திருக்குறள்...-/41/-கல்லாமை






திருக்குறள் தொடர்கிறது...


41 - கல்லாமை

 

👉குறள் 401:

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.

மு.வ உரை:

அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல், கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

கலைஞர் உரை:

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

English Explanation:

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

 

👉குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.

மு.வ உரை:

(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

கலைஞர் உரை:

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

English Explanation:

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

 

👉குறள் 403:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

மு.வ உரை:

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

கலைஞர் உரை:

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால், கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

English Explanation:

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

 

👉குறள் 404:

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்

கொள்ளார் அறிவுடை யார்.

மு.வ உரை:

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர் உரை:

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

English Explanation:

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

 

👉குறள் 405:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

மு.வ உரை:

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர் உரை:

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

English Explanation:

51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of).

 

👉குறள் 406:

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

மு.வ உரை:

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

கலைஞர் உரை:

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

English Explanation:

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

 

👉குறள் 407:

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்

மண்மாண் புனைபாவை யற்று.

மு.வ உரை:

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

கலைஞர் உரை:

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

English Explanation:

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

 

👉குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

மு.வ உரை:

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

கலைஞர் உரை:

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

English Explanation:

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

 

👉குறள் 409:

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.

மு.வ உரை:

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை:

படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

கலைஞர் உரை:

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

English Explanation:

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

 

👉குறள் 410:

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்.

மு.வ உரை:

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

சாலமன் பாப்பையா உரை:

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

கலைஞர் உரை:

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

English Explanation:

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

 

 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்.

👉அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

Theebam.com: திருக்குறள்.../42/-கேள்வி:

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

 

0 comments:

Post a Comment