அனுபவம் ஒரு பாடம்







புவி வெப்பமயமாதல்:


 தண்ணீர் பிரச்சனையும் 
வியக்க வைக்கும் மாற்று வீடுகளும்

புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள்.
எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது.

சிமெண்ட் பயன்பாடு
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.

முதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான்.

பிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல்.

குறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

செங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒவ்வொரு அண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.

அப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

உலகெங்கும் சிமெண்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மாற்று வீடுகள்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், என்பவர் "வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனை கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்கிறார்.

மூங்கில் வீடுகளை பரவலாக்கும் முயற்சியில் பியூஷ் ஈடுபட்டு வருகிறார்.

எதாவது காட்டில் அல்லது பண்ணைவீட்டில் மட்டுமே இதுபோன்ற வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொது கருத்து நிலவுகிறது

இதனை மறுக்கிறார் மூங்கில் வீடுகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்து வரும் கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ்.

'சாத்தியமே'
"வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்" என்கிறார் சிவராஜ்.

மூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வருகிறார் சிவராஜ். இதன் மூலம் மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.

சிவராஜ், "மூங்கில் வீடுகள் கட்டும் போது, அந்த வீட்டை எப்படி வடிவமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன, நாம் இருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை. அதில் எந்த சந்தேகமும், அச்சமும் வேண்டாம்" என்கிறார்.
தேசிய மூங்கில் இயக்கம் மூலம் அரசும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறுகிறார் அவர்.

'நீடித்து உழைக்கக் கூடியவை'
செங்கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு வலிமையாக இருக்குமோ அதே அளவுக்கு வலிமையானவை இந்த மூங்கில் வீடுகள் என்கிறார் கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ்.
அவர் தன்னுடைய வீட்டையே மூங்கில்களை கொண்டுதான் கட்டி இருக்கிறார்.

அவர், " இந்த வீடு கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. செங்கற்களை பெரும்பாலும் குறைத்து ஸ்டீல் கம்பிக்கு பதிலாக மூங்கில் மற்றும் பாக்கு மரத்தைதான் பயன்படுத்தி இருக்கிறேன். சிமெண்டையும் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளேன்" என்கிறார்.

'தண்ணீர் பிரச்சனையும், வீடும்'
நிலத்திற்கு ஏற்ற வீடு என்பது அந்த பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு கட்டுவதுதான் என்கிறார் தருமபுரியை சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.

களிமண், அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டி இருக்கும் சுரேஷ், "காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும் போது இயற்கையே தேவையான வெளிச்சத்தை தருகிறது. அதனை பயன்படுத்தி கொண்டாலே மின்சார பயன்பாட்டை தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால் நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்" என்கிறார்.


"தன் வீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் 55 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். அண்மையில் பெய்த மழையில் அது நிறைந்துவிட்டது. அடுத்த 4 மாத கால தண்ணீர் தேவையை இதனை கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்" என்கிறார் சுரேஷ்

தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படும் இந்த சூழலில் கான்கிரீட் வீடுகள் அதற்காக உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம், செங்கற்களுக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது இயற்கை. பருவமழை பொய்ப்பதற்கு நம் வீடுகளும் ஒரு காரணம் என்று கூறுகிறார் இவர்.

மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்

புத்தர்- பார்ப்பனன் வாதம்







வர்ணாஸ்ரமத்தை’யும் பிறப்பின் அடிப்படையில் ‘பிராமணன்’ உயர்ந்தவன் என்பதையும் புத்தர் ஏற்க மறுத்தார். அவருடைய சங்கத்தில் துப்புரவு தொழிலாளி, சவரத் தொழிலாளிகள், உயர் பொறுப்பில் இருந்ததை மறக்கமுடியாது.

அநாதபிண்டிகர் என்பவர் ஆசிரமத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலாயனன் என்ற பார்ப்பன இளைஞன், புத்தருடன் வாதம் செய்கிறான். அந்த விவாதம் மிகவும் சுவையானது:

ஆசுவலாயனன் : கவுதமரே! பிராமண வருணமே உயர்ந்தது. மற்ற வருணங்கள் தாழ்ந்தவை. பிராமண வருணம் வெண்மை யானது. மற்றவை கருப்பானவை. பிராமணர் களுக்கே முக்தி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அல்ல. பிராமணர்கள் பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து உண்டானவர்கள். அவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள். எனவே, அவர்கள்தாம் அவனுடைய செல்வத்துக்கு உரிமையானவர்கள் என்று அந்தணர்கள் கூறுகிறார்களே, இதைப் பற்றி உங்கள் கருத்து யாது?

புத்தர் : ஆசுவலாயனா! அந்தணர்களின் மனைவியர் பூப்படைகிறார்கள், கருத்தரிக் கிறார்கள், மகவை ஈனுகிறார்கள், குழந்தை களுக்குப் பாலூட்டுகிறார்கள். இப்படியாக அந்தணரின் சந்ததியர் பிற வருணத்தவரைப் போலவே தாய் வயிற்றிலிருந்து பிறந்திருக்க, பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து தோன்றி யதாகக் கூறிக் கொள்வது வியப்பாக இல்லையா?

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், அந்தணர்கள் தாங்கள் பிரம்ம தேவனுடைய செல்வத்துக்கு உரியவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்.

புத்தர்: ஆசுவலாயனா! யவனம், காம் போஜம் முதலிய எல்லை நாடுகளில் ஆரியர், தாசர் என்ற இரண்டே வருணங்கள் உண்டு. சில சமயம் ஆரியன் தாசனாவான், தாசன் ஆரியனாவான். இதை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

ஆசுவலாயனன்: ஆம், கவுதமரே! கேள்விப் பட்டிருக்கிறேன்.

புத்தர் : அப்படியிருக்கையில், பிரம்மதேவன் அந்தணர்களை முகத்திலிருந்து உண்டாக் கினான், அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?”

அக்கினியில் வேறுபாடு உண்டோ?

தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொண்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தை ஆதாரமாகக் கொண்டே பிராமணர்கள் பிரம்மனின் முகத்திலிருந்து உதித்தவர்கள் எனும் நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது. இதற்கு எதிராக வாழ்வின் யதார்த்தங்களை ஆதாரமாக வைத்தார் புத்தர். பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள் என்றால் அந்த நம்பிக்கை இந்த தேசத்தில் மட்டும் நிலவுவது ஏன்? பக்கத்து நாடுகளில் அது இல்லாதது ஏன்? இதிலிருந்தே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முறையற்றது என்பது தெளிவாகிறது என்பதே புத்தரின் வாதம். அப்படியும் இதை ஏற்கவில்லை. ஆசுவலாயனன் அவன் சொன்னதையே சொன்னான்.

ஆசுவலாயனன் : கவுதமரே! தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அந்தணர்கள் தங்களை உயர்வாகவும் மற்ற வருணத்தவரைத் தாழ்வாகவும் கருதுகிறார்கள் என்பது உண்மை.

புத்தர் : ஆசுவலாயனா! அரசன் ஒருவன் அந்தணர்களையும் க்ஷத்திரியர்களையும் பார்த்து ‘சால மரம் அல்லது சந்தன மரம் போன்ற உயர்ந்த மரங்களைக் கடைக் கோலாகக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றார். புலையர், வேடர் உள்ளிட்டவர்களைப் பார்த்து, ‘நாய்க்கும் பன்றிக்கும் தீனி வைக்கும் பாண்டத்திலும், சாயம் தோய்க்கும் பாண்டத் திலும் ஆமணக்கைத் தீக்கடைக் கோலாகக் கொண்டு தீயை உண்டாக்குங்கள்’ என்றார். ஆசுவலாயனா! அப்போது அந்தணர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி மட்டுமே ஒளிரும், புலையர் முதலியோர் உண்டாக்கிய அக்கினி ஒளிராது என்று உனக்குத் தோன்றுகிறதா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அக்கினி ஒரே மாதிரிதான் ஒளிரும். எங்கும் ஒரே மாதிரியாகவே அக்கினி காரியம் நடக்கும்.”

புத்தர் மகத்தான தத்துவஞானி மட்டுமல்ல, ஓர் அருமையான இலக்கியவாதியும்கூட. எளிமையான, அழகான, கச்சிதமான உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் பல இடங்களில். ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இவர் பரிணமித்ததற்கு அவருக்குள்ளிருந்த கவித்துவ ஆற்றலும் ஒரு முக்கிய காரணமாகும்.

எந்தக் கடைக்கோலில் உருவாக்கப்பட்டிருந் தாலும் தீ, தீதான். எத்தகைய மனிதர்களுக்குப் பிறந்தாலும், மனிதன், மனிதன்தான். அதில் வேறுபாடு இருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. இதை இன்னும் பட்டவர்த்தனமாகச் சொன்னார் புத்தர்.

புத்தர் : ஒரு க்ஷத்திரியப் பிள்ளை பிராமணப் பெண்ணை மணந்து கொண்டால், அந்தத் தொடர்பினால் அவனுக்குப் பிறக்கும் மகன் தாய் தந்தையைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா? அந்தணப் பிள்ளை ஒருவன் க்ஷத்திரியப் பெண்ணை மணந்தால், அந்தத் தொடர்பினால் பிறக்கும் மகன், தாய் தந்தையரைப் போலவே மனிதனாக இருப்பானா இல்லையா?

ஆசுவலாயனன் : இத்தகையக் கலப்பு மணத்தினால் பிறக்கும் மகன் தாய் தந்தையரைப்போல மனிதனாகவே இருப்பான். கவுதமரே! அவனை அந்தணன் என்றும் சொல்லலாம், க்ஷத்திரியன் என்றும் சொல்லலாம்.

புத்தர்: ஆனால் ஆசுவலாயனா! ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் தொடர்பு ஏற்பட்டு ஒரு குட்டி பிறந்தால் அது தாயைப்போல இருக்குமா? தகப்பனைப் போல் இருக்குமா? அதைக் குதிரை என்று சொல்ல முடியுமா? கழுதை என்று சொல்ல முடியுமா?

ஆசுவலாயனன் : கவுதமரே! அதைக் குதிரை என்றோ, கழுதை என்றோ சொல்ல முடியாது. அது மூன்றாவது இனம் ஒன்றைச் சேர்ந்த பிராணி. அதைக் கோவேறுக் கழுதை என்கிறோம். ஆனால், அந்தணருக்கும் க்ஷத்திரியருக்கும் உண்டான கலப்பினால் பிறந்த குழந்தையிடம் இத்தகைய மாறுதல் இருப்பதில்லை.”

வருண வேறுபாடு செயற்கையானது. அது இருவகை உயிரினங்களுக்கும் இடையிலான இயற்கையான வேறுபாடு அல்ல. அதனால் தான் வருணக் கலப்பால் பிறக்கும் பிள்ளை மனிதனாக இருக்கிறது. யதார்த்த உண்மை இப்படியிருக்கும்போது வருணத்தின் பேரில் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாது என்று ஆணித்தரமாக வாதிட்டார் புத்தர். இன்றைக்குக்கூட இப்படி வாதாடப் பலரும் தயங்குவார்கள். அந்த ஞானியோ 2500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அஞ்சாமல் வாதாடினார்.

இதற்குப் பிறகும் பார்ப்பனீயம் , பெளத்த சமயத்தை இந்தியாவில் தங்க விடுமா என்ன?
   ⚡⚡⚡⚡⚡

அவள் பறந்து போனாளே....




ஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும்
                மெனை மறந்தென்ன கற்றனையோ!
பேருக்கு வாழவாவெனைப்  பெற்றவளும்
                பேணி வளர்த்தெனை முறை தந்தாள்?

ஆருக்காய் வாழப் புறப்பட்டாய்?  நீயும்
               ஆக்கினை வலையினுள் வீழ்ந்துவிட்டாய்
பாருக்குள்  பங்கம் படைத்துவிட்டாய் பாரு
               துயரினைத் தேடி நீஅடைந்துவிட்டாய்!


கூறுகெட்ட மாந்தரின் தீங்குரலில் காயும்
              குளிரென்று  மாள்வேள்வியில் மாய்வதா?
சேறுகொண்டு தன்கரத்தால் யாருவாழ்வை
              சகதியாக்கிட வீணில் சச்சரவு செய்வார்?


நெஞ்சம் இலாதோர் வஞ்சகர் நெருப்பிலே
              நீறாக முன் உன்வாழ்வு மீளமலர்ந்திடவே 
தஞ்சம்  அடைந்திடுவாயென் சேயாயுனை 
              மஞ்சத்தில் தாலாட்டி மகிழ வந்திடுவாய்! 


✍செ.மனுவேந்தன் 










மனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்



உலகில் 91 வகையான உலோகங்கள் காணப்படுகின்றன.அவற்றுள் தங்கம் மனித இனத்தில் செலுத்தும் ஆதிக்கம் கொஞ்சநெஞ்சமல்ல. தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். அது ஆபரணங்களுக்கு மட்டுமல்ல முற்காலத்தில் நாணயங்களுக்கு பயன்பட்டு வந்தது. 

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.
  
அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது.

தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும்.எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
  
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது. 

 தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.
  
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

ஏன் ,திருவிழாக்களிலும் .திருமணவீடுகளிலும் மனிதரை மனிதர் சந்திக்கும்போது, உறவுகளிலிருந்து ,திருடர் வரைக்கும் அடுத்தவர் கையிலும் ,கழுத்திலும் எவ்வளவு தங்கம் தங்கியுள்ளது என்பதை வைத்தே அவர்கள் கணிக்கப்படுகிறார்கள்.


.🜚🜚🜚🜚🜚தொகுப்பு:செ.மனுவேந்தன்🜚🜚🜚🜚🜚