ஊரில இப்படியும் நடக்கிறது


ஏன் இவர்கள் இப்படி?
அன்று சனிக்கிழமையாததால் பாடசாலை விடுமுறையினை எண்ணி எழும்ப மனமின்றிப்படுத்திருந்த எனது கவனம் பறுவதம் பாட்டியின் தொலைபேசி உரையாடல் நோக்கி
 திரும்பியது.மாமா வீட்டில் வாழும் அண்ணாமலை  த்தாத்தாவுடன் தான்  பாட்டி அறுத்துக்கொண்டிருந்தார்
 "பாத்தியளே, செல்லாச்சியின்ரை   சா(இறப்பு)  ஒரு அநியாயச் சாவாய் போச்சுது.அவளிட்டையும் பணம் இருந்திருந்தா யாழ்ப்பாணம் ஆசுபத்திரியிலை காப்பாற்றி இருப்பினம்".

"ஏன் மருத்துவ தொழிலை உயிரைக் காப்பாருற உன்னத பணியாயும்,மருத்துவரை கடவுளுக்கு சமமாயுமெல்லெ உலகத்தில சொல்லுறவை".என்று தொடர்ந்தார் அண்ணாமலைத் தாத்தா.

"சரியாச் சொன்னியள்.ஆனா, இப்ப ஊரிலை என்ன நடக்குது. அரசாங்கம் ஆசுபத்திரியளுக்கு இலவசமாய் குடுக்கிற மருந்துகளை அங்கு வரும் நோயாளருக்கு சேர விடாமல்,வெளியில் எடுத்து செல்லும் மருத்துவர்கள் தாங்கள் நடத்தும் கிளினிக்குகளுக்கெல்லோ கொண்டு போய் சேர்க்கினம். அத்தோட அவயளின்ரை கிளினிக்கு வாறவைக்கு ஏதன் அறுவைச் சிகிச்சை போன்ற வைத்தியங்கள் செய்ய வேணுமெண்டால் அவையின்ரை கிளினிக்குகளிலை கொடுத்த டோக்கனோடை ஆசுபத்திரிக்கு வருவோருக்குத்தான் அச்சிகிச்சை செய்ய முன்னுரிமை வழங்கினமாம்.”

"இது ரொம்ப அநியாயமாய் இருக்கே பறுவதம்!”

"அநியாயத்தின் மேல் அநியாயம் பாருங்கோ.இப்பிடி எத்தினை செல்லாச்சியள் ஆசுபத்திரியிலை செல்லாக்காசாய் கவனியாம விடப்பட்டு இறந்து போயிருக்கினமாம்".

இலவசக்கல்வியால மக்களைக் காப்பாற்ற அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவர்கள் மருத்துவரா உத்தியோகம் கிடைச்சது பத்தாது எண்டு கலியாணம் எண்ட பேரிலையும் பெண் வீட்டிலை இருந்து பெரும் சீதனமாய்  கொள்ளை அடித்துக்கொண்டு மக்களையும்,அரசையும் சூறையாடும் இவர்களுக்கு மனிதாபிமானம் எங்கை இருக்கப் போகிறது”.

" அப்பிடி எல்லா மருத்துவர்களும் இல்லாவிட்டாலும் பலரும் இப்ப அப்பிடியெண்டெல்லே கதைக்கினம்."

"உதுக்கு மேலதிகாரியள்   தான் நடவடிக்கை எடுக்கவேணும்".

"இப்பிடி  ஊடகங்கள் பலதும் எழுத ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்காமல் போயிடுமே!!" என்று ஒரு முடிவுரையுடன் பாட்டி தனது தொலைபேசி உரையாடலை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளவே நானும் கணினியை நோண்ட ஆரம்பித்தேன்.
ஆக்கம்:பேரன் செல்லத்துரை மனுவேந்தன்.

0 comments:

Post a Comment