திருக்குறள்.....-/32/-இன்னா செய்யாமை

திருக்குறள் தொடர்கிறது



32. இன்னா செய்யாமை

 

👉குறள் 311:

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

மு.வ உரை:

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:

சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் உரை:

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

English Explanation:

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

 

👉குறள் 312:

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

மு.வ உரை:

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

கலைஞர் உரை:

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

English Explanation:

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

 

👉குறள் 313:

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.

மு.வ உரை:

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

கலைஞர் உரை:

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

English Explanation:

In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

 

👉குறள் 314:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

மு.வ உரை:

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

கலைஞர் உரை:

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

English Explanation:

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

 

👉குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போற் போற்றாக் கடை.

மு.வ உரை:

மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

கலைஞர் உரை:

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

English Explanation:

What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

 

👉குறள் 316:

இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்.

மு.வ உரை:

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

கலைஞர் உரை:

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

English Explanation:

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

 

👉குறள் 317:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.

மு.வ உரை:

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

கலைஞர் உரை:

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

English Explanation:

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

 

👉குறள் 318:

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்.

மு.வ உரை:

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

கலைஞர் உரை:

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

English Explanation:

Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?


👉குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்.

மு.வ உரை:

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

கலைஞர் உரை:

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

English Explanation:

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

 

👉குறள் 320:

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.

மு.வ உரை:

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

English Explanation:

Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

 


திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 


அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக :  
Theebam.com: திருக்குறள்.../33/...கொல்லாமை

 

 

 

0 comments:

Post a Comment