நான்மணிக்கடிகை/18/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்….


சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.


தொடர்ச்சி……

 

86.👇👇👇

பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!

தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!

அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,

செல்லா இடத்துச் சினம்.    

:-நண்பனை நன்மையின் பாற் செலுத்தி நல்வாழ்வில் உயர்த்துக; பகைவரைக் காலமறிந்து தாக்கி வெற்றிக் கொள்க; யாராயினும் அடுத்தடுத்து உண்ணுவதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். செல்லத் தகாத இடத்தில் சினத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

 

87.👇👇👇

மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய

நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த

தூணின்கண் நிற்கும், களிறு.

:-கெடுவானிடத்தில் சோம்பல் இருக்கும். சான்றோர் விரும்பாதவற்றைச் செய்பவர் தீமையை அடைவர். நல்லியல்புடைய மகளிர் 'நாணம்' என்னும் எல்லையில் நிற்பர். யானை தூண் வலுவில் நிலை பெறும்.

 

88.👇👇👇

மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு

வென்றி அறிப அரசர்கள்; என்றும்

வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,

அணங்கல் வணங்கின்று, பெண்.  

:-அந்தணர்கள் மறை அறிவர். அரசர் முறையும், வெற்றியும் அறிவர். சான்றோர்க்கு அணிகலம், வணக்கமுடையவராய் இருத்தல். பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வம் தொழார்.

 

89.👇👇👇

பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,

பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,

சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,

கொன்றான்மேல் நிற்கும், கொலை.      

:-நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டொழுகுவாள். அன்பில்லாதவள் (மனம் பொருந்தாதவள்) கணவன் காவல் செய்யினும் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித்து ஒழுகுவாள். காமவியல்புகள் எவ்வளவு இடையூறு ஏற்படினும் முன் நிகழ்ந்தவாறே நடக்கும். கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.

 

90.👇👇👇

வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற

மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்

கயம் பெருகின், பாவம் பெரிது.   

:-அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும். மனையாள் மாட்டுக் கருணை மிகுந்தால் இனம் பெருகும். அருள் மிகுந்தால் அறம் மிகும். கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..பகுதி:19 வாசிக்க அழுத்துக... Theebam.com: நான்மணிக்கடிகை/19/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..:


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, பெருகின், இலக்கியங்கள், மிகுந்தால், பெருகும், பதினெண், நிற்கும், ஒழுகும், கீழ்க்கணக்கு, நான்மணிக்கடிகை, மிகும், எவ்வளவு, அறம், அறிவர், வன்கண், அணிகலம், வேண்டும், கொள்ள, சங்க, நிற்பர், பெண்டிர், சான்றோர்க்கு, அறிப, பெண்

0 comments:

Post a Comment