அன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்


 இந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள்  வரலாறு அதன்  ஒரு பக்கத்தினையே நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.  
சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான்.
அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், "அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம்.

ஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர்.

அக்காலத்தில் மதுரையை சுற்றிலும் 8000 சமணக் குருமார் இருந்ததை அறிகிறோம். இக் கருத்தை சம்பந்தர் பெருமானே "ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்" என்று கூறி இருக்கிறார்...."எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்" என்று சேக்கிழார் கூறுகின்றார். //
(ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

சேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் "சாமநத்தம்" என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம்.

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சம்பந்த நாயனார் பற்றிய கதையில், அன்று நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சம்பந்தர் சமணத் துறவிகளை, "அனல் வாதம், புனல் வாதம்" இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும், அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. ஆன்மீகம் தொடர்பாக , இரு மதப் பிரிவினராலும் அன்று விவாதிக்கப் பட்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை. சமபந்தர் ஆற்று நீரில் விட்ட சைவ மத ஓலைச் சுவடிகள் மிதந்து வந்து கரையொதுங்கின. அது தான் "புனல் வாதம்".  சம்பந்தர் நெருப்பில் போட்ட ஓலைச் சுவடிகள் எரியவில்லை. அது தான் "அனல் வாதம்".

மதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்தனர். அதாவது, "சமணப் பயங்கரவாதிகள்" நடத்திய "பயங்கரவாத தாக்குதலில்" இருந்து, சம்பந்தர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாராம். அதன் பிறகு தான், சம்பந்தர் தன் மீதான கொலை முயற்சிக்கு பழிவாங்குவதற்காக, அல்லது  "சமணப் பயங்கரவாதிகளின்" கொட்டத்தை அடக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.

திருஞான சம்பந்தர், ஏழாம்  நூற்றாண்டுத் தமிழகத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை நடத்தி இருக்கிறார். போரின் இறுதியில், ஒட்டுமொத்த சமணர்களும் இனவழிப்புச் செய்யப் பட்டனர். பாண்டியன்-சம்பந்தனின் சைவ பேரினவாத அரசு, "எண்ணாயிரம் சமணப் பயங்கரவாதிகளுக்கு கழுவேற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாக" பரப்புரை செய்து வந்துள்ளது.

‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’
என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.//
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

திருஞான சம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், மதுரைப் பொற்தாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றும் காட்சியை சித்திரம் தீட்டிவைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில், ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

திருவோத்தூர் சிவன் கோயிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிறப்பு உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்வித கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமல் இருந்திருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்கு சென்று அங்கு சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தது. இது போன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டில் பழையாறை எனுமிடத்தில் அப்பர் சுவாமிகள் சென்ற பொழுது நடைபெற்றதாக திருத்தொண்டர் புராணத்திலே சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலை கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தை கண்டு வணங்காமல் உணவு கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.
(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)

இதனை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி காலத்தில் தான், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தவரின்  ஆதிக்கம் அதிகரித்தது. சக்கரவர்த்தியின் மனைவியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தாள்.

கிறிஸ்தவர்களின் செல்வாக்கு, அரச குடும்பம் வரையில் வந்து விட்ட பின்னர், சக்கரவர்த்தியை பணிய வைப்பது இலகுவாகி விட்டது. கொன்ஸ்டாண்டின், அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களை கொன்றவன் தான். ஆனால், கிறிஸ்தவனாக மதம் மாறிய பின்னர், பூர்வீக மதத்தை பின்பற்றியவர்களை கொன்றான். வரலாறு நெடுகிலும், அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.

சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியனும், ஐரோப்பாவில் கொன்ஸ்டாண்டின் கொண்டு வந்த அரசியல் மதப் புரட்சியை, தமிழகத்தில் கொண்டு வர விரும்பியிருக்கிறான்.  ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டாண்டினின் அரசியல் சாணக்கியம், தமிழக மன்னனான  கூன் பாண்டியனிடமும் இருந்துள்ளது.

கொன்ஸ்டாண்டின், கூன் பாண்டியன் இருவரது வரலாற்றுக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்திற்குரியது. தமிழகத்திலும், பாண்டியனின் மனைவி தான் முதலில் சைவ மதத்திற்கு மாறியிருந்தாள். சம்பந்தர் அரச குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதாவது கூன் பாண்டியனின் தீரா நோய் ஒன்றை குணப் படுத்திய காரணத்தால், அவனை சைவ மதத்திற்கு மாற்ற முடிந்தது.

ஒரு நாட்டினுள், ஒரு குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் பெற வேண்டுமானால், அந்த நாட்டை ஆளும் மன்னனை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும். அதன் பிறகு, எல்லாம் இலகுவாக முடிந்து விடும். தமது நாட்டினுள் எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மன்னர்களும் மாறி விடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் இலகுவாக ஆட்சி செய்யலாம். அது எங்கேயும் பொருந்தும் அரசியல் பால பாடம்.

கழுவேற்றப் பட்ட எண்ணாயிரம் பேரும் சமண மதக் குருக்கள் அல்லது தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த எண்ணாயிரம் பேர் மட்டுமே சமணர்களாக இருந்திருக்க முடியாது. மதகுருக்கள், தலைவர்கள் கொல்லப் பட்டதும், சாதாரண சமண மக்கள், சைவ சமயத்திற்கு மதம் மாறி இருப்பார்கள்.

தமிழகத்தில் இன்றைக்கும் வாழும் சமணர்கள் வீட்டில் கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் சமண இனவழிப்பு நடந்தாலும், கர்நாடகா மாநிலத்தோடு அண்டிய கொங்கு நாட்டில், சில சமணத் துறவிகள், மலைக் குகைகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சில சமணக் கோயில்களில், இந்துக் கோயில்கள் போன்று பூசைகள் நடைபெறுகின்றன. அங்கு பூசை செய்வோர், பிராமணர் போன்று பூணூல் அணிந்திருப்பதால், உள்ளூர் மக்களால் ஐயர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் வெளியில் தமிழும், வீட்டில் கன்னடமும் பேசுகின்றனர். இன்றைக்கும் சமணர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகாவுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர். (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)

மேலும், பண்டைய காலத்தில் கழுவேற்றும் தண்டனை இருந்ததற்கான பல சரித்திர சான்றுகள் உள்ளன. சம்பந்தர் போன்ற பாசிச சைவ மத அடிப்படையாளர்கள்  மட்டுமல்ல, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் கூட தம்மை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை கழுவேற்றிக் கொன்றதாக, இலங்கை வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது.

வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு "நியாயத்தை" கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், "தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது," ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான்


சைவத் தீவிரவாதியும், கூன் பாண்டிய மன்னனின் ஆதரவும் உள்ள சம்பந்தரின் திருமணவிழாவில் பெருமளவு  தமிழர்கள் கலந்திருப்பார்கள் என த் தோன்றுகிறது.  
ஆத்திரம் என்பது சமணரும் என்பது விதிவிலக்கா என்ன? அவர்கள் திட்டமிட்டபடி சம்பந்தரின் திருமணம் ஆலயத்தில் நடந்தவேளையில் ஆலயத்திற்கு தீ வைத்து சம்பந்தரையும் ,கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களையும் தீயுடன் ஐக்கியமாக்கி [அதிலும் பல தமிழர் கொல்லப்பட்டு]  சமணர் பழி வாங்கிக்கொண்டதனை அவர்கள் சம்பந்தரோடு   இறைபதம் அடைந்தனர் என வரலாற்றினை பின் நாட்களில் அழகுபடுத்திக் கொண்டனர்.

ऐऑऄअइघगधदशषसहख़क़ऌऍऎऊऋञझजछचएग़ज़ड़ढ़फ़

1 comments:

  1. கூன் பாண்டியன் நோயை குணப்படுத்த முடியாத சமணர்கள் நாற்பத்தி எட்டு பேரும் மலையின் உச்சியில் கழுவேற்றப்பட்டதாகவும், எட்டாயிரம் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள தற்போது சாமநத்தம் என்று அழைக்கப்படும் இடத்தில் கழுவேற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது.

    ReplyDelete