பழகத் தெரிய வேணும் – 53

உன்னையே நீ மதிக்கணும்

ஒருவர் இறந்துவிட்டால் …(எப்படி அறிந்தார்களோ தெரியாது) இறைவனடி சேர்ந்தார் என குறிப்பிடுவார்கள். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியிலும் ,வலைத் தளங்களிலும்.

 

அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?)என்றோ இறந்தவர்கள்  மறு பிறவியும் எடுத்திருப்பார். ஆனால் அவர்களுக்கும் சம்பந்தமில்லாம RIP/ சாந்தி  தெரிவிப்பவர்களை  எண்ணி வியந்திருக்கிறேன்.

 

இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில்/ வலைத் தளங்களில்  வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர், இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்?

 

:கதை:

கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம்.

 

தாய் அனுபவித்த துன்பங்கள் தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது.

 

நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக் குடுத்துட்டு இருங்கோ!”

 

சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்!

 

பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது பொருளின் அருமை புரிகிறது.

 

:கதை:

என் சட்டை! நானே மச்சு வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன்.

 

ஒரு கையால் சட்டையின் நுனியைப் பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப் பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான்.

 

அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, யாரோ கேட்டார்கள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?”

 

நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, `நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் இருக்குமே!” என்றேன்.

 

சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போதெல்லாம், `அப்போதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை.

 

சுயமதிப்பு ஏற்பட

குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும் செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள் பலர்.

 

எந்த வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே மதிக்கத் தோன்றும்? தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும் மதிக்கமுடியும். தன்னம்பிக்கை என்பது, `என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது.

 

தன் வாழ்நாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான் அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம்.

 

பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அண்மையில், அவருக்குப் பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்ததில் எத்தனைபேரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்!

 

பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள்

 

இத்தகையவர்கள், `எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள்.

 

`நான் இப்படி இருந்தால்தான் பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது.

 

தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது அலட்சியம் செய்பவரை `கர்வி,’ `நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர் மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா?

 

சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும்.

 

:கதை:

புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள் அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம்.

 

ஒரு மாதம் இப்படிக் கழிந்தது.

 

அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

 

என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள்.

 

அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார்.

 

`இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

 

அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ என்று நடக்கப் பயந்து, எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?”

 

அவளுக்குப் புரிந்தது.

 

நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே உரிமம் கிடைத்திருக்கிறது! சிலர் தொலைபேசியில் ஒரு கண்ணை வைத்தபடியே ஓட்டுகிறார்கள். நீதான் பார்த்து ஓட்டவேண்டும்,” என்று அறிவுரை கூறினார்.

 

தெளிந்த மனத்துடன் அவள் போனாள். தனியாகவே.

 

பொருட்களை மதிப்பவர்கள்

நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம்.

 

:கதை:

ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள்.

 

மலேசிய அதிகாரி ஒருவரின் (வெளிநாட்டு) மனைவியான ஜாக்குலின், “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் உயர்ந்த விலையையும் சேர்த்துக் கூறினாள்.

 

யாரும் கண்டுகொள்ளவில்லை.

 

`இவளுடைய மதிப்பு ஒரு ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம் பேசவுமில்லை.

 

அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல நேரிட்டபோது, என்னிடமிருந்த தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன்.

 

என்னம்மா!” என்று மகள் அதிர்ந்தபோது, “நான் ஜாக்குலினைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன்.

 

தலையை நிமிர்த்தி, பிறருடன் எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே!

 

பல விருந்தினர்கள் விருப்பத்துடன் என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

 

ஒருவர் தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க மாட்டார்கள்.

 

தம்மைப்பற்றிக் குறைவாக மதிப்பிடுவர்கள்:

 

மனோபலம் குன்றியவர்களாக இருப்பார்கள்.

 

உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப் பாராட்டுவது கிடையாது. அதனால், எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள்.

 

காதலில் தோல்வி, நீண்டகாலம் ஒரு உறவில் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடலாம்.

 

பிறரை ஓயாமல் குறைகூறுவது இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக நினைக்கலாமே!

 

இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது?

 

பெற்றோரோ, ஆசிரியர்களோ சிறு வயதிலேயே ஒருவர் தன் குறைகளையோ, பிறருடையதையோ பாராட்டாதிருக்கப் பழக்கவேண்டும்.

 

:கதை:

பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான் போதித்தபோது, உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று கண்டித்தேன்.

 

சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல் பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள்.

 

தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது.

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதி வாசிக்க அழுத்துக....
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

திருக்குறள்... -/96/-குடிமை



திருக்குறள் தொடர்கிறது



96. குடிமை

குறள் 951:

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.

மு.வ உரை:

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

கலைஞர் உரை:

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

English Explanation:

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.

 

குறள் 952:

ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.

மு.வ உரை:

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

கலைஞர் உரை:

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

English Explanation:

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.

 

குறள் 953:

நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

மு.வ உரை:

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.

கலைஞர் உரை:

முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.

English Explanation:

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.

 

குறள் 954:

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

மு.வ உரை:

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.

English Explanation:

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

 

குறள் 955:

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல் இன்று.

மு.வ உரை:

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

கலைஞர் உரை:

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.

English Explanation:

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

 

குறள் 956:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்துமென் பார்.

மு.வ உரை:

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.

English Explanation:

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

 

குறள் 957:

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

மு.வ உரை:

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

கலைஞர் உரை:

பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.

English Explanation:

As spots on her bright orb that walks sublime the evening sky.

 

குறள் 958:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்.

மு.வ உரை:

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

கலைஞர் உரை:

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

English Explanation:

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

 

குறள் 959:

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

மு.வ உரை:

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

கலைஞர் உரை:

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

English Explanation:

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

 

குறள் 960:

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.

மு.வ உரை:

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

கலைஞர் உரை:

தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

English Explanation:

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

Theebam.com: திருக்குறள்... -/97/-மானம் 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

 Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

பெண்.... & எல்லாமாய் அவளே

பெண் என்பது எந்நாளும் பேரொளியாம்,
பூண் அணியா விழி முத்து புன்முறுவல் –
நாணம் எனும் கோலம், நட்பு என்பதிலொரு
வாண்மை தரும் வாழ்வினது வெளிச்சம்!

"பெண் எனும் பிரபஞ்சம்"

 

"பெண் எனும் பிரபஞ்சம்

மண் வாழ்வின் இறைவி!

கண்ணின் இமையும் அவளே

உண்மைத் துணையும் இவளே!"

 

"திண்ணையில் அரட்டையும் செய்வாள்

வண்ணத்தில் அழகும் காட்டுவாள்!

எண்ணம் என்றும் குடும்பமே

கண்ணாய் காப்பாள் என்றுமே!"

 

"உண்ண உணவும் தருவாள்

வீண் வம்புக்கு இழுக்காள்!

ஊண் உறக்கம் பார்க்காள்

ஆண்களின் சொர்க்கமும் அவளே!"     

 

...............................................

 

"எல்லாமாய் அவளே"

 

"எல்லாமாய் அவளே இறைவியும் அவளே!

சொல்ல முடியா அழகில் வந்து

வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து

நல்லாய் வாழ தன்னைத் தருபவளே!"

 

"கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே!

உள்ளம் தேடும் அன்பு தந்து

அள்ள அள்ள இன்பம் சொரிந்து

உள்ளது எல்லாம் எனக்கும் கொடுப்பவளே!"

 

"ஆழ் கடலில் மலர்ந்த முத்தே!

வாழ்வு தர உன்னையே கொடுத்து

தாழ்வு மனப்பான்மை என்னிடம் அகற்றி

சூழ்ச்சி சூது அறியா மனையாளே!"     

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

நிழலின் அருமை வெயிலில் தெரியும் -குறும்படம்

 

தாய் இல்லாத கஷ்டம் பசி வரும் போதுதான் தெரியும் #  உண்மை

பகிர்வு;தீபம் இணையத் தளம்/ t tamil.com