வாழ்வியல் சிந்தனைகள் - பகுதி:03

 

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

-ஆ. அந்தோணிசாமி

(கட்டுரையாளர்,

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசு கலைக்கல்லூரி,

சேலம் – 07)

 


விருந்தோம்பல்

 

     சங்ககால மக்கள் ஈதலையும் விருந்தோம்புதலையும் இரு கண்களாகக் கருதி அவற்றை வாழ்வில் பின்பற்றி வந்தனா். விருந்து என்பதற்குப் புதுமை என்று விளக்கமளிக்கிறது தொல்காப்பியம். முன்பின் அறியாத புதியோர்க்கு எளிய உணவாயினும் அதனைப் பகிர்ந்தளித்து உண்ணும் குணம் சங்கத்தமிழா்களிடைய மிகுந்து இருந்தது.

 

     நல்லியக்கோடன் தன்னை நாடி வந்த பாணா்களுக்குப் பரிசில் கொடுப்பது மட்டுமன்றி விருந்தோம்புதலிலும் குறைவில்லாதவன் தான் அரசனாக இருந்தபோது விருந்தளிக்கும் போது முன்னின்று செய்யக் கூடியவன்.

 

பல்வேறு அடிசில் விளங்கப் பொற்கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி .(.244-245 சிறுபாணாற்றுபடை)   

 என்னும் அடிகள் இதற்குச் சான்று.

 

     தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் விரும்பி தொடா்ந்து கடைப்பிடித்து வந்த வாழ்வியல் நிகழ்வு ஆகும். தமிழா் விருந்தினா் உண்டபின் எஞ்சிய உணவையே மகிழ்வுடன் உண்டனா். இதனை

 

விருந்து உண்டு எஞ்சிய மிச்சம் பெருந்தகை

நின்னோடு உண்டலும் புரைவது”    

என்னும் அடிகள் மூலம் அறியலாம்.

 

ஈகை

 

     ஈகை என்பது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றித் துன்புற்ற ஒருவர்க்கு அளித்தலாகும். பொருள் ஈட்டினால் மட்டுமே போதாது அதை ஈதலும் வேண்டும் அதனால்தான் புறநானூறு,

 

     செல்வத்துப் பயனே ஈதல்” (8-புறநானூறு)  என்கிறது.

 

     ஆற்றுதல் என்பது அலந்தவா்க்கு உதவுதல்” எனக் கலித்தொகை சுட்டுகிறது. தோண்டத் தோண்ட நீா் ஊறுவது போலக் கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் என்ற கருத்தும் நிலவியது. சான்றோரின் நெறியிலே வாழ்ந்தவன் ஆய் அண்டிரன் புறநானூற்றிலே அவனைப் பற்றி ஒரு செய்தி,

 

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்

அறவிலை வாணிக னாயலன் பிறகும்

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன் றவன் கைவண்மையே” 

 (134-புறநானூறு)

 

     அடுத்தவா்க்கு கொடுத்தல் என்பதை வாழ்வில் தலையாயக் கடமையாக மதித்துள்ளனா் அக்கால மக்கள். கபிலா் பாரியின் ஈகையைப் பின்வருமாறு சுட்டுவா்.

 

முந்நூறு ஊறும் பாசிலா் பெற்றனா்

யாமும் பாரியும் உளமே

குன்றும் உண்டுநீா் பாடினீா் செலினே” (110-புறநானூறு)

 

தமக்கென எதையும் சோ்த்து வைக்காது ஈகை செய்து இன்புற்று மகிழ்ந்தனா் என்று மன்னா் தம் கொடைப் பண்பினைக் குறிப்பிடுகின்றது. இதைத்தான் பின்னால் வந்த ஒரு திரைப்படக் கவிஞன்

 

     அள்ளிக் கொடுத்து

     வாழ்பவா் நெஞ்சம்

     ஆனந்தப் பூந்தோப்பு” என்றான். எனவே ஈகை வாழ்வில் நிகழ்வில் முக்கியத்தவம் பெற்றது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.

 

மேலும் தொடரும்

 

0 comments:

Post a Comment