''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன?

 மேற்கு உல­கத்தினரும், மேற்கு வழக்கங்களை உள்வாங்கிப் பின்பற்ற விரும்பும் கிழக்குவாழ் மக்களும், (பெரிதும் கிறீஸ்தவர்கள்), நபர் ஒருவர் இயற்கைக் காரணத்தினால் ஒருவாட்டி தும்மினாரேயானால், அவரைப் பார்த்து, சுற்றி இருக்கும் எல்லோருமே 'God Bless You ' என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்பது ஒரு நன்மரியாதைத் தனமாகக் கருதப்படுகின்றது. இதற்கு அவர், அவர்களுக்கு 'Thank you ' என்று நன்றி கூறிக்கொள்வது நன்நடத்தை உள்ளவருக்கு அழகு என்று கொள்ளப்படுகிறது.
அவர் திரும்பவும் தும்மினால், மீண்டும் அனைவரும் 'Bless you ' சொல்லவேண்டும், அவர் திரும்பவும் நன்றி சொல்லவேண்டும். இப்படி, இப்படி அவர் எத்தனை தரம் தும்மினாலும் மீண்டும், மீண்டும் சளைக்காமல் இந்த நாடகம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். இம்முறையிலிருந்து தவிறினால் 'மனேர்ஸ்' தெரியாதவர்கள் ஆகிவிடுவார்கள்.
இவர் பாவம், தும்முபவர், வரும் தும்மலைச் சுதந்திரமாக தும்மி விட முயற்சிப்பதா அல்லது சுற்றி இருப்பவர்களின் தலையீடுகளுக்கு ஈடு கொடுத்து நன்றி சொல்லிக்கொண்டே இருப்பதா என்று தெரியாமல் திண்டாடுவார்.
இது என்ன, தும்மல் என்பது ஓர் உயிர் போகின்ற காரியமா, எல்லோரும் சேர்ந்து  கடவுளின் ஆசீர்வாதத்தைத் தேடிக்
கேட்பதற்கு? அது சாதரணமாக ஏதாவது தூசோ, குளிர் காற்றோ, அல்லது காரமோ என்னவோ மூக்குத் துவாரத்தினுள் சென்று அரித்ததனால் மிகவும் தற்காலிகமாக உண்டான ஒன்றுதானே! நிம்மதியான, சுதந்திரமான சில தும்மல்கள் இதைத் தெளிவாகி விடுமே! ஏன் இந்த தேவை இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம்?
இந்தப் பழக்கம் எப்படி உருவானது என்று அறிந்தால் உண்மையில் இதன் அர்த்தம் எதிர்மாறானது என்றுதான் தோன்றும். அதாவது, 'May God Bless You ' என்பது ஆசீர்வாதமா அல்லது ஆசியுடன் கூடிய வதமா என்பது புரியவரும்.
இது எப்படி தொடங்கியது என்பதற்குப் பல விளக்கங்கள் காணப்பட்டாலும் ஒன்றுதான் மிகவும் பிரதானமானதாகக் கருதப்படுகின்றது.
 590ஆம் ஆண்டில் மிகவும் கொடுமையான கொள்ளை நோய் ஐரோப்பாவெங்கும் பரவி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இந்நோய் பீடித்தவருக்கு வேறு பல முதன்மையான அறிகுறிகள் இருந்தாலும் கனத்த இருமலும் ஒன்றாகக் காணப்பட்டது. இந்நோய் வந்தால் வைத்தியமே இல்லை; 2-3 நாட்களில் கட்டாயம் இறந்துவிடுவர். இது இலகுவில் மற்றயவர்களுக்கும் தொற்றக்கூடியது. இவர்கள் பக்கம் மக்கள் நெருங்க அஞ்சுவர்.
இந்நோய் ரோம் நகரத்தையும், அண்டி அளவில்லா உயிர்களைப் பலி வாங்கியது. இதைக் கட்டுப்படுத்த வைத்தியர்களாலும் முடியவில்லை. மக்கள் மடிவதை ஒரு வகையிலும் நிற்பாட்ட முடியாது என்பதைக் கண்டு கொண்டனர். இந்நோயினால் பீடிக்கப் பட்டவர் அருகே மக்கள் செல்வதைத் தவிர்த்தனர். இதனால், அன்றைய போப்பாண்டவர் இறக்கப் போகிறவர்களுக்காக, கடைசியாக இறைவனின் ஆசீர்வாதத்தை நாடினார். கிட்டத்தக்க, ஓர் இறுதிச் சடங்கு வைபவமாகவே இந்த தேவாலய வழிபாடுகளை அவர் மேற்கொண்டார். மக்களும் பங்குபற்றி நோய் வந்தவர்களுக்காக வேண்டுதல் செய்து மேலே வழி அனுப்பி வைத்தனர்.
அன்றிலிருந்து, தம் எதிரே யார் இருமக் கண்டாலும் மக்கள் மிகவும் தீவிர சிந்தனைக்கு ஆளாகிப் பயம் கொள்ளத் தொடங்கினார்கள். அதாவது, கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்வதென்றால், May God Bless You அல்லது God Bless You அல்லது இலகுவாக Bless You என்று கூறுவதன்மூலம், மறைமுகமாக அவர்கள், "அய்யய்யோ, உனக்கு ஆட்கொல்லிக் கொள்ளை நோய் வந்துவிட்டது; உன்னை இனி எந்த ஒருவராலும் காப்பாற்ற முடியாது; எனக்குக் கிட்டவே வந்துவிடாதே; நோய் தொற்றிவிடும்; தூர விலகு; நீ ஒரு முடிகின்ற கேசு; கடைசியாகப் போய் கடவுளைக் கேள்; சிலவேளை கடவுள்தான் காப்பாற்றக்கூடும்; (அப்படி ஒருவருமே காப்பற்றப் படவில்லை என்பதால் சந்தேகத்துடன்தான் சொல்வார்கள்!) அவர் உன்னை இறுதியில் (இறக்கமுன்னர்) ஆசிர்வதிக்கக் கூடும்; இப்போது ஆளை விடு!" என்று அவரை ஒதுக்கித் தூரமாக ஓடிபோய்விடுவது என்பதுதான் உண்மையான கருத்தாய் இருந்தது!
ஆனால், எந்தவித நோய் அறிகுறிகள் அற்ற சாதாரண தும்மலுக்கே மேல் உலகம் அனுப்பி வைக்கப் பலர் போட்டி போட்டு, முண்டி அடித்துக்கொண்டு இப்பொழுது நிற்கின்றார்கள்!
என்றாலும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் அந்தக் கருத்தில் இப்பொழுது
அவர்கள் கூறுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையிலேயே சுகம் வருமாறுதான் கடவுளை வேண்டுகின்றார்கள் என்பது வெளிப்படை. என்றாலும், கடவுள் கட்டாயம் காப்பாற்றுவார் என்று கூறாது, ஒரு சந்தேகத்தோடு கூடிய அந்தப் பழைய வசனமாகிய 'May God Bless You ' என்பதையே ஏன்தான் இப்பவும் தொடர்ந்து பாவிக்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.
எது எப்படி என்றாலும், சும்மா சாதாரண தும்மலுக்கும் பாவம் பிசியான கடவுளைத் துணைக்குக் கூப்புடுவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒவ்வொருவரும், ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஓடி, ஓடி அவர் வர வெளிக்கிட்டால், மற்ற அலுவல்கல்களில் எப்படி அவர் கவனம் செலுத்த முடியும்?
எதற்கு எல்லாம் கடவுளை அழைப்பது என்று ஒரு விவஸ்தை இல்லை? என்ன, எல்லோரும் கைவசம் தங்கள் சட்டைப் பைகளிலா கடவுளைக் கொண்டு திரிகிறார்கள், கண்ட இடமெல்லாம் அவர் அருளை அள்ளித் தெளிப்பதற்கு?
எல்லோரும் தும்முவோம்; சந்தோசமாய்த் தும்முவோம்! சும்மா ஒருமுறை எங்களை விடுங்கோ!
.. ...ஆஆ .... ...க்சு!.... ...க்சு!
ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன் 

2 comments:

  1. may தானே.அதையும் 100% wish பண்ணினா ஏன்னா கொறஞ்சா போயிடுவாங்க!!

    ReplyDelete
  2. may தானே.அதையும் 100% wish பண்ணினா ஏன்னா கொறஞ்சா போயிடுவாங்க!!

    ReplyDelete