"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 09



ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய விஞ்ஞானம், இன்று நம்பமுடியாத அறிவியல் முன்னேற்றம் அடைந்த போதிலும், சோதிடம் இன்னும் மக்களை கவரக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது என்பது ஆச்சரியமே !. சோதிடத்தின் கூற்றுக்கள் மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டு பொய் என சுட்டிக் காட்டிய போதிலும், மக்கள் தம் எதிர் காலம் பற்றி அறியும் ஆவலினால், பலர் இந்த நடைமுறையை பயனுள்ளதாக இன்னும் கருதுகின்றனர் என்பது தான் உண்மை. அது மட்டும் அல்ல, மரபணு வரிசைமுறை [genetic sequencing] மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் [powerful telescopes] போன்றவை காணப்படும் இந்த காலத்திலும் தலைமறைவாகாமால் இந்த 'வருவது காட்டல்' [divination] ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் வழக்கத்திலும் மற்றும் மக்களை கவரக் கூடியதாகவும் காணப்படுகிறது.

 

சோதிடத்தின் உண்மைத் தன்மைக்கு எந்தவித விஞ்ஞான விளக்கமும் இல்லாத போதிலும், அங்கு பல முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், அங்கு ஒரு நிலையான முடிவுகள் இல்லாத போதிலும் [no scientific backing, no consistency and no reproducibility], உண்மையில் எதிர்மறையான ஒரு தாக்கத்தை, மற்ற போலி அறிவியல் [pseudoscience] மாதிரி கொடுக்கவில்லை. ஒரு வகையில், இது ஒரு தீங்கற்ற போலி அறிவியல் ஆகும். சில வேளைகளில், இது மக்களின் மனநிலையில், ''மருத்துப்போலித் தாக்கம்" ['placebo effect'] ஒன்றால், சிறிய நேர்மறை விளைவும் [positive effect on people’s mental state] ஏற்படுத்த கூடியது. உதாரணமாக, ஒரு போலி மாத்திரையை, அந்த மாத்திரையை உட்கொள்வதால், அவரது நோய் குணமாகும் எனக் கூறி, ஒரு நோயாளிக்குக் கொடுக்கும் போது நோயாளிகள் ஏதோ ஒரு வகையில் மனநிறைவுற்று அவரிடம் உளவியல் மாற்றம் ஏற்பட்டு அது அவரின் உடலிலும் மாற்றங்களை உண்டு செய்வது அறியப்பட்டுள்ளது. அந்த நோயாளியும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவாராக இருந்து, அதனை நோய் தீர்க்கும் இயல்புடைய மாத்திரைதான் என முற்றாக நம்பும்போது, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக உணருவார். இதனைத்தான் 'மருத்துப்போலித் தாக்கம்' என்பர். இது சோதிடத்துக்கும் பொருந்தும்.

 

பல மக்கள் சோதிடத்தை விரும்புகிறார்கள். அவர்கள் தம் சாதகங்களை வாசித்து, அதன் அறிவுரையை பின்தொடரும் பொழுது, அவர்கள் தாம் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள். உண்மையில் சோதிடத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனால், மாறாக மக்கள் அதை உணரும் விதத்தில் அது தங்கி உள்ளது. இது பிரபஞ்சத்துடன் தோழமை அல்லது ஒரு நெருங்கிய உணர்வைத் தந்து உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய முன்னேற்றத்தை, மகிழ்வை கொண்டு வருவதாக உறுதியளிக்கிறது. இதனால் சோதிடம் இன்னும் பெருமையாக மக்களிடம் குடிகொண்டுள்ளது எனலாம். ஆனால் நாள் முடிவில், அது உண்மையானதல்ல. அப்பாவி மக்கள் பஞ்சமில்லாமல் நாட்டில் இருக்கும் வரை, மோசடிகள் மற்றும் ஏமாற்றுகளுக்கு அவர்கள் பலியாகத் தயாராக இருக்கும் வரை, சோதிடம் நிலைத்து இருக்கும். எனக்கு  'ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்' [There’s a sucker born every minute] என்ற பைனியசு டெய்லர் பர்னம்மின் [Phineas Taylor Barnum] புகழ்பெற்ற சொற்றொடர் தான் ஞாபகம் வருகிறது.

 

சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்களின் நிலைகளை வைத்து ஒருவரின் தலைவிதியையும் அதிர்ஷ்டத்தையும் [fate and fortune] முன் கூட்டியே அறிவிக்கும் சோதிடம், ஆரம்பத்தில் வானவியலுடன் ஒன்றாகவே பயணித்தது. உண்மையில், அன்று வானியல் விஞ்ஞானிகளும் சோதிடர்களாகவே பொதுவாக இருந்துள்ளார்கள். ஆனால், கோப்பர்நிக்கஸ், கெப்லர் மற்றும் கலிலியோ [Copernicus, Kepler and Galileo],போன்றோர்கள், சூரியனை சுற்றி தான் கிரகங்கள் வம் வருகின்றன என உணர்ந்ததும், நியூட்டன் [Newton] அவைகளின் இயக்கங்களுக்கான விளக்கத்தை கொடுத்ததும், சோதிடமும் வானவியலும் பிரிந்தன, அதன் பின் அது என்றும் இணையவில்லை.  வடிவங்கள் அளவுகள் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதையின் சாய்வுகள் போன்றவற்றில் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்தும் கிரகங்களின் தாக்கங்களான, ஒன்றுக்கு ஒன்றுடனான ஈர்ப்பு விளைவுகளில் இருந்து [their gravitational effects on one another that cause real changes in the shapes, sizes and tilts of their orbits] சோதிடம் எமது கவனத்தை திசை திருப்புகிறது. அத்துடன் சோதிடக் கணிப்புக்கள் உண்மையில் உங்களுக்கு ஒன்றுமே செய்யாது, அது பயனற்ற ஒன்றும் ஆகும் 

 

நீங்கள் சோதிடத்தில் காணும் இராசி அல்லது விண்மீன்கள் குழாமில் உள்ள நட்சத்திரங்கள், தமக்கிடையில் சில வேளைகளில் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் கூட  [thousands of light-years apart] உள்ளன. எனவே அவற்றுக் கிடையேயான தொடர்பு நியாயமற்ற தன்னிச்சையான [arbitrary] ஒன்றாகும். மேலும் உண்மையில் 13 விண்மீன்கள் குழாம் உண்டு, 12 அல்ல. 13 வதின் பெயர் ஓபியுச்சஸ் [Ophiuchus] ஆகும். புவியின் அச்சு திசை மாற்றத்தால் [Precession], இராசி அடையாளம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இராசி அடையாளத்தில் இருந்து இப்போது ஒரு அடையாளத்தால் மாறி உள்ளது [Zodiac has shifted one sign along].

 

இன்று மேலும் சில கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன, அப்படியானால் அவைகளின் தாக்கம் இருக்காதா ? அது மட்டும் அல்ல,  கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளுமான புளூட்டோ மற்ற கிரகங்கள் போல் ஒழுங்காக இராசி பாதையை பின்பற்றுவதில்லை [Pluto doesn't follow the zodiac path like the other planets i.e. it will sometimes be in front of non-zodiac constellations.]

 

சோதிட ரீதியாக கிரகங்கள் நம்மை பாதிக்கிறது என்றால், இந்த செல்வாக்கு ஏன் எம்மிடம் இருந்து கிரகங்கள் இருக்கும் தூரத்தில், அது  தங்கி இருக்கவில்லை ? மற்றது மனிதர்களை மட்டும் தான இவை பாதிக்கின்றன, ஏன் மற்ற உயிர் இனங்களை இது பாதிப்பதில்லை ?

 

பல ஆண்டுகளாக சோதிடத்தின் மேல் விமர்சனங்கள் இருந்த போதிலும், மற்றும் அறிவியல் ரீதியாக பூச்சிய சான்றுகளே இருந்த போதிலும், ஏன் மக்கள் இதில் இன்னும் நம்புகிறார்கள் என்பதற்கு உளவியலும் [psychology] ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். உதாரணமாக, தமது கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை, தமது இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் மூலம் ஒன்றாக இணைக்க மனிதர்கள் தொடர்ந்து எதாவது ஒரு பின்னணிகளை தேடுகிறார்கள் [Human beings constantly seek narratives to help weave their past, present, and future together]. இங்குதான் சோதிடம் வந்து, அதற்கான மிக தெளிவான விளக்கம் ஒன்றை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்களை நேரடியாக பாதிக்காதவரை அது சரியோ பிழையோ அவர்களுக்கு முக்கியம் இல்லை. அவர்களுக்கு தேவையானது ஒரு உந்துதலும் ஒரு ஆறுதலுமாகும்.  

 

"கோழையும், முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ, ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான்" என்று விவேகானந்தர் ஒரு முறை கூறியது ஞாபகம் வருகிறது.

 

வேத சோதிட சாத்திரம் கோள்கள் புவியைச் சுற்றி வருகிறது என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டது. ஆனால் இன்று கோள்கள் புவியை அல்ல புவி உட்பட எல்லாக் கோள்களும் ஞாயிறைச் சுற்றி வருகின்றன என் அறிகிறோம். மேலும் வேத சோதிடர்களுக்கு புவி ஒரு கோள் என்பதோ நிலா புவியின் துணைக் கோள் என்பதோ அல்லது அது புவியைச் சுற்றி வருகிறது என்பதோ தெரிந்திருக்கவில்லை. சாதகக் கணிப்பில் புவி முற்றாக விடுபட்டதுடன் அதன் துணைக் கோளான சந்திரனுக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது. வேத  சோதிடர்களுக்கு கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை பற்றியோ அவை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது பற்றியோ தெரிந்திருக்கவில்லை. உதாரணமாக, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ [uranus, neptune, pluto] பற்றி அவர்கள் தெரிந்திருக்கவில்லை. இவைபோன்று பல எடுத்துக்காட்டுகளை நாம் கூறலாம். எனவே வேத சோதிட சாத்திரத்தின் அடிப்படையான புவி மையக் கோட்பாடும் மற்றவையும் பிழை என்பதால் அதன் நம்பகத்தன்மை சிதைந்து விட்டது அல்லது அதன் முடிவுகளும் பிழை என்பது வெள்ளிடமலை ஆகிவிட்டது எனலாம்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:10 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 10

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01: 


2 comments:

  1. சந்திரகாசன்Friday, June 25, 2021

    எங்களுடைய பூமியும் ஒரு கிரகம்தான். அது ஒரு கிரகமாக சாத்திரத்தில் ஏற்கப்படவில்லை. எங்கோ தூரத்தில் இருக்கும் கிரகங்கள், சந்திரன், வெள்ளியை (சூரியனை) விட நம் பூமியால்தான் கூடிய தாக்கம் ஏற்படும்.

    ReplyDelete
  2. மனுவேந்தன்,செSunday, June 27, 2021

    சோதிடர்களின் கூற்றின்படி,கிரகங்களின் தாக்கம் உண்டெனில் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வாழும் நமக்கு எனய கிரகங்களைவிட பூமியால் அதிக தாக்கம் இருக்கவேண்டும். பூமியினை கருத்தில் சோதிடர்கள் எடுக்க தவறியது சோதிடத்தின் ஏமாற்றுத்தனத்தின் உச்சக்கட்டம் எனலாம்

    ReplyDelete