திருக்குறள்-/04/அறன் வலியுறுத்தல்

[முகவுரை-04] திருக்குறளின் காலம்

திருக்குறளின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 450 வரை என்று பலவாறு கருதப்படுகிறது. தமிழ் மரபின் வாயிலாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி நூலாக அறியப்படுகிறது. சோமசுந்தர பாரதியார், மா. இராஜமாணிக்கனார் முதலானோர் இக்கருத்தை நிறுவிக் குறளின் காலம் பொ.ஊ.மு. 300 என்று உரைக்கின்றனர். வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை குறளின் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். செக் நாட்டுத் தமிழ் ஆய்வாளர் கமில் சுவெலபில் இவற்றை ஏற்க மறுக்கிறார். அவரது கணிப்பின்படி வள்ளுவரது காலம் சங்கப் புலவர்களுக்குப் பின்னரும் பக்திப் புலவர்களுக்கு முன்னருமான பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். நூலின் நடை, இலக்கணம், சொல்லமைப்பு போன்றவை பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இல்லாதிருப்பதும், வள்ளுவரது சொல்லாடலில் காணப்படும் வடமொழிச் சொற்களின் பயன்பாடும், தம் காலத்திற்கு முந்தைய நூல்களிலிருந்து வள்ளுவர் எடுத்தாண்டமையுமே சுவெலபில் தனது கணிப்பிற்குச் சுட்டும் காரணங்களாகும்.

1959-ம் ஆண்டு எஸ். வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வின் முடிவாகத் திருக்குறள் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தோ அதற்குப் பிற்பட்டதோ ஆகும் என்று குறிப்பிட்டார். குறளில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதையும், நூலில் வள்ளுவர் சுட்டும் வடமொழி நூல்கள் பொ.ஊ. முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்களாக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும், அதற்கு முன்புவரை இல்லாத இலக்கணங்களைக் குறளில் வள்ளுவர் பயன்படுத்தியிருப்பதையும் வையாபுரிப்பிள்ளை தனதிந்தக் கருத்துக்குக் ஆதாரமாகக் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாகக் குறளில் காணப்படும் 137 வடமொழிச் சொற்களின் பட்டியலொன்றையும் அவர் பதிப்பித்தார்.  பின்னர் வந்த தாமஸ் பரோ, முர்ரே பார்ன்ஸன் எமீனோ உள்ளிட்ட அறிஞர்கள் இப்பட்டியலிலுள்ள சொற்களில் 35 வடமொழிச் சொற்களல்ல என்று கருதினர். இவற்றில் மேலும் சில சொற்களின் தோற்ற வரலாறு சரியாகத் தெரியவில்லை என்றும் வரவிருக்கும் ஆய்வுமுடிவுகள் இவற்றில் சில தமிழ்ச் சொற்கள் என்றே நிறுவ வாய்ப்புள்ளது என்றும் சுவெலபில் கருதுகிறார். ஆயினும் மீதமுள்ள 102 வடமொழிச் சொற்களை ஒதுக்கிவிட முடியாதென்றும் வள்ளுவர் கூறும் கருத்துகளில் சில ஐயப்பாடின்றி அர்த்தசாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரம் முதலிய வடமொழி இலக்கியங்களிலிருந்து வந்தவையே என்றும் சுவெலபில் கூறுகிறார்.

குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த நூல் அன்று என்றும் அதன் காலம் பொ.ஊ. 450 முதல் பொ.ஊ. 500 வரை இருக்கலாம் என்றும் 1974-இல் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய தனது ஆய்வில் சுவெலபில் நிறுவுகிறார். நூலில் மொழியமைப்பையும், அதில் வரும் முந்தைய நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், வடமொழி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சில கருத்துகளையும் தனது கூற்றுக்குச் சான்றாக அவர் காட்டுகிறார். குறளில் வள்ளுவர் சங்கநூல்களில் காணப்படாத பல புதிய இலக்கண நடைகளைக் படைத்துள்ளார் என்று குறிப்பிடும் சுவெலபில், குறள் இதர பண்டைய தமிழ் நூல்களைவிட அதிகமாக வடமொழிச் சொற்பயன்பாட்டைக் கையாள்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார். குறளின் தத்துவங்கள் பண்டைய இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட மெய்யியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டும் சுவெலபில், வள்ளுவர் தமிழ் இலக்கிய மரபுடன் மட்டும் தொடர்புடையவர் அல்லர் என்றும் அவர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் வியாபித்திருந்த ஒருங்கிணைந்த பண்டைய இந்திய அறநெறி மரபையும் சார்ந்தவர் என்றும் நிறுவுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் கிறித்தவ மதபோதகர்களும் குறளின் காலத்தைக் பொ.ஊ. 400-இல் தொடங்கிக் பொ.ஊ. 1000 வரை பலவாறு வரையறை செய்தனர்.  தற்காலத்தைய அறிஞர்கள் குறளின் காலம் என்று ஒருமித்தமாக ஏற்பது சுமார் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு என்றே பிளாக்பர்ன் கருதுகிறார்.

இந்த வாதங்களுக்கிடையில் 1921-ம் ஆண்டு தமிழக அரசு மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியினை ஏற்று பொ.ஊ.மு. 31-ம் ஆண்டினை வள்ளுவர் பிறந்த ஆண்டாக அறிவித்தது. இதன் விளைவாக அன்று தொடங்கி தமிழகத்தில் ஆண்டுகளைக் குறிக்கத் திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழக நாட்காட்டிகளில் ஜனவரி 18, 1935 அன்று முதல் வள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.

திருக்குறள் - முகவுரை-05 அடுத்தவாரம் தொடரும்

திருக்குறள் தொடர்கிறது….

4. அறன் வலியுறுத்தல்

 

👉குறள் 31:

சிறப்பீனும்செல்வமும்ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

மு.வ உரை:

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

சாலமன் பாப்பையா உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

கலைஞர் உரை:

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

English Explanation:

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

 

👉குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

மு.வ உரை:

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

கலைஞர் உரை:

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

English Explanation:

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

 

👉குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

மு.வ உரை:

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

கலைஞர் உரை:

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

English Explanation:

As much as possible, in every way, incessantly practise virtue.

 

👉குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

மு.வ உரை:

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சாலமன் பாப்பையா உரை:

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

கலைஞர் உரை:

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

English Explanation:

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

 

👉குறள் 35:

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்ற தறம்.

மு.வ உரை:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

கலைஞர் உரை:

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English Explanation:

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.


👉குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மு.வ உரை:

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

கலைஞர் உரை:

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

English Explanation:

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.


👉குறள் 37:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

மு.வ உரை:

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

கலைஞர் உரை:

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

English Explanation:

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

 

👉குறள் 38:

வீழ்நாள்படாஅமைநன்றாற்றின்அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

மு.வ உரை:

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

கலைஞர் உரை:

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

English Explanation:

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

 

👉குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

மு.வ உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை:

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

கலைஞர் உரை:

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

English Explanation:

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

 

👉குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

மு.வ உரை:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

கலைஞர் உரை:

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

English Explanation:

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

அடுத்த பகுதி வாசிக்க.... அழுத்துக 👉
Theebam.com: திருக்குறள்-/05/-இல்வாழ்க்கை:

0 comments:

Post a Comment