பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம் [01/06]



ஒரு சிறு தொகுப்பு :
 [Science in the Ancient Tamil Poetries  ]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

பகுதி:01"முன்னுரை "

நாம் இப் பொழுது பாடசாலையில் பயிலும் போது ஆங் ஆங்கே  சில விஞ்ஞான ,கணித உண்மைகளை,சான்றுகளை   படிக்கிறோம். பொதுவாக  நாம் நம்புவது ,விளங்கிக்கொள்வது ,இந்த உண்மைகளை, சான்றுகளை  கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் மேல் நாட்டவர்கள் என்று.ஆனால் பல உண்மைகள்நிறுவல்கள்  எமது பண்டைய தமிழ் பாடல்களில் புதைந்து உள்ளது. அவர்கள் விட்ட தவறு ,அந்த உண்மைகளை மேலும் ஆராய்ச்சி செய்யாததும்,அவைகளை ஆதாரத்துடன் சான்று பகராததும் ஆகும்.

 

அவர்கள் ஒரு அனுபவ ,உணர்வு வழியில் அவைகளை மேலோட்டமாக அறிந்து வைத்துள்ளார்கள்அவைகளை  ஆங்  ஆங்கே பாடல்களில் உவமையாகவும் ,எடுத்துக்காட்டாகவும்  கூறியுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்குமேல் முயற்சி செய்யவில்லை. இப்போது நாம் அவர்களின் அந்த பாடல்களை நுணுக்கமாக அணுகும்போது ,எமக்கு தெரிந்த ,நாம் கற்ற அந்த உண்மைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழர்களுக்கு ,எமது மூதையர்களுக்கு தெரிந்து இருப்பதையிட்டு ஆச்சரியமாகவும், அதே நேரம் அந்த பெரும் விஞ்ஞான உண்மைகளை வெறும்  உவைமைகளாக  மட்டுமே பாவித்தார்கள் என்று அறியும் போது கோபமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது ,

உதாரணமாக கணிதத்தில் ,மிகச் சிறிய  பின்னம்:

[ இம்மி,அணு,வெள்ளம்,நுண்மணல், தேர்த்துகள்] முதல்   மிகப் பெரிய எண் [சங்கம்,வெள்ளம்.ஆம்பல், மத்தியம்,பரார்த்தம்,பூரியம்.....,கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல்,..... என்பவை அந்த எண்கள்.] வரை கூறியிருப்பதுடன் வட்டம், செங்கோண முக்கோணம் போன்றவற்றின் சில இயல்புகளையும் கூறியுள்ளார்கள்.அதே போல அணுவைப்பற்றி ["சாணிலும் உளன் ; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட கோணினும் உளன்"-கம்பமராமாயணம் - இரணியன் வதைப் படலம்- ], தாவரங்களின் உணர்வைப்பற்றி,சூரியனை கிரகங்கள் சுற்றுவதைப்பற்றி ,வானவில்லின் தோற்றத்தைப்பற்றி, மழையின்  தோற்றத்தைப் பற்றி, உலோக வார்ப்பு  பற்றி  ["முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே  மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி..."-குறுந்தொகை 155] கல்லணை பற்றி ["... கொடும் சிறை  மீது அழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர"-அகநானூறு 346], கட்டிட கலை பற்றி ["நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கிபெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து"  -நெடுநல்வாடை(72- 78)],வானில் செல்லும் இயந்திரம் பற்றி [“வலவன் ஏவா வான ஊர்தி“-புறநானூறு 27],கடற்கோள் பற்றி [பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும்  கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும்  இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’-சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம்]

-இப்படி கூறியது மட்டுமல்ல ,இன்றைய நாகரிக உலகில் நம் பெண்கள் தம்மை அழகு இராணியாக்க கையாளும் "பூச்சிய உடல் பருமன் அளவை"க்கூட  சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காதலன்,காதலியை வர்ணிக்கும் உவமை மூலம் கூறிவிட்டார் என்றால் பாருங்களேன்!

இதோ அந்த பாடல்:

[சிலப்பதிகாரம்:கி. பி.முதலாம் /இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ]

வேறு (திணை நிலைவரி)/சிலப்பதிகாரம்:

"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்

உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்

மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்

இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.  [17]

 

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை

நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்

வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல

நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.  [18]

 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்

கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்

பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து

வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." [19]

 

இதன் பொருள்:

 

:உன்  தமையன்மார் கடலில்  அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும்.இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே

 

:உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ  அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய் நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை  வளைந்து முரியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே

 

:உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார்நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும்  உன் புருவத்தால் கொல்வாய். இப்பொழுதே உனது பாரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது. அதனையும் இழந்துவிடாதே

 

எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார்  என்று பாருங்கள். மேலும் இடை முறிந்து[ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை  என்பதை அறியலாம். இடை பருமன்  பூச்சியத்தை  அடைந்தத பின் தானே முறியலாம் ?

நாம் இனி மேற்கூறிய சிலவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

பகுதி:02  தொடரும்.. வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[பகுதி:02.OF.06]:



ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? -

 மருத்துவ நிபுணர் தரும் விளக்கம்


நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.


அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

உலக சுகாதார அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அந்த ஆண்டு மட்டும் 4.60 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

 

குழந்தைகளுக்கு 4 % - 20 % வரை ஆஸ்துமா தாக்கம் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா இறப்புகள் பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது.

 

உலக ஆஸ்துமா தினம் ஏன் ?

ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.

 

ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

இதன்படி, ஆஸ்துமா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அறிவித்து வருகிறார்கள். இதன்படி, உலக ஆஸ்துமா தினம் 2022ம் ஆண்டிற்கு "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற மையக் கருத்தை வெளியிட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் ஆஸ்துமா ஏற்படும்?

ஆஸ்துமா நோய் யாருக்கெல்லாம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆஸ்துமா, அலர்ஜி மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி.கமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

 

ஆஸ்துமா ஏற்பட ஒவ்வாமை ஒரு காரணமாகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

செய்யும் வேலை, அதாவது ஒவ்வாமை காரணிகள் உள்ளடக்கிய சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது, குறிப்பாக பஞ்சாலை, அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட், கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றால் ஆஸ்துமா ஏற்படும்.'' என்கிறார்.

 

பரம்பரையும் காரணமாகுமா ?

ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணமாகிறது. அதாவது பெற்றோர் அல்லது மூதாதையர் அல்லது குடும்பத்தில் ரத்த உறவினர்களில் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் டாக்டர் கமல்.

 

தவிர்க்கும் வழிமுறைகள்

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், தூசியடைந்த சூழலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பஞ்சு தலையணைகளைத் தவிர்க்க வேண்டும்.

 

தரை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கை, படுக்கையறைகளில் அனுமதிக்க கூடாது. அவற்றை வாரம் ஒருமுறை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்க்கான ஒவ்வாமை காரணியை கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

 

புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்

ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பதையும் அவர்களுக்கு அருகில் புகைபிடிப்பது மற்றும் புகை சூழலை தவிர்க்க வேண்டும். மகரந்தபாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். சரியான இடைவெளியில் இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரை அணுகி, சோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

 

குறிப்பாக, ஆஸ்துமா சிகிச்சையில் முதன்மையானது இன்ஹேலர் வகை சிகிச்சை. பிரிவண்டார் (தடுப்பு) வகை, மற்றொன்று ரிலீவர் வகை என்று இரண்டு வகை இன்ஹேலர் வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் கட்டாமில்லை. நோய் தாக்கத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்திறன் பரிசோதனை அடிப்படையில் இதன் தேவையை கண்டறிய முடியும். இம்மினோதெரபி சிகிச்சையில் இன்ஹேலர் தேவைப்படுவதில்லை.

 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆஸ்துமா பாதித்தவர்களை, குறிப்பாக குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடாது. குழந்தைகளை அந்தந்த வயதிற்கேற்ற இயல்பான நடவடிக்கைளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆஸ்துமா பற்றிய சுய விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நோய் பாதிக்கப்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, தொடர் சிகிச்சை எடுத்தால், கட்டுப்படுத்தலாம். என்கிறார் டாக்டர் ஜி.கமல்.

 

மேலும், "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற உலக ஆஸ்துமா அமைப்பான ஜினாவின் மையக் கருத்தை மனதில் கொள்வோம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவோம்.'' என்கிறார் அவர்.

நன்றி:-ஜோ. மகேஸ்வரன் -/-பிபிசி தமிழ்