"மாற்ற மொன்றே மாறாதது" & "சிந்தை சிதறுதடி"

 


"மாற்ற மொன்றே மாறாதது"

 

"மலைகள் உயரும்  சிகரம் கவிழும்

விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும்

இன்று இருந்தவன் நாளை இல்லை

காலம் காட்டும் உண்மை இதுவே!"

 

"மழை பெய்யுது மண்ணை அரிக்குது

பனி பொழியுது உயிர்களை முடக்குது

வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது

பருவம் செதுக்கும் செயல் இவையே!"

 

"ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே

சிற்றலை மோதும் வடிவம் பலபலவே

காற்று வானம் எல்லாம் மாறுமே

மாற்ற மொன்றே மாறாதது என்றுமே!

 

.............................................................................

 

"சிந்தை சிதறுதடி"

 

"சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி

உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி!

நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே

விந்தை உலகமடா கொடியவன் பூமியடா

கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!"

 

"தீந்தை விழியால் என்னை மயக்கியவள்

சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே!

வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள்

சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள்

சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!"


 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment