தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!பகுதி/Part 01‏

Thais  is a special month for Tamils!
பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது.ஆனால்,இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது  பொதுவாகத்  தெரியாது.

தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும்.மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும்.மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும்.தெளிவாக இருக்கும் தை மாத நீர்,மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது.அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம்? தை என்றால், தைத்தல் என்று பொருளும் உண்டு.


சங்க காலத்தில் ,தையில், சில குறிப்பிட்ட வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன. நல்ல கணவன் வேண்டும் என்று கன்னிப் பெண் வேண்டுவாள்.கணவன் நன்கு ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று மனைவி வேண்டுவாள்.இந்த வேண்டுதல்களின் அடிபடையில் காலையில் எழுந்து நீராடி,விரதம் இருப்பார்கள்.அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது.மார்கழியும் தையும்; முன்பனிக்காலம் . இக்குளிரிடையே மிகக் குளிர்ந்திருக்கும் நீரில் குளிப்பது ஒரு அருமையான அனுபவம்.அவ்வாறு குளித்ததுடன் இயற்கைச் சூடு உடம்பில் இருந்து வருவதால் ஒரு இன்ப அனுபவம்.இயற்கையையோடு இணைந்த  ஒரு தவம் செய்கிறோம் என்ற எண்ணம் நமக்கு வரும்.நோன்பு என்பது ' மனவலிமை கொள்ளுதல் ' எனப் பொருள் கொள்ளலாம்.இந்நாளில் நோன்பு ' விரதம் ' என்று மாறி நம் வாழ்வில் இடம் பெற்று வருகிறது "தை நீராடல்"[பாவை நோன்பு] செய்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது ஒரு நம்பிக்கை.இளம் பெண்கள்  மணலில் அழகிய பாவை செய்து பூச்சூட்டி விளையாடினர்;மணல் பாங்கான இடம்,நீர் நிலைகளின் அருகில் விளையாடினர்;தாம் நீராடும் போது பாவையினையும் நீராட்டி மகிழ்ந்தனர் எனப் பலச் செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.’பார்ப்பு’ எனும் சொல் பாப்பு–பாப்பா என்றாகிப் பின்னாளில் ‘பாவை’ எனத் திரிந்தது என்பர். இச்சொல்லு அழகிய உருவம் என்ற பொருளில் பொதுவாக  வழங்கப் படுகிறது.பாவை நோன்பின் போது அவர்கள் கண்ணில் படுவது,மழையும் அவனே!குளமும் அவனே!எல்லாம் அவனே!

அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை  பரிபாடல் வரிகளில் பார்ப்போம் [பரிபாடல் 11],

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும்.பல பூக்களை நாடும் வண்டுகள் போல,எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும்.எம் கணவரும்,யாமும், கிழவர்,கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம்,பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம்[பேதைபொதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை & பேரிளம் பெண் ] எய்துமளவும்,இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”என்கிறது.இதனால் நாட்டு வழக்கில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும் வந்திருக்கலாம்?

மார்கழியில் அறுவடை முடிந்து கையில் செல்வம் [பொருள்] இருக்கும்.திருமண செலவுகளுக்குத் தேவையான அளவு சேர்ந்திருக்கும்.கன்னிகையும் நோன்பிருக்கவே, திருமண முயற்சிகள் எளிதில் கூடி வரவே,இந்தப் பழமொழி வழக்கில் வந்தது. இதுதான் தை மாதம் குறித்த பண்டைத் தமிழர் வாழ்கை இயல்பு ஆகும்.

இதனால் தானோ என்னவோ,தை முதல் நாளன்று ‘தை நீராடல்’ என்கிற பெயரில் விரதத்தை முடித்துக் கொண்டு,நிறைய பால் போட்டு செய்த பொங்கல் சாப்பிடுகிறார்களோ!

சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது.ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது.திருவெம்பாவை-திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.

திருப்பாவையில்,

''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''

எனவும்

திருவெம்பாவையில்,

'' போற்றியாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய் ''எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது,ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை."மதிநிறைந்த நன்னாள்" என்றுதான் குறிப்பிடுகிறார்.மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி.எனவே,திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது.தமிழ் மாதங்கள் அனைத்தும் பொதுவாக பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்;ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.

பகுதி/Part 02  தொடரும்












0 comments:

Post a Comment