நட்பதிகாரம்- சிறு கதை



"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு."

 

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான கண்டி நகரத்தை அண்டிய ஒரு சிறிய கிராமத்தில், உருளும் மலைகளுக்கும், மின்னும் நதிக்கும் இடையில் இரண்டு பிரிக்க முடியாத நண்பிகளாக, ஒளவை மற்றும் வள்ளி வாழ்ந்தனர். அவர்களின் பந்தம் அந்த கிராமத்தின் ஆற்றங் கரையில் உயர்ந்து பத்தையாக ஒன்றாக நிற்கும் மூங்கில் மரங்களைப் போல நீடித்தது. அது கருங்கூந்தலை வாரிச் செல்லும் மென் காற்றைப் போலவும் குளிர்ந்த மாலையில் ஒரு சூடான அடுப்பு போலவும் அவர்களுக்கு ஆறுதலளித்தன.

 

ஒரு இதமான சூரிய ஒளிமிக்க மதியம், மென்மையான காற்று தேயிலைச் செடிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தது. அந்த கிராமத்தில், ஆண்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பெரிய திருவிழா அறிவிக்கப்பட்டது. இது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து எல்லோருக்கும் உற்சாகம் தரக்கூடியதாக பலவிதமான போட்டிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிலும் முக்கியமானது கிராமங்களுடனும் தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையுடனும் நேரடியாக தொடர்பு உடைய போட்டிகளாகும்.  ஆனால் வள்ளி இம்முறை பின்வாங்கியதுடன் அவளது பிரகாசமான புன்னகை மங்கிப்போய், அவளுடைய தோழிக்கு கவலையையும் குழப்பத்தையும்  ஏற்படுத்தியது.

 

"கோனக்கோன மலையேறி

தேயிலைக்கு கொழுந்து பறிக்கையிலே

பொல்லாத காற்று வர

குளவிக்கூடு உடைந்து சிதறவே

வள்ளியின் அம்மா தடுக்கிவிழ

முட்டி மோதி குளவி கொட்டியதே!"   

 

அது தான் காரணமோ ? முல்லை கொஞ்சம் சிந்தித்தாள். இவ்வாறான குளவிக் கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம்பெற்று வந்தாலும், பெருந்தோட்ட நிர்வாகிகள் அதை பெரிதாக பொருட்படுத்தாமலும் இது தொடர்பில் தீர்வொன்றை இன்னும் வழங்காமலும் இருப்பது அவளுக்கு ஒரு கவலையாக இன்னும் இருக்கலாம் என்று யோசித்தாள். அடுத்த நாள் மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்கி, கிராமத்தின் மீது ஒரு தங்க நிறத்தை வீசியது, வள்ளி ஆற்றங்கரையில் தனியாக உட்கார்ந்து, கனத்த இதயத்துடன் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் முல்லை கவனித்தாள். பொதுவாக தன்னையும் கூடிக்கொண்டு ஆற்றங் கரையில் இருந்து இயற்கை அழகை ரசித்து பாடிப் பேசி மகிழும் வள்ளி ஏன் இப்படியென தன் தோழியின் மீது அக்கறை கொண்ட முல்லை, புல்வெளிகள் வழியாகச் துள்ளிச் செல்லும் மான் போல, வேகத்துடன் அவளை அணுகினாள்.

 

"ஆற்றோரம் அங்கே வீற்றிருக்கும் வள்ளியே

உற்சாகம் இழந்த கோபம் எனோ?

கற்பாறையில் கலங்கி அழும் தோழியே  

சுற்றத்தார் மகிழ கொண்டாட வேண்டாமோ?

ஆற்றல்மிக்க என் பிரிய நண்பியே 

கற்ற வித்தையை போட்டியில் காட்டாயோ?" 

 

"அன்புள்ள வள்ளி, உன்  இதயத்தில் என்ன பாரம்?" முல்லை அவள் அருகில் அமர்ந்து, அவள் கருங்கூந்தலை வருடி வருடி மெதுவாகக் கேட்டாள். வள்ளி தயங்கினாள், என்றாலும் ஆறுதலுக்கான ஏக்கம் அவளுடைய தயக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவள் தான் சுமந்து கொண்டிருந்த பாரத்தை வெளிப்படுத்தி முல்லையிடம்  தன் இதயத்தைத் முழுதாகத் திறந்தாள் - திருவிழா கொண்டாட்டத்தில்  நடக்கவிருக்கும் நெசவுப் போட்டியில் சிறந்து விளங்காமல் தன் குடும்பத்தின் பாரம்பரியத்தை வீழ்த்திவிடுமோ என்ற பயம் தான் அவளை வருத்தியது. நெசவு என்பது தலைமுறை தலைமுறையாக அவளது குடும்பத்தின் கைவினைப்பொருளாக இருந்து வந்தது, வள்ளியின் தாய்தான் குடும்பத்தின் சார்பாக முன்னின்று கலந்து கொள்வார். ஆனால் இம்முறை குளவிக் கொட்டு சம்பவத்தால், வள்ளி தான் அந்த பொறுப்பை எடுக்க வேண்டும். அதுதான் தன குடும்பத்தின்  மரியாதையை நிலைநிறுத்துவதற்கு தனது திறமைகள் போதுமானதாக இல்லை என்று அவள் பயந்தாள்.

 

"சின்னச்சின்ன இழை பின்னி வரும்

சித்திரக் கைத்தறி சேலையடிஇடையைச் 

சுற்றி அழகைக்கொட்டி தோளில் தொங்குமடி    

மக்கள் மகிழும் பொன்னாடை தரும்

தன்மானம் காக்கும் புடவையடி - அது

உங்கள் கலையம்சம் நிறைந்த பட்டாடையடி!"

 

முல்லை கவனமாகக் கேட்டாள்,  அவளுடைய கண்கள் பச்சாதாபத்தால் நிறைந்தன. முல்லை ஓடிவந்ததால், தன் மெல்லிய இடையில் இருந்து கொஞ்சம் நழுவிக்கொண்டிருக்கும் தனது ஆடையை சரிப்படுத்தி, அதை கையால் பிடித்தபடி தனது மற்ற கையை நீட்டி வள்ளியின் கையைப் பற்றிக்கொண்டாள். "அன்பு நண்பியே, உங்கள் குடும்பத்தின் மதிப்பு பாராட்டுக்களால் அல்லது போட்டி வெற்றிகளால் மட்டும் அளவிடப்படவில்லை. உங்கள் குடும்பத்தின் பாரம்பரியம் நெசவுத் திறமையால் மட்டும் வரையறுக்கப்படவில்லை, ஆனால் உங்கள் பரம்பரை தலைமுறைகளாகக் கடந்து வந்த அன்பு மற்றும் இரக்கத்தால் வரையறுக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம்  நீங்கள் திறமையானவர், மற்றும் நான் என் முழு மனதுடன் உன்னை நம்புகிறேன்." 

 

அவளுடைய வார்த்தைகள் வள்ளியின் கலங்கிய உள்ளத்தில் ஒரு இனிமையான தைலமாக இருந்தது, என்றாலும் வள்ளியின் கண்களில் கண்ணீர் பெருகியது. முல்லை தன் தோழியை சமாதானப்படுத்தினாள், அவள் அந்த போட்டியின் பொழுது முழுநேரமும் வள்ளியின் பக்கத்தில் நிற்பதாக உறுதியளித்தாள், விளைவு எதுவாக இருந்தாலும் போட்டியில் ஈடுபடுவது முக்கியம் என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினாள்.

 

நாட்கள் உருண்டோடியது, முல்லை வள்ளியின் வலிமையின் தூணாக மாறினாள், அதுமட்டும் அல்ல, தாய் இன்னும் நலமாகவில்லை என்றாலும், படுத்த படுக்கையிலும் தன் மகள் வள்ளிக்கு நெசவுகளின் நுணுக்கங்ககளை விளங்கப்படுத்தி வழிநடத்தியதுடன், முல்லையின் நட்பும் இருப்பும் ஒவ்வொரு அடியிலும் அவளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் முல்லை, வள்ளியின்  திறமைகளைப் பயிற்சி செய்தும், பரிபூரணப்படுத்தியும் பல மணிநேரம் ஒன்றாகச் செலவழித்ததால் அவர்களது நட்பு மேலும் வலுவடைந்தது. அவர்கள் ஒன்றாக சிரித்தனர், ஒன்றாக அழுதனர், ஒவ்வொரு சிறிய வெற்றியையும் ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடினர்.

 

இறுதியாக, திருவிழா கொண்டாட்ட நாள் வந்தது, கிராம சதுக்கம் உற்சாகத்தில் சலசலத்தது. வள்ளியின்யின் இதயம் ஒரு குதிரையின் குளம்புகளைப் போல துடித்தது, அவள் தறிக்கு முன்னால் நின்றாள், அவளுடைய செயல்திறனை காண பல ஆர்வமுள்ள கிராம மக்கள் வள்ளியை சூழ்ந்து நின்றனர். வள்ளி அவர்களைப் பார்த்து பதற்றம் அடையவில்லை. முல்லை தன் அருகில் நிற்பதாலும், தாயின் அறிவுரைகளும் அவளுக்கு ஆறுதல் கொடுத்துக்கொண்டு இருந்தன. இரண்டு கொடிகள் ஒன்றாக வளர்ந்தது போல வள்ளியும் முல்லையும் மகிழ்வாக எல்லோரையும் வரவேற்றனர்.

 

போட்டி தொடங்கியதும், வள்ளி துல்லியமாகவும் ஆர்வத்துடனும் நெசவு செய்ய தொடங்கினாள். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியால் வழிநடத்தப்பட்டதைப் போல அவளது  விரல்கள் தறியின் மீது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் விளையாடிக்கொண்டு இருந்தன. சிக்கலான அழகான வண்ண வண்ண வடிவங்கள் வெளிப்பட்டன, அவளுடைய திறமையை மட்டுமல்ல, அவளுடைய அன்பான தோழி அவள் மீது பொழிந்த அன்பையும் ஊக்கத்தையும் அது பிரதிபலித்துக்கொண்டு வெளியே வந்து கொண்டு இருந்தன.

 

"கட்டுகளில் இருந்து நூல் அவிழ

பயத்தில் இருந்து துணிவு பிறந்ததே!

நூல் இழையை நுணுக்கமாக பின்ன

கைகள் தட்டி உற்சாகம் மலர்ந்ததே!

புத்தம்புது ஆடை வண்ணமாக ஒளிர

வெற்றி பிறந்து மரியாதை நிலைத்ததே!"

 

கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்ய, நெசவு போட்டியில் வள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவள் பரிசைப் பெற முன்னோக்கிச் சென்றபோது, ​​பெருமையுடன் பிரகாசித்த முல்லையை பார்த்தாள், ஏனெனில் அது வள்ளியின் வெற்றி மட்டுமல்ல, அவர்களின் நட்பின் வலிமைக்கான சான்றாகவும் இருந்தது.

 

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு"

 

நன்றி

 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்


0 comments:

Post a Comment