திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../01/

 

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 


வெண்பா:01

அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய

தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்

அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்

திரிகடுகம் போலும் மருந்து. 

விளக்கம்: அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.

 

வெண்பா:02

தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்

இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்

நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்

மேல் முறையாளர் தொழில். 

விளக்கம்: தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.

 

வெண்பா:03

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட

இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்

அறியாமையான் வரும் கேடு.

விளக்கம்: கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

 

வெண்பா:04

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்

சாவ உறுவான் தொழில்.       

விளக்கம்: பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

 

வெண்பா:05

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி.

விளக்கம்: பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, திரிகடுகம், மூன்றும், இலக்கியங்கள், பதினெண், நட்பும், போன்று, கீழ்க்கணக்கு, அகற்றும், தொழில், கோல், புகலும், குடியில், உடையவரது, நலம், என்னும், சங்க, மூன்று, மருந்துப், மருந்து, ஆகிய, தோளும்

0 comments:

Post a Comment