திருக்குறள்... -/60/-ஊக்கம் உடைமை


திருக்குறள் தொடர்கிறது


60. ஊக்கம் உடைமை

👉குறள் 591:

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்

உடைய துடையரோ மற்று.

மு.வ உரை:

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

சாலமன் பாப்பையா உரை:

ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

கலைஞர் உரை:

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

English Explanation:

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?

 

👉குறள் 592:

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

மு.வ உரை:

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

கலைஞர் உரை:

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

English Explanation:

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

 

👉குறள் 593:

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்

ஒருவந்தங் கைத்துடை யார்.

மு.வ உரை:

ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

கலைஞர் உரை:

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

English Explanation:

They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."

 

👉குறள் 594:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

மு.வ உரை:

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

சாலமன் பாப்பையா உரை:

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

கலைஞர் உரை:

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

English Explanation:

Wealth will find its own way to the man of unfailing energy.

 

👉குறள் 595:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு.

மு.வ உரை:

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

சாலமன் பாப்பையா உரை:

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

கலைஞர் உரை:

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

English Explanation:

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.

 

👉குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

மு.வ உரை:

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

கலைஞர் உரை:

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

English Explanation:

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

 

👉குறள் 597:

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.

மு.வ உரை:

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

கலைஞர் உரை:

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

English Explanation:

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

 

👉குறள் 598:

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.

மு.வ உரை:

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

சாலமன் பாப்பையா உரை:

ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

கலைஞர் உரை:

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

English Explanation:

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality"

 

👉குறள் 599:

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

மு.வ உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

சாலமன் பாப்பையா உரை:

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

கலைஞர் உரை:

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

English Explanation:

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

 

👉குறள் 600:

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு.

மு.வ உரை:

ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

சாலமன் பாப்பையா உரை:

ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

கலைஞர் உரை:

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

English Explanation:

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/61/-மடி இன்மை

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

0 comments:

Post a Comment