நவீன உலகில் நெருங்கும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் 

உரமாகும் சிறுநீர்!...


நாற்றமடிக்கும் கழிவு என்று தான் மனித சிறுநீரை எல்லாரும் நினைக்கிறோம். ஆனால்
, விஞ்ஞானிகள் அதில் நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய இரு வேதிப் பொருட்கள் செறிவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டும் பயிர் விளைசலுக்கு அவசியமான உரங்கள்.

பிரான்சில் உள்ள, 'டூபி ஆர்கானிக்' என்ற நிறுவனம், மனித சிறுநீரை, பொதுக் கழிப்பறைகளிலிருந்து சேகரித்து, தொழிற்சாலை வேதி உரங்களுக்கு மாற்றான, இயற்கை உரத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

கழிப்பறைகளிலிருந்து சேமிக்கப்படும் சிறுநீரை தொற்றுக்கிருமிகளை நீக்கி, ஒரு நல்ல வகை கிருமியைச் சேர்த்து பதப்படுத்துகின்றனர். இப்படி பதப்படுத்திய சிறுநீரை பின்னர் உரமாக மாற்றுகின்றனர். இந்த உரத்திற்கு 'லேக்டோபி ஸ்டார்ட்' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த உரம், வேர்களின் வளர்ச்சியை துாண்டுவதோடு, பயிர்களுக்கு வேண்டிய பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் இதர ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளன செயற்கை உரங்களுக்கு மாற்றாக வரும் இந்த முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா என்பது இனிதான் தெரியும்.

 

தொற்றை எதிர்க்கும் வௌவால்.

மனிதருக்கு பல வினோத வைரசுகளைப் பரப்புவை வௌவால்களே.

ஆனால், கொரோனா,ரேபிஸ்,எபோலா, எனப் பல்வகையான வைரசுகளை எதிர்க்கும் ஆற்றல் வௌவால்களுக்கும் உண்டு. வெளவால்களின் மரபணுக்கள், புதிய வகை வைரசுக்களைப்பற்றிய தகவல்களை உடனடியாக உள்வாங்கி,அவற்றினை எதிர்க்கும் அணுக்களை உடலில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக இருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளார்கள்.வௌவாலின் இந்தத் தன்மையை மேலும் ஆராய்ந்தால், மனித நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் மருந்துகளை உருவாக்கலாம் என்கிறது 'நேச்சர்'இதழ்.

 

கேடு தராத குளிர்சாதனப் பெட்டி!...

இன்றைய குளிர்சாதனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் புளூரினாக்கம் செய்யப்பட்ட வாயுவைப் பயன்படுத்துகின்றன.ஐரோப்பாவில் 2030க்கு மேல் அதற்குத் தடை விதித்துள்ளனர். எனவே ஜெர்மனியிலுள்ள 'மேக்னோதெர்ம்'

மின் ஆராய்ச்சியாளர்கள், எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாத, காந்த ஆற்றலில் இயங்கும் குளிர்சாதனப்பெட்டிகளை உருவாக்கியுள்ளனர்.

 

சில பொருட்கள் காந்தப் புலத்துக்குள்ளாகும்போது சூடாகின்றன. இதை காந்த வெப்ப விளைவு என்பர். இதைப் பயன்படுத்தி ,தகடைச் சூடாக்கவும் குளிர்விக்கவும் செய்யும் தொழிநுட்பத்தினை 'மேக்னோதெர்ம்' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல 'போலாரிஸ்'என்ற பெயரில் குளிர்சாதனப் பெட்டியையும் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.மேக்னோதெர்ம். இதனுள் 150 பாட்டில் பானங்களை வைத்து, 5 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியில் வைக்கலாம்.

 

காந்தத்தில் இயங்கும் இதற்கு, குறைவான மின்சாரமே தேவை என்பதோடு, துளியும் சத்தம் எழுப்பாத 'ரெப்ரிஜிரேட்டர்' இது.

 

உருளை மாவில் செய்த பாட்டில்!


சுவீடனிலுள்ள கண்டுபிடிப்பு நிறுவனமான டுமாரோ மெஷினும்
, பழச்சாறு விற்கும் 'பிராம்ஹல்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து, ஒரு புதுமையை பரிசோதித்து வருகின்றன. பழச்சாற்றை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பதை தவிர்க்க, இரு நிறுவனங்களும் 'கான்ஷெல்ஸ்' என்ற புதிய பாட்டிலை உருவாக்கியுள்ளன.

உருளைக்கிழங்கை மாவாக ஆக்கி, அதில் செய்யப்பட்டது இந்த பாட்டில். இதில் அடைக்கப்பட்ட பழச்சாறைக் குடித்த பின், ஆரஞ்சு தோலை உரிப்பது போல, பாட்டிலை பிரித்து சாப்பிடலாம்; எருவாகப் பயன்படுத்தலாம் அல்லது நீரில் கரையவிட்டு, சாக்கடையில் ஓடவிடலாம். மொத்தத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் செய்யாது இந்த உருளை மாவிலான பாட்டில். 'பயோ பிளாஸ்டிக்' என்ற வகையைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பு மென் பானங்களை ஏந்தி விரைவில் வலம் வரக்கூடும்.

 

இதயத்தின் இனிய நண்பன்!


பலவிதமான இதயக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு
, சாதாரண 'ஸ்மார்ட் வாட்ச்' உயிர் காக்கும் கருவியாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இன்று, சில ஆயிரம் ரூபாய்களுக்கு கிடைக்கும் ஸ்மார்ட் வாட்சுகளில்கூட, இதயத் துடிப்பை அளக்கவும், ஈ.சி.ஜி., என்கிற இதய செயல்திறனை அளக்கவும் வசதிகள் உள்ளன.

 

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 83 ஆயிரம் பேரிடம் ஒரு சோதனை நடத்தினர். அவர்கள் அனைவருமே 50 முதல் 70 வயதுடைய, ஆரோக்கியமான நபர்கள்; அவர்களிடம் 15 வினாடிக்கு ஈ.சி.ஜி., எடுக்கப்பட்டது. மரு த்துவர்கள் இதை வைத்து, 'சிலருக்கு அடுத்த சில ஆண்டுகளில் இதயத் தாக்குதலோ, இதய நாடித்துடிப்பில் கோளாறோ வரலாம்' என, கணித்தனர். எனவே, 'ஸ்மார்ட் வாட்ச் மூலம் சேகரிக்கப்படும் இதய நல அளவைகளை வைத்தும், ஒரு நோயாளிக்கு எதிர்காலத்தில் இதயத்தாக்குதல் வரக்கூடுமா, இல்லையா என 95 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியும்' என்கின்றனர், லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment