மகாவம்சத்தில் புதைந்துள்ள….( பகுதி 11)

 உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' 

 


புத்தர் தன்னை கடவுள் என்று என்றும் உரிமை கூறவில்லை, அவர் ஒரு மனிதர், தனது அனுபவம் மூலம், நிர்வாணம் அடைவது எப்படி என்பதை போதித்தவர். உண்மையான புத்த மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது. அது மட்டும் அல்ல அது கிறிஸ்துவர், முஸ்லீம், இந்து அல்லது பெளத்தர் போன்ற அடையாளங்களுடன் [லேபிள்களுடன்] அக்கறை இல்லை. மற்றும் புனிதமான நான்கு பேருண்மைகளுடன், அநி­யா­­மாக எந்த உயி­ரையும் கொல்­லாதே. அனைத்து படைப்­பி­னங்­­ளு­டனும் அன்­பாக நடந்­துகொள்,  தானமாக [இலவசமாக] கொடுக்கப்படாத எதையும் எடுக்கக்கூடாது, தவ­றான பாலியல் நடத்­தை­களில் ஈடு­­டாதே, பொய் சொல்­லாதே நேர்­மை­யா­கவும் வெளிப்­­டை­யா­கவும் நடந்து கொள், மது மற்றும் ஏனைய போதைப் பொருள்­களை பயன்­­டுத்­தாதே, என்ற  ஐந்து கட்டளைகளையும் கொண்டுள்ளது. அப்படியாக தன்னையும் நிலைப்படுத்தி, மற்றவர்களையும் அப்படியே மாற்ற போதித்த புத்தர், இயக்கர்களை மாயாஜாலம் காட்டி பயமுறுத்தி, வெருட்டி துரத்தி, தனக்கு என ஒரு இடத்தை கைப்பற்றுவாரா? கொஞ்சம் நடு நிலையாக சிந்தியுங்கள் !

 

தீபவம்சத்தில் கூட, அத்தியாயம் 2 / நாகர்களை வென்றது என்ற பகுதியில் :"இரண்டு நாக படைகளின் தலைக்கு மேலாக காற்றில் மிதந்து, உலகின் தலைவரும் எல்லாம் அறிந்தவருமான அவர், ஒரு ஆழ்ந்த திகிலூட்டும் இருளை உண்டாக்கினார். திகிலுற்று பயந்த நாகர்களால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை  ....  நாகர்கள் பயந்ததை உணர்ந்த அவர், நாகர்கள் மேல் இரக்கப்பட்டு, அருள் புரிந்தார் [Dipavamsa / II. The Conquering of the Nāgas : [Dipavamsa / II. The Conquering of the Nāgas ] Going through the air over the heads of both Nāgas, the Sambuddha, the chief of the world, produced a deep, terrifying darkness. The frightened, terrified Nāgas did not see each other, ...  .when he saw that the Nāgas were terrified, he sent forth his thoughts of kindness towards them, and emitted a warm ray of light.]. இங்கு அவர்களை கலைக்கவில்லை, வெருட்டியதோடு நின்று விட்டது மட்டும் அல்ல, அருளும் புரிகிறார் [ஞான ஒளியும் பாச்சுகிறார்]. எனவே மகாவம்சம், அதற்கு முந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போல், புராணங்கள், புனைவுகள், இயற்கைக்கு மாறான [அமானுஷ்ய] நம்பிக்கைகள், மற்றும் பிரபலமான பாரம்பரியங்களாலும் நிறைந்து உள்ளது தெரிகிறது. உதாரணமாக, பதின்மூன்றாவது அத்தியாயம் மகிந்த வருகையில் [CHAPTEE XIII / THE COMING OF MAHINDA ]: " இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் என்றான்  ....   நான்கு தேரர்களுடனும சுமணனுடனும், பாமர சீடனுமான பந்தூகனுடனும், மனிதர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிய வேண்டுமென்பதற்காக வானில் எழுந்தவர்களாக அந்த விகாரையிலிருந்து கிளம்பினர் [The great Indra  sought out  the excellent thera Mahinda  and said to him: ' Set forth to convert Lanka ; by the Sambuddha also hast thou been foretold (for this) and we will be those who aid thee there  .... with the four theras and  Sumana, and the lay-disciple Bhanduka also, to the end that  they might be known for human beings,  rose up in the air (and departed) from that vihara] என்கிறது.  

 

ஆகவே நாம் இங்கு தேவ லோகத்தையும், இந்திரன், விஷ்ணு போன்ற இந்து மத கடவுள்களையும், தேவர்களையும், காற்றினூடாக பறந்து செல்வதையும்,  இன்னும் அது போன்ற பல மந்திர மாய வித்தைகளையும், உதாரணமாக தன்னை பின்பற்றுபவர்களை மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றுதல் போன்றவற்றையும் காண்கிறோம். இது கட்டாயம் இந்து புராணங்களையும், அங்கு இந்திரன், விஷ்ணுவின் விளையாடல்களையும் மற்றும் பல சம்பவங்களையும் நினைவூட்டுகிறது, உதாரணமாக, ராமாயணத்தில் அனுமான் இதே இலங்கைக்கு காற்றினூடாக பறந்து வந்ததையும், நெருப்பூட்டி பயமுறுத்தியதையும் காண்கிறோம்.

 

ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம். அதனால் தான் மகாவம்சத்தை முழுக்க முழுக்க அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட  இலங்கையின் வரலாற்றின் பிடியில் அகப்பட்டு, இன்று அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை, மீட்டு எடுப்பது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதை காண்கிறோம். வரலாற்றை வரலாற்றுக்காகவும் அறிவிற்காகவும் ஆய்வு செய்ய வேண்டும், அதைவிட்டு, தனக்கு சார்ப்பாக ஒரு தார்மீக அறிவுறுத்தலை மையமாகக் கொண்ட  ஒரு வெளிப்புற நோக்கத்திற்காகவோ, அல்லது அதை திரித்தோ, பொய்யுரைகளை வலுக்கட்டாயமாக சேர்த்தோ, தனது அரசியலின் நோக்கத்திற்காக உருவாக்கக் கூடாது ["The study of history must be for history and knowledge sake. History should never be didactic, nor should it be falsified and made into tools of politics."] என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மகாவம்சத்தை எவரும் அணுகவேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.

 

"புத்தம் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி"


:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம். 

பகுதி: 12 தொடரும்.... அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள....(பகுதி 12):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

0 comments:

Post a Comment