திருக்குறள்...-/57/-வெருவந்த செய்யாமை


திருக்குறள் தொடர்கிறது




57. வெருவந்த செய்யாமை

 

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து.

மு.வ உரை:

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

கலைஞர் உரை:

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

English Explanation:

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

 

குறள் 562:

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

மு.வ உரை:

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

கலைஞர் உரை:

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

English Explanation:

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

 

குறள் 563:

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

கலைஞர் உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

English Explanation:

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

 

குறள் 564:

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

English Explanation:

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

 

குறள் 565:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்ன துடைத்து.

மு.வ உரை:

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

கலைஞர் உரை:

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

English Explanation:

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

 

குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.

மு.வ உரை:

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

English Explanation:

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

 

குறள் 567:

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.

மு.வ உரை:

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

English Explanation:

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

 

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு.

மு.வ உரை:

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

கலைஞர் உரை:

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

English Explanation:

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

 

குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.

மு.வ உரை:

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை:

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

கலைஞர் உரை:

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

English Explanation:

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

 

குறள் 570:

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.

மு.வ உரை:

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

கலைஞர் உரை:

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

English Explanation:

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்...-/58/-கண்ணோட்டம்

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

0 comments:

Post a Comment