திருக்குறள்.../42/-கேள்வி


திருக்குறள் தொடர்கிறது



42. கேள்வி

👉குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.

மு.வ உரை:

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் உரை:

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

English Explanation:

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

 

👉குறள் 412:

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

மு.வ உரை:

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

கலைஞர் உரை:

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

English Explanation:

When there is no food for the ear, give a little also to the stomach.

 

👉குறள் 413:

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

மு.வ உரை:

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா உரை:

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

கலைஞர் உரை:

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

English Explanation:

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

 

👉குறள் 414:

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

கொற்கத்தின் ஊற்றாந் துணை.

மு.வ உரை:

நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

கலைஞர் உரை:

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

English Explanation:

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

 

👉குறள் 415:

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வ உரை:

ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

சாலமன் பாப்பையா உரை:

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

கலைஞர் உரை:

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

English Explanation:

The words of the good are like a staff in a slippery place.

 

👉குறள் 416:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.

மு.வ உரை:

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

கலைஞர் உரை:

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

English Explanation:

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

 

👉குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.

மு.வ உரை:

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

கலைஞர் உரை:

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

English Explanation:

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).

 

👉குறள் 418:

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

மு.வ உரை:

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை:

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

கலைஞர் உரை:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

English Explanation:

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

 

👉குறள் 419:

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது.

மு.வ உரை:

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

கலைஞர் உரை:

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

English Explanation:

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

 

👉குறள் 420:

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.

மு.வ உரை:

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

சாலமன் பாப்பையா உரை:

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

கலைஞர் உரை:

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

English Explanation:

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear?

 

 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்.

  👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 

 Theebam.com: திருக்குறள்...-/43/-அறிவுடைமை:


👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க ...அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து:

0 comments:

Post a Comment