முதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01

மனித பார்வை [Human vision]

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம்.

 

"பறவையை கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினை கண்டான்

எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்"

 

என்கிறார் கவியரசு கண்ணதாசன். வானில் சிறகடிக்கும் பறவையை போல தானும் பறக்க வேண்டும் என்ற அவாவால், பல முயற்சிகளை மேற்கொண்டு, படிப்படியாக விமானம் உருப்பெற்றது என்பது வரலாறு. அது போலவே, மனிதன், எப்படி எம் கண் தொழிற்படுகிறது என கண்டு,  அதை மையமாக வைத்து, எல்லா வகையான நிழற்படக் கருவி [கேமரா] மற்றும் அது போன்ற பல சாதனங்களை படைத்தான்.

 

கண் உண்மையில் மிகவும் உணர்திறன் கொண்ட மற்றும் மென்மையான உறுப்பு [most sensitive and delicate organ] ஆகும். இது உலகத்தை காணவும் மற்றும் எமது மூளை பெரும் செய்திகளில், கிட்ட தட்ட  4/5 பகுதிகளுக்கு பொறுப்பாக உள்ளது. அதனால் தான் மற்ற புலன்களிலும் விட, இது முதன்மை பெறுகிறது எனலாம். உதாரணமாக இருட்டில் இருந்து கொண்டு ஒரு பூட்டை திறந்து பாருங்கள். அப்போது தெரியும் பார்வையின் அவசியம். எனவே ஐந்து புலன்களிலும் பார்வை மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே பார்வை எப்படி தொழிற்படுகிறது என சுருக்கமாக கூறின்-  'நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது எனலாம்.

 

நாம் இதுவரை கூறியதில் இருந்து, பார்வை என்ற புலன் உணர்ச்சி கண்ணின் வழியாக உண்டாகக் காரணி ஒளி ஆகும். ஆகவே ஒளியின் தன்மைகள், பண்புகள், போன்றவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

 

ஒளி ஒரு வெற்றிடத்தினூடாகவும் அல்லது வேறொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தில் இருந்து இன்னொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தினுள் பயணிக்கக் கூடியது. அதனால் தான் நாம் சந்திரன், சூரியன் மற்றும் விண்மீன்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இது ஒரு மின்காந்த அலையாகும். ஒரு வெற்றிடத்தில் 300,000 கிமீ / வி [299 792 458 m / s] வேகத்தில் நகரக்கூடியது. இதுவே, எதாவது ஒன்று நகரக் கூடிய மிக அதிக வேகமாகும். அணு மற்றும் மூலக்கூறுகளை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு சூடேற்றும் பொழுது ஒளி சக்தியை வெளியிடக்கூடியவை. உண்மையில் ஒளியை நாம் காண முடியாது, ஆனால் அதன் தொடர்பு அல்லது எதிர் விளைவுகளை மட்டுமே உணர முடியும். 

 

பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதனுக்கு அழகு சேர்ப்பது, குறிப்பாக முகத்திலேயே அழகான பகுதி, எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் அடர்த்தியான‌ கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேலும் அதிகரிக்கும். உணர்வு உறுப்பைச் சார்ந்த கண்கள் நமது உடலின் கண்ணாடி ஆகும். நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி / retina), கண்ணின் பின்புறத்தில் உள்ளது. நம் கண்களின் இந்த பகுதியில் மில்லியன் கணக்கான செல்கள் உள்ளன [கம்பு  செல்கள் (ROD CELLS) & கூம்பு  செல்கள் (CONE CELLS)], அவை ஒளி உணர்திறன் கொண்டவை மற்றும் அவை நரம்பு தூண்டுதலின் வடிவத்தில் ஒளி தகவல்களை மாற்றும் திறன் கொண்டவை, இதனால் இவை மூளைக்கு பரவும்போது, ​​நாம் எதையாவது பார்க்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம். இங்கு நாம் ஒளியின் எதிர்விளைவுளின் நன்மையை காண்கிறோம்.

 

நாம், நம்மை சுற்றி உள்ள பொருட்களை எம் கண்ணால் பார்க்கிறோம். எனினும், ஒரு இருண்ட அறையில் எதையும் நாம் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், நாம் பார்க்க இருக்கும் பொருளில் இருந்து ஒளி கட்டாயம் எம் கண்ணுக்கு வரவேண்டும். அப்பதான் அதை பார்க்க முடியும். மேலும் மொத்த அல்லது முழுமையான பிரதிபலிப்பு அல்லது எதிரொளிப்பு [Total or complete reflection], நாம் பார்க்க வேண்டிய பொருளை காட்டாது. காரணம் வெவ்வேறு [ஒளிவிலகல் குறிப்பெண்கள் -Refractive indexes - கொண்ட] ஊடகங்களின் குறுக்கே ஒளி செல்லும் பொழுது, ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோணத்தை விடப் பெரிய கோணத்தில், அது மற்ற ஊடகத்திற்குள் புக எத்தனிக்கும் பொழுது, அது கடந்து செல்ல முடியாத ஒரு நிலைக்கு வந்து, அது  முற்றிலும் பிரதிபலிக்கிறது அல்லது திரும்பி தன் முதல் ஊடகத்திற்குள்ளேயே போகிறது. ஆகவே அதை நாம் பார்க்க இயலாமல் போகிறது. மனித கண்கள் மூன்று அடிப்படை நிறங்களை உணரக் கூடியனவாக இருக்கின்றன. அவை  சிவப்பு,  பச்சை, நீலம் ஆகும். ஆகவே கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள் சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை,  நீலம் , கரு நீலம், உதா [Red, orange, yellow, green, blue, indigo and violet] ஆகும்.

 

சாதாரண மனிதனின் கண், ஒரு பொருளை பார்க்கும் பொழுது, அது கீழே கொடுக்கப்பட்ட ஒரு வரிசையில் தொழிற்படுகிறது

 

1] நாங்கள் பார்க்கும் பொருள் ஒளியை பிரதிபலிக்கிறது.

 

2] கண்ணின் முன் பகுதியில் உள்ள கருவிழிப்படலம் [கார்னியா /  கருவிழி / cornea] ஊடாக ஒளி கண்ணுக்குள் நுழைகிறது. 

 

3] ஒளி கண்ணின் நீர்மயவுடநீர் [aqueous humour] ஊடாக சென்று, கண் பாவைக்குள் [Pupil] நுழைந்து கண்ணின் வில்லையை [lens] அடைகிறது.

[கண்ணின் முன்புற உள் பகுதியில், கருவிழி மற்றும் கண் வில்லைக்கு இடையில் அமைந்துள்ள பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள திரவத்தை நீர்மயவுடநீர் [நீர் நகைச்சுவை / aqueous humour] என்பர். இது ஒரு  திரவ பிளாஸ்மாவின் [a transparent water-like fluid similar to plasma] வகையாகும். இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது]

 

4] கண் வில்லை [Lens / a transparent biconvex structure in the eye] இருபுற குவி அமைப்பை கொண்டது. தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை, கண்ணின் பின் உள்ள விழித்திரையில் [(Retina] விழச் செய்ய தானியங்கியாக கண் வில்லை தன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.

 

5] கண்ணாடியுடனீர் [ vitreous body, It is often referred to as the vitreous humour or simply "the vitreous"] என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும். இது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம். இது அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும். இது விழிக்கோளம் அல்லது கண் விழியின் [eyeball] சுற்று வடிவத்தை [round shape] பராமரிக்கிறது 

 

6] ஒளி அதன் பின், கண்ணின் பின்புறத்தை அடைந்து, விழித்திரை [retina] தாக்குகிறது. விழித்திரை என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். கருவிழிப்படலம், திரவம், வில்லை, கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது.

 

7] இறுதியாக, மூளையின் பெருமூளைப் புறணியில் [cerebral cortex] உள்ள பார்வைப் புறணி (காட்சி புறணி / visual cortex), விழித்திரையினால் அனுப்பப்பட்ட துாண்டுதல்களின் [impulses] உட்பொருளை அறிந்து, அதை எமக்கு வெளிப்படுத்துகிறது அல்லது அந்த குறிப்பிட்ட விம்பத்தை உருவாக்கி, நாம் பார்க்க தருகிறது. 

 

[மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா,

கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்

மொழிபெயர்ப்பு:கந்தையா,தில்லைவிநாயகலிங்கம்]   

பகுதி 02 தொடரும்..

0 comments:

Post a Comment