யார் புத்திசாலிகள்? (இளைய/மூத்த பரம்பரையினரின் அறிவுத்திறன் ஒப்புநோக்கு)

காலம் காலமாக அன்றாடம் நாம் எதிர்நோக்கும் வாதங்களில் மேலெழுந்து நிற்பது, ஒரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பரமபரையினரை 'மூளை இல்லாதவர்', 'அறிவே அற்றவர்', 'மந்த சக்தி கொண்டவர்' என்றெல்லாம் விமர்சிப்பது ஆகும். இவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும்போது ஒரு சில அலகுப் பரிமாணங்களைத் தங்கள் அளவுகோலாக உருவாக்கிமற்றையவர் இந்த வகை/பிரிவுக்குள் விழுந்தால் அவரும் தம்மைப்போலவே அறிவாளி என்றும், அல்லாவிடின் சற்று மட்டமானவர் என்றும் முடிவு காணும் ஒரு கணிப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

அறிவுத் திறன், புத்திசாலித்தனம் என்றால் என்ன?
அது, 'பகுத்தறிவு, செயல் திறன் ஆகியவற்றை ஈட்டுவற்கும், பிரயோகிப்பத்ற்குமான ஆற்றல்' எனலாம்.

எவ்வகைச் செயல்திறனை எங்கெங்கு, எப்போது, எவ்வாறு  பிரயோகிப்பது என்பது காலம் காலமாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்தோர் அப்போது தேவையான, முக்கியமான விடயங்களுக்குத் தம் அறிவுத்திறனை உபயோகித்து அன்றைய மேதைகளாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு, பின்னைய கால நிகழ்வுகள், முக்கியங்கள் ஒன்றும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. தேவையாகவும் இருந்ததில்லை. அதேபோல, தற்போதைய சந்ததியினரும் இப்போது தேவையான விடயங்களை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு தற்கால மேதைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கும், முன்னைய விடயங்கள் பற்றி ஓர் அக்கறையும் இருக்கத் தேவை இல்லை. அவசியமும் இருப்பதில்லை.
ஓர் 200 வருடங்களுக்கு முன்னர் ஒருவர், தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாதம் என்பன படித்தால் அவர்தான் ஓர் அறிவாளி; மகா பண்டிதர். அவருக்கு இலக்கிய, புராண, இதிகாச, வேத பாடல்கள், காவியங்கள் என்பன ஆயிரக் கணக்கில் மனப்பாடம் செய்து நுனி நாக்கில் இருக்கும். அப்போது தேர்வு செய்து படிக்க வேறு ஒரு துறைகளும் இருந்தது இல்லை. ஆதலால், குறைவான எண்ணிக்கையுள்ள துறைகளில் நிறைவான அறிவாற்றலை எய்தினார்கள். இவற்றை விட, தொழிற்கல்வி என்பது பரம்பரை வழியில்தான் போதிக்கப் பட்டு வந்திருக்கின்றது.

ஒரு 150 வருடம் முன்னர் சென்றால், இத்துறையோடு எண்கணிதம், சரித்திரம், பூமிசாஸ்திரம், குடியியல் என்று மேலும் பல பாடங்களையும் படித்து மேதைகள் ஆனார்கள். இவர்கள், இவர்களின் முன்னோர்களைப் பார்த்து வெளி உலகமே அறியாத 'விஷயம் தெரியாதவர்கள்' என்று உரைத்திருப்பர்.

இப்போது, ஓர் 100 வருடங்களுக்கு முன்னர், மேலும் பல துறைகளாகிய பௌதிகம், இரசாயனம், தூய கணிதம், பிரயோக கணிதம், விலங்கியல், தாவரவியல், வர்த்தகம், கணக்கியல் என்பன சேர்க்கப் பட்டு இவைகளைப்  படித்தவர்களே 'படித்தவர்கள்' என்று நாமம் சூட்டப்பட்டது.

ஆனால் தற்போதோ, துரித கதியில் முன்னேறியிருக்கும் தொழிநுட்ப உலகில் 'ரொம்பவும் படிச்சவங்க' என்று இருப்பவர்கள் யார் தெரியுமா? இளம் சமுதாயத்தினர் தான்! இவர்கள், பிறக்கும்போதே துரிய கதி இணையம், கணினி, பல் செயல் செல்பேசி, சாமர்த்திய தொலைக் காட்சி, நவீன போக்கு வரத்து வாகனங்கள், செய்மதிப் பிரயாண வழிகாட்டி, விண்வெளிப் பயணம், அணு சக்தி, நானோ தொழில் நுட்பம், அறுவையற்ற சத்திர சிகிச்சை, தானியங்கி கருவிகள், இயந்திர மனிதன் என்று பலவற்றோடு சேர்ந்து பிறப்பதால் இவர்களுக்கு 'அறிவு' என்று சொல்லப்படுவது பழைய கணிதமோ, சரித்திரமோ அல்ல! இவர்கள் பார்வையில் 'அவர்கள்' எல்லாம் கொஞ்சம் 'அறிவு குறைஞ்சவர்கள்' தான்.

பழையவர்கள் பேசும்போது "எனக்கு 16 ஆம் வாய்ப்பாடு வரை பாடம், 50 தொலை பேசி இலக்கங்களை மனதில் வைத்திருப்பேன், 500 திருக்குறள்,  200 கம்பராமாயண, 100 நள வெண்பாக்கள், திருக்குறள், திருவருட்பயன்,  1000 தேவாரங்கள், உலகில் உள்ளமலைகள், ஆறுகள், பழைய, புதிய சரித்திர, அரசியல் வரலாறுகள் எல்லாம் மனப் பாடம். இப்போது உள்ள பிள்ளைகளுக்கு இது ஒன்றுமே தெரியாது, அவர்களால் இயலாது' என்று மட்டம் தட்டிக் கூறுவர்.

இதற்கு இளையோரின் பதில்:

-எமக்கு ஓராம் அல்லது பத்தாம் வாய்ப்பாடு தன்னும் தெரியத் தேவை. 1+1=2 என்ற கூட்டல்கூடித் தெரியத்தேவை இல்லை. எண்ணிக்கை தெரியாமலேயே ஒரு கை நிறையக் கொஞ்சம் சில்லறைகளையும், ரூபாய்த் தாள்களையும் ஓர் இயந்திரத்தின் உள்ளே தள்ளினால் மிகுதிப் பணத்தைப் பிழையே விடாமல் வெளியே தள்ளும் தொழில்நுட்பம் இப்போது உள்ளது. இந்த வாய்ப்பாடு என்பது இப்போது தேவைப்படுவதே இல்லை.

-எமது சொந்தத் தொலைபேசி இலக்கத்தையே நான் நினைவு வைத்திருக்கத் தேவை இல்லாத அளவுக்கு, எத்தனை இலக்கங்களையும் சேமித்து வைக்கக் கூடிய வசதி இருக்கும் போது வீணாய் ஏன்தான் மனதில் பதிக்க வேண்டும்?

-எல்லோருமே தமிழ் பண்டிதராகத் தேவை இல்லை. பண்டிதர் ஆனாலும் எல்லாவற்றையும் பாடமாக்கவும் அவசியம் இல்லை. எல்லாம் இணையத்தில் இருந்து தேவைப்படும்போது நொடிப் பொழுதில் பெற்றுக்கொள்ள நம் கை நுனியில்தான் ஒரு பொருள் இருக்கின்றதே! -மேலும், உலகத்தில் உள்ள இயற்கைகள், பழைய அரசியல் கதைகளை அறிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறீர்கள்? எல்லோருமே அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆகும் நோக்கமா?

அக்காலங்களில், ஒரு பாடத்திட்டத்தினைப் போட்டு, அதன்படி படிப்பித்து, கேள்விகளை சொல்லி, அவற்றிற்கான பதிலகளையும் கொடுத்து, பரீட்சையில் அதே கேள்விகளைக் கேட்டு, சொல்லப்பட்ட மறுமொழிகளை எழுதினால் மட்டும்தான் 100 புள்ளிகள் கிடைக்கும். எதிர்க் கேள்விகளோ, மாறுபட்ட கருத்துகளோ வழங்கினால் அவர் 'அடங்காதவர்' என்று வர்ணிக்கப்படுவார். தேவையோ, தேவை இல்லையோ, சரியோ, பிழையோ சொன்னதைக் கேட்டு அடங்கி இருந்து சித்தி பெற்று அறிஞன் ஆகவேண்டும். ஆனால் இப்பொழுதோ, மூளைக்குள் போடுவதற்கு அவசியமானதும், வாழ்க்கைக்குத் தேவையானதும், தொழில் நுட்பத்தோடு சேர்ந்து ஒடக்கூடியதுமான பல விடயங்கள் இருக்கின்றன. தற்கால ஓட்டத்திற்கு உதவாத சரக்குகளை மூளைக்குள் திணிக்க முயல்வது ஏற்கப்பட முடியாத ஒன்று. மாணவர் படிக்கும்போது தங்கள் சுய சிந்தனா சக்திகளை நவீன யுக்திகளின் ஊடே விருத்தி செய்வதற்கு மிகவும் ஊக்கம் அளிக்கப் படுகின்றன.
தற்போது பிள்ளைகள் பிறக்கும்போதே கூரிய அறிவுடையவர்களாகப் பிறக்கின்றார்கள் என்பது நேரில் காணும் ஓர் உண்மை. அத்தோடு விரைவில் உடம்பு பிரட்டித், தவழ்ந்து, நடக்கவும் தொடங்குகின்றார்கள். ஓர் 50 வருடங்களுக்கு முன்பு 3 வயசிலே ஒரு குழந்தை கதைக்கப் பழகினால் பெரும் வியப்போடுபார்த்தோம். ஆனால் இப்போதோ 2 வயசுக்கு முன்னரே 'வழ வழ' என்று கதைக்கும் மழலைகளை நேரில் காண்கின்றோம்.

மொத்தத்தில், இக்காலச் சிறார்கள் தற்போது தேவையான பல துறைகளிலும் சிறு, சிறு அத்தியாய அறிவுதனைப் பரவலாகப் பெற்றுள்ளனர். இவ்வறிவுத் திறன்களைத் தங்கள் குழந்தைப் பராயத்திலிருந்தே அடையத் தொடங்கி விடுகின்றார்கள். இவர்கள் எந்த விதமான சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தங்களை மாற்றி அமைத்து, அதனுள் புகுந்து வெற்றி பெரும் ஆற்றலைப் பெற்று இருக்கின்றார்கள்.தற்காலத்துக் காக்கா கூடி வாயைத் திறந்து பாட்டுப் படிக்காது; தன் வடையைக் காலுக்குள் வைத்துவிட்டுத்தான் நரிக்குப் பாட்டுப் படித்துக் காட்டும்! ஏனென்றால் அதுவும் ஒரு நவீன காகம் என்பதால்!

என்றாலும், பெரியவர்களிடம் இருக்கும் அன்பு, பாசம், நேர்மை, கூட்டுறவு, தர்ம நெறி, மரியாதை செய்தல், சகிப்புத் தன்மை என்பது போன்ற நல்ல குணங்கள் இன்றைய சிறார்களிடம் சற்றுக் குறைவாகவே காணப்படுகிறன. போட்டி போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு, அவசியமற்ற செலவுகள் செய்ய, ஓடி ஓடி நீண்ட நேரம் பணம் சேர்க்கும் முயற்சிகளில் மூழ்கி இருப்பதால், மன அழுத்தம் நோயினால் பீடிக்கப் படுகின்றார்கள். பார்த்தால், அந்தந்தக் காலத்தில் எல்லோருமே அவ்வக் காலத்துப் பண்டிதர்கள் தான்! பண்டிதர்களைக் காலம்தான் சமயத்திற்கு ஏற்றவாறு உருவாக்குகின்றது. எவருக்கும் எவரும் சளைத்தவர்கள் இல்லை.

அறிஞர்கள், ஐன்ஸ்டைன், நியுட்டன், கலிலியோ,எடிசன், ரைட், மார்கோனி எனப் பலருமே பழையவர்கள் தானே! இவர்கள் முன்பாக தற்போதைய அறிவாளிகள் நிற்க முடியுமா?

முடிவாக, முன்னையோர் தங்கள் உயரிய பழைய பெரும் சரித்திரங்களைப் பற்றிப் பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போதையவர்களோ பெருமைப் படவேண்டிய சரித்திரங்களைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

                                ஆக்கம்:   -செல்வதுரை சந்திரகாசன் 

3 comments:

  1. எங்கள் அவ்வை யின் வெண்பா பலவிதிகளின் கீழ் பாடப்பட்டது.அப்படி தற்காலத்தில் யாராலும் அமைக்க முடியவில்லை.
    அப்போ பாட்டிதானே அதி புத்திசாலி.

    ReplyDelete
  2. எம் சமுதாயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது,பிள்ளைகள் ஏதாவது கேள்விகள் கேட்டால் அறிவு பூ ர்வமாகப் பதில் கூ றாது, வாயை மூடிக் கொள் என அதட்டுவார்கள்.அல்லது உனக்கு அது விளங்காது எண்டு முடித்துவிடுவார்கள்.அத்துடன் பெரியோருக்கு எல்லாவற்றிற்கும் பயந்தவர்களாகக் காணப்படும் பிள்ளைகள் இப்படியான சூ ழ்நிலையில் பிள்ளைகள் எப்படிப் புத்திசாலியாகலாம்.

    ReplyDelete
  3. பழைய காலத்தில் இருந்தவர்கள் திறமை அதிகம் நிறைந்தவர்கள் குறைவு ஆனால் அப்படி திறமையாக இருஇந்தவர்கலும் மிகை மிஞ்சிய அறிவு திறமை இருஇந்தது உண்மை உதாரணம் பழையகாலத்து இலக்கியம் சான்றாக .இருக்குது ..இந்த காலத்தில் பறந்து பட்ட அறிவு பலரிடம் இருக்குது
    அதனால் .அவர்களின் சிந்தனை அடுத்த பரம்பரைக்கு கடத்தப்படும் என்பதும் விஞ்சானம் /.இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் முளை வளர்ச்சி கூடிய குழந்தைகளாகவும் வளருது

    ReplyDelete