திருக்குறள்.....-/40/-கல்வி




திருக்குறள் தொடர்கிறது.....


40. கல்வி

 

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

மு.வ உரை:

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

கலைஞர் உரை:

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

English Explanation:

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

 

குறள் 392:

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும். உயிர்க்கு.

மு.வ உரை:

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

கலைஞர் உரை:

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

English Explanation:

Letters and numbers are the two eyes of man.

 

குறள் 393:

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.

மு.வ உரை:

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

கலைஞர் உரை:

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

English Explanation:

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.


குறள் 394:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

மு.வ உரை:

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

கலைஞர் உரை:

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

English Explanation:

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

 

குறள் 395:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.

மு.வ உரை:

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

கலைஞர் உரை:

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

English Explanation:

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

 

குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

மு.வ உரை:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சாலமன் பாப்பையா உரை:

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

கலைஞர் உரை:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

English Explanation:

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

 

குறள் 397:

யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.

மு.வ உரை:

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

சாலமன் பாப்பையா உரை:

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

கலைஞர் உரை:

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

English Explanation:

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?

 

குறள் 398:

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து.

மு.வ உரை:

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கலைஞர் உரை:

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

English Explanation:

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

 

குறள் 399:

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

மு.வ உரை:

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

கலைஞர் உரை:

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

English Explanation:

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.

 

குறள் 400:

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

மு.வ உரை:

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

கலைஞர் உரை:

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

English Explanation:

Learning is the true imperishable riches; all other things are not riches.

 

 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்.

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 


அடுத்த பகுதியினை வாசிக்க, அழுத்துக...
Theebam.com: திருக்குறள்...-/41/-கல்லாமை

0 comments:

Post a Comment