத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ........................
டீ கடைக்காரரின் நினைவுகள் மெல்ல தன் இளமைக் காலத்தை  நோக்கித்  திரும்பின .
தென் இலங்கையின் தலை நகரம் அன்றும் வழமை போல கதிரவனும்
காட்சி கொடுக்க,கண்  விழித்துக்  கொண்ட அப்பா "தம்பி ரவி (டீ கடைக்காரன்) ; இண்டைக்கு  நீ போய் கடையைத்  திற, நான் ஒருக்கா தம்பிதுரையை பார்க்க வேணும், அவனோட
காசு அலுவலைப் பற்றி  கதைச்சுப் போட்டு,  அப்படியே கடைக்கு வரேன்" என்று கூறி
விட்டு தனது காரில் ஏறிப் புறப்பட்டார் .ரவியும்
அம்மா கொடுத்த  காலை தேநீரை  அருந்திய வண்ணம்
வானொலியில் போய் கொண்டு இருந்த செய்தியை  கேட்டுக் கொண்டிருந்தான். புலிகள் யாழ்ப்பாணத்தில் ஆமி மீது தாக்குதல் நடாத்தியதில்
பலர் கொல்லப்படத்தை அறிந்த சிங்களவர்கள், தென் இலங்கைத் தமிழர் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள்  என்று செய்தியைக் கேட்டு வேதனை  அடைந்தான் .
"அம்மா அம்மா செய்தியைக் கேட்டிடீங்களோ ,இஞ்சை  கலவரம் நடக்குதாம், அப்பாவும்  அந்தப்  பக்கம் தான் போனவர், என்ன நடக்குமோ தெரியேல்லை" என்று  கூறவும் அம்மா "ஐயோ என்ரை கடவுளே அவருக்கு ஒன்றும் நடக்கக் கூடாது , தம்பி அவருடைய தொலைபேசிக்கு ஒருக்கா  எடுத்து பார்" என்று கூறவும் ரவியும் அழைப்பை எடுத்தான் . மறுமுனையில் சிங்களத்தில் ஒருவன் " இங்கு கலவரம் நடக்குது, தம்பி இங்க வராதீங்க உங்கட அப்பாவையும்  அடிச்சே கொண்டு போட்டாங்க " என்று கூறவும்
"அப்பா அப்பா, அம்மா சிங்களவர் அப்பாவை அடித்து கொன்று விட்டார்களாம்"என்று   கத்தவும் ,அதே நேரம் ,அருகில் குடி இருந்த சிங்களக் குடும்பம்  ஒன்று அவர்களின் வீடடை நோக்கி ஓடி வந்து "தம்பி தம்பி வாங்கோ வாங்கோ நீங்களும் அம்மாவும் எங்கட வீட்டில் வந்து இருங்கோ, குண்டர்கள் தமிழர் வீடுகளைத் தேடிப் போய் பார்த்து தாக்கி கொண்டு வருகிறார்கள்"  என்று கூறவும் ரவியின்  அம்மா "தம்பி நீ போ நான் வருகிறேன், முக்கிய சாமான்களை  எடுத்து கொண்டு வாறன்" என்று கூற  "அம்மா  நீங்களும்  கெதியாய் வாங்கோ " என்று கூறி விட்டு சிங்கள குடும்பத்தினருடன் அவர்களின்  வீட்டுக்குள் நுழைந்த அதே
நேரம் , சிங்களக் காடையர்கள்  ரவி வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று தாயை தாக்கி விட்டு, ரவி இருக்கும் சிங்கள குடும்பத்தினரின்  வீட்டுக்கு வந்து நீ தமிழா என்று கேட்கவும் ,இல்லை இல்லை நாங்கள் ஓரிச்சினல் சிங்களவர் , என்னுடைய அப்பாவும்  போலீசில்  இருந்தவர் என்று படத்தை காட்டவும், நகர்ந்து பக்கத்தில் வீட்டுக் கதவைத் தட்ட தொடங்கினர் . ரவியும் அம்மாவுக்கு என்ன நடந்து இருக்கும் என ஏங்கியவாறு அழத் தொடங்கினான். அதற்கு  "அம்மாவுக்கு  ஒன்றும் நடந்து இருக்காது, இவங்கள் கொங்சம் அங்காலை போன பிறகு போய் பார்ப்போம் நீ பொறுமையாக இரு" என்று கூறவும் ஏக்கத்துடன் மனச்சஞ்சலத்துடனும்  இருந்தான்.
ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர்  வெளியில் எட்டி பார்த்து விட்டு எல்லாரும் போட்டாங்கள் என்று சொல்லவும்,
ரவி விழுந்தடித்துக் கொண்டு சென்று பார்த்தால்,   அங்கே அவன் தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து, ஐந்தும்  கெட்டு அறிவும்  கெட்டு சுய நினைவை இழந்து தடுமாறினான்.
உறவுகளுக்கு கூட  தகவல் கொடுக்க முடியாமல்  , தகப்பனின் இறந்த உடலையும் எடுக்க முடியாமால் போக அனாதையாக  தாய் தந்தையின் கிரியைகளை சிங்கள உறவுகளின் துணையோடு   செய்து முடித்தான்.
அதன் பின்னர் நிலைமை சிறிது மாறி இயல்பு
நிலைமைக்கு வர அப்பாவின் சொந்தக்  கடைக்குப்  போய் பார்ப்போம் என்று கடை இருந்த இடத்தை நோக்கி சென்றான் .
அங்கே கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கடை உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அவனுக்கு வெறுப்பு வர, மௌனத்தோடு வீடு நோக்கித் திரும்பினான் . ஒரு முடிவு எடுத்தபடி  கடையை விற்று  விட்டு யாழ் சென்று வாழ்வோம் என்று நினைத்தபடி  கடையை விற்பதற்கான   அலுவல் பார்க்கும் பொழுது அங்கேயும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது  . தன் தந்தையாருக்கு கடையை விற்ற சிங்களவனோ அந்தக் கடை தனக்கே சொந்தமானதெனக் கூற,  விசனம் அடைந்த ரவி தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியோடு சென்று இந்த விடயம் பற்றி கூறி தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான்.   அவனும் ரவிக்கு தன்னால் ஒன்றும்  செய்ய முடியாது,அவன் அரசியல்வாதியின் ஆதரவு உள்ளவன்  எனக் கூறி கையை விரிக்க ,தான் வாழ்ந்த வாடகை வீடடையும் கை விட்டு வன்னியை  நோக்கி நகர்ந்தான் .அங்கே   தனது மாமாவின் பெண்   மாதவியுடன்  காதல் வரவும், இருவரின்  மனதையும் புரிந்து கொண்ட உறவினர்கள் உதவியுடன் திருமணம் புரிந்து ,  ஒரு புதிய வாழ்வை வாழத் தொடங்கினான்.

ஆக்கம் கவி நிலவன் 
இனம் சுமந்த வலிகள் பாகம் 5 தொடரும் .

[தொடர் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன]

0 comments:

Post a Comment