நெட்டி முறிப்பது தவறா .....?


நெட்டி முறித்தல் ஆபத்தா

அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?

-எஸ். பிரணவி, சாவகச்சேரி

 


பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

 

அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.

 

நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்பட்டு விலகுகின்றன.

 


மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid  என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.

 

இவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.

 

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.

 

எனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.

 

சவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.

 

நெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.

 

ஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது என்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.

 

நீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.


எனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர் 

0 comments:

Post a Comment