உலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்திரகாசன்

உலக மதங்கள், ஒரு பார்வை:
உலகின் இந்து, கிறீஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய, சமண, யூத மதங்கள் உருவாகிய விதங்கள் பற்றி ஒரு நாலு வரிகளில் அறிய முனைவோம்.

இந்து மதம்:

இந்தியாவில் காலம் காலமாகப் பலவிதமான தெய்வங்களை, வேறு வேறு சமயப் பெயர்களுடன் வணங்கி வந்தவிடத்து, பிற்காலத்தில் இத்தெய்வங்களிடையே மாமன், மாமி, கணவன், மனைவி, அண்ணன், தங்கை எனப் பல உறவுமுறைகளை உருவாக்கி, அந்தப் பொதுவான அமைப்பினை இந்து மதம் என்று அழைக்கலாயினர். அச்சமயங்களில் முதன்மையாய் நின்றிருந்தது சைவ சமயமாகும். சைவ சமயத்தைச் ஸ்தாபித்தவர் என்று ஒருவரும் இலர். ஒரு 5, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்காலாம். கி.மு.2500-1500 ஆண்டு காலத்தில் இருந்த சிந்து வெளி நாகரிக காலத்திலேயே சிவலிங்க வழிபாட்டை ஒத்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன. கி.மு.1500-500 களில் வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர், கி.மு.500-கி.பி.500 களில்புராண இதிகாசங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 500-1500 புராணங்கள் பாடப்பட்டன. இச்சமயத்தை வளர்த்தவர்கள் ரிஷிகள், சமய குரவர்கள், ஆழ்வார்கள் என்று பலர் இருந்தனர்.

இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவர், உருவமோ, அருவமோ அற்றவர். எங்கும் நிறைந்தவர், எல்லாமாயே இருப்பவர். அளவில்லா அன்பும், ஆற்றலும் கொண்டவர், எல்லா உயிர்களிடத்தும் உறைபவர் என்று விவரிக்கப்பட்டுள்ளார். ஆதலால், ஆன்மா அழிவற்றது, புனிதமானது. இப்பிறப்பில் அறவாழ்வு வாழ்ந்து, தெய்வம் தொழுதால், மறுபிறப்பின்றி மோட்சம் அடையலாம் என்று சைவ சமயம் போதிக்கின்றது.

தொடக்கத்தில் சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு அதிகரித்ததால் சற்றுத் தேக்க நிலை அடைந்து பின்னர் புத்துயிர் பெற்று எழுந்தது. ஆனாலும்பிற்காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பின்போது, மத மாற்றக் கட்டுப்பாடுகள் இந்து சமயத்தில் இல்லாது இருப்பதால். சமூகத்தில் நிலவிய சாதிப் பிரிவினையினால் தள்ளப்பட்டும், பதவி ஆசைகளினால் உந்தப்பட்டும், திருமண பந்தங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு அஞ்சியும் பலர் கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறினர்.

கிறீஸ்தவ மதம்:

இதை ஸ்தாபித்தவர் இயேசு கிறீஸ்து நாதர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ரோம சர்வாதிகாரி சீசரின் கீழ் இருந்த இஸ்ரவேல், பெத்தலகேமில், பரிசுத்த ஆவியால் கருவுற்ற மேரி என்னும் தாய்க்கு மகனாகப் பிறந்தார். பிறந்து, 30 வருடங்களாக, தச்சு வேலை செய்யும் ஒரு யூதராகவே வாழ்ந்தார்.  30 வயசிலிருந்து இவர் பல நற் போதனைகளையும், அற்புதங்களையும் செய்யத் தொடங்கினார். இவரின் போதனைகள் பல யூத மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும், இவர், தான் கடவுளின் மைந்தன், தானும் கடவுள்தான் என்று பிரச்சாரம் செய்வது யூதக் கொள்கைகளுக்கு எதிராக அமைந்ததால் அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியது. இதனால், பலவிதமான முயற்சிகளின் பின்னர் தேசாதிபதியால் மரணதண்டனை அறிவிக்கப்பட்டு, அவரைச் சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து அது நிறைவற்றப்பட்டது.
என்றாலும், மூன்றாம் நாளில் உயிர் பெற்று எழுந்து மேலும் 40 நாட்கள் நற்போதனையில் ஈடுபட்ட பின்னர் வானத்தில் எழுந்து சென்று மறைந்ததை பலர் நேரில் கண்டனர்.

இவரின் அன்பை அடிப்படையாகக் கொண்ட போதனைகளால் ஈர்க்கப்பட்ட பெருவாரியான மத்திய கிழக்கு, ஐரோப்பிய மக்கள் கிறீஸ்தவ மதத்தினைத் தழுவினர். இதன் பின்னர் உலகம் எங்கும் சென்று நாடுகளைப் பிடித்துப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த ஐரோப்பியர்களால் இம்மதம் மேலும் பரப்பப்பட்டது.

இஸ்லாமிய மதம்:

இதை ஸ்தாபித்தவர் முகமது நபி. இவர் 570ம் ஆண்டு மெக்காவில் பிறந்து, அனாதையாகி மாமனால் வளர்க்கப்பட்டார். இவர்தான் இறைவனின் பல தூதர்களில் மிகவும் கடைசியாக அனுப்பப்பட இருந்த தூதர் என்று இஸ்லாமியர் நம்பினர். இவர் வாணிபம், மந்தை மேய்க்கும் தொழில்களைச் செய்தார். பின்னர் தியானம் செய்து 40 வயதில்  இறைவனை உணர்ந்தார்.
பின்னர், தான் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை மக்களிடம் நற் போதனைகளாகப் பரப்பினார். எல்லோருமே உண்மையான இறைவனிடம் சரண் அடையவேண்டும், அல்லாதவர்களை ஒழித்து விடவேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டதால், தன் மதத்தில் சேராதவர்கள் மீது 2000, 3000, 10,000 என்னும் எண்ணிக்கை உள்ள போர்வீரர்களுடன் பல தடவை பதுங்கு குழிகள், காவலரண்கள் கொண்டு முழு இராணுவ முறையில் போர் புரிந்து, அவர்களைக் கொன்று, வழிபாட்டுத் தலங்களையும் உடைத்து மதத்தைப் பரப்புவதில் பெரும் வெற்றி அடைந்தார். முழு அரேபியாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் 632 இல் சுகயீனமுற்று மரணித்தார்.

இவருக்குப் 19 மனைவியர்கள், 14 நிச்சயார்த்தம் செய்து விடுபட்ட பெண்களும், 10  விருப்பம் தெரிவித்தும் இவரால் ஏற்றுக்கொள்ளாத நங்கைகளும் இருந்தனர் என்று விக்கி பட்டியல் இட்டுள்ளது.

புத்த மதம்:

இதை ஸ்தாபித்தவர் கௌதம புத்தர். இவர் கி.மு 563 இல் சித்தார்த்தர் என்னும் பெயருடைய அரச குமாரனாக இந்தியாவில் பிறந்து, தாயை இழந்து, சிறிய தாயால் வளர்க்கப்பட்டார். இவரை, இவர் தந்தை அரண்மனை சௌகரியங்களில் மூழ்கி வளர்க்க முனைந்தும், இவர் வெளி உலகில் மக்கள் படும் வேதனைகளையும், கஷ்டங்களையும் கண்டு மனம் வெதும்பினார். இந்தத் துயரங்களில் இருந்து மீள என்ன வழி என்று அலைந்து திரியும் போது, 29 வயதில் ஒரு துறவியின் உபதேசம் கிடைத்தது. அதன்படி, தன மனைவி, பிள்ளையை விட்டு, அரச சுகத்தையும் துறந்து வனம் சென்று ஒரு அரச மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்து, 6 வருட முடிவில் ஞானம் பெற்றார்.

மனிதனின் துயரங்களுக்கு அவனின் பேராசைதான் காரணம் என்றும், ஆசையைக் கட்டுப்படுத்தினால் அமைதியும், சந்தோசமும் கிடைக்கும் என்று அறிந்து போதித்தார். வேதக் கருத்துக்கள் பல பிழையானவை என்று வாதித்தார். கடவுளோ, பிரபஞ்சமோ அவை அறியப்பட முடியாதவை; அது எமக்குத் தேவையும் இல்லை. நமக்கு நாமே உண்மையானவர்களாகவும், நியாயமானவர்களாகவும் வாழ்ந்து, கோபம், பற்று, அறியாமை ஆகியவைகளில் இருந்து நீங்கி, கருணை, ஒழுக்கம், அன்பு, நேர்மை உள்ளவராய், மனித குலத்திற்கு சேவை செய்தாலே எமது வாழ்வு ஆனந்தமாக இருக்கும் என்று போதித்தார்.
கடைசியில், தனது 80 வயதில் நோய் வந்து மரணித்தார். இவரின் போதனையால் கவரப்பட்டு இந்திய, ஆசிய பிரதேசங்கள் எங்கும் புத்த மதம் பரவியது.

சமண மதம்:

இதை பிரசித்தப் படுத்தியவர் மகாவீரர். தொடங்கிய காலம் தெரியவில்லை. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வாழ்ந்த இவருக்கு முன்பாகவும் சமணப் பெரியார்கள் பலர் இருந்திருக்கின்றார்கள். இதன் சமய நூல் ஆகமம். இது அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவாவறுத்தல் என்ற (பிற்காலத்தில் திருவள்ளுவரால் கூறப்பட்ட) போதனைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

யூத மதம்:
இதைத் தொடங்கியவர் என்று ஒருவர் இல்லை. 3000 வருடத்தற்கு முன்பிருந்தே இம்மதம் இருந்திருக்கின்றது. இதை அடிப்படையாய் வைத்துத்தான், கிறீஸ்தவ, இஸ்லாமிய, பஹாய் மதங்கள் தோன்றின. முன்பு சொல்லப்பட்ட தீர்க்க தரிசி இன்னமும் வரவில்லை; இனித்தான் வருவார் என்று யூதர்கள் கூற, இல்லை, இல்லை அவர் ஏற்கனவே வந்து விட்டார்; அவர்தான் இயேசு என்று கிறீஸ்தவர்கள் கூறுகின்றார்கள். இஸ்லாமியர்களோ இனி ஒருவரும் வருவதற்கில்லை, கடைசித் தீர்க்க தரிசி நபிகள் வந்து விட்டார் என்று முடிக்கின்றார்கள்.
யூதர்கள், இனி வரும் இரட்சகரை எதிபார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றாகள்.


அவ்வளவுதான், மதங்களைப் பற்றி ஏதோ சுருங்கச் சொல்லி ஒரு சின்ன விளக்கம் கிடைக்கட்டுமே என்று நினைத்து எழுதினேன்!

2 comments: