திருக்குறள் -/15/- பிறனில் விழையாமை

முகவுரை-14-

பண்டைய இலக்கியங்களுடனான ஒப்பீடு

குறள் பண்டைய தமிழ் இலக்கிய மரபினைச் சேர்ந்த நூல் மட்டுமன்று; அது "பண்டைய இந்திய ஒருங்கிணைந்த அறநெறி மரபினைச் சேர்ந்த" ஓர் அற இலக்கியப் படைப்பு ஆகும். குறளில் காணப்படும் சிந்தனைகளும் மேற்கோள்களும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், நீதிசாரம், காமசூத்திரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் பலவற்றையும் பல இடங்களில் ஒத்து இருக்கிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். குறளின் போதனைகளில் சில அன்றைய காலகட்ட வடமொழி நீதி இலக்கியங்களான அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களில் காணப்படும் சிந்தனைகளைத் தழுவியிருக்கிறது என்பதை ஐயமின்றித் துணியலாம் என்று சுவெலபில் நிறுவுகிறார்.

 

குறள் தனக்கு முந்தைய தமிழிலக்கிய நூல்களிலிருந்து பெரிய அளவில் சிந்தனைகளையும் செய்யுள் வரிகளையும் பெற்றுள்ளது என்று சுவெலபில் கருதுகிறார். எடுத்துக்காட்டாகக் குறளின் காலத்துக்கு முந்தைய குறுந்தொகையிலிருந்து பல சொல்லமைப்புகளையும், திருமாலைத் துதித்துத் தொடங்கும் நற்றிணையிலிருந்து பல வரிகளையும் திருக்குறளில் காணலாம். அதுபோலவே குறளுக்குப் பிந்தைய நூல்கள் பலவும் குறளின் சொல்லாட்சியினைப் பெரிதும் பின்பற்றுவதையும் காணமுடிகிறது. 10-ம் நூற்றாண்டுக்கு முன் குறளைப் போற்றிப் பல புலவர்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலையும் ஏனைய பிரபந்தங்களும் குறள் வரிகளைத் தங்களுக்குள் பதித்துக்கொண்டுள்ளன.[231] 9-ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட காதல் இலக்கியமான பெருங்கதை பல இடங்களில் குறளின் வரிகளையும் சிந்தனைகளையும் சுட்டுகிறது. 6-ம் நூற்றாண்டு வாக்கில் படைக்கப்பட்ட பெளத்த இலக்கியமான மணிமேகலை தனது 22.59–61 பாடல்களில் குறளைக் மேற்கோள் காட்டுகிறது. சமணத்தைச் சாடும் இந்நூலானது குறளின் சிந்தனைகளைத் தன்னில் ஏற்பது நோக்கத்தக்கது.

 

திருக்குறளின் இரண்டாம் பாலிலுள்ள கருத்துக்கள் பலவும் அர்த்தசாஸ்திரத்தை ஒத்து இருந்தாலும் சில முக்கிய அம்சங்களில் குறள் அர்த்தசாஸ்திரத்திலிருந்து வேறுபடுகிறது. கெளட்டிலியர் கூறுவதைப் போலல்லாது வள்ளுவர் தனது நூலில் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாக அதன் படையினைக் கருதுகிறார். எப்பொழுதும் போரினை எதிர்கொள்ளும் ஆயத்த நிலையில் சீராகவும் சிறப்பாகவும் பயின்று வைக்கப்பட்டு திறன்பட ஒழுகுவோரது தலைமையில் நடத்தப்படும் ஒரு படையானது ஒரு நாட்டின் இன்றியமையா அங்கமாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

குறளின் பொருட்பால் என்பது தார்மீக சிந்தனையின் அடிப்படையில் நன்னெறிகளை உள்ளடக்கிய நூல் என்று ஹஜேலா கூறுகிறார். நாடாளும் அமைச்சர்களில் துவங்கி அரசு அலவலர்களும் வரை மக்கள் அனைவரும் அறம்சார்ந்த வாழ்வினில் மட்டுமே பயணப்பட வேண்டும் என்று குறள் கூறுகிறது. மனுஸ்ருமிருதியைப் போலன்றி குறள் எவ்விதமான பாகுபாட்டு முறைகளுக்கோ ஒரு குறிப்பிட்ட நாட்டை ஆள்பவர்க்கோ முக்கியத்துவம் தருவதில்லை. அருளும் அறமும் கொண்ட எவரும் அந்தணரே என்று குறள் உரைக்கிறது.  தனது காலத்தைய மற்ற நூல்களைப் போலல்லாது குறள் பெண்களைத் தாழ்த்தியோ பிறரைச் சார்ந்த நிலையிலிருத்தியோ செய்யாமல் அவர்களின் தனிதன்மைகளைப் போற்றுகிறது என்று சுவைட்சர் குறிக்கிறார்.

[திருக்குறள் முகவுரை15,  அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது


15. பிறனில் விழையாமை

 

👉குறள் 141:

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்.

 

மு. உரை:

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

கலைஞர் உரை:

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

 

👉குறள் 142:

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையா ரில்.

 

மு. உரை:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

கலைஞர் உரை:

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

 

👉குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்.

 

மு. உரை:

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்

கலைஞர் உரை:

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

 

👉குறள் 144:

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.

 

மு. உரை:

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

கலைஞர் உரை:

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

 

👉குறள் 145:

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.

 

மு. உரை:

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

கலைஞர் உரை:

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

 

👉குறள் 146:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

 

மு. உரை:

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

கலைஞர் உரை:

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

 

👉குறள் 147:

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன்.

 

மு. உரை:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

கலைஞர் உரை:

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.

 

👉குறள் 148:

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்கு.

 

மு. உரை:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காதபெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

கலைஞர் உரை:

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

 

👉குறள் 149:

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோள்தோயா தார்.

 

மு. உரை:

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

கலைஞர் உரை:

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

 

👉குறள் 150:

அறன்வரையானல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.

 

மு. உரை:

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

கலைஞர் உரை:

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.

 

 👉திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

 

0 comments:

Post a Comment