சிறு கதை - "தலை தீபாவளி"




எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை நன்றாக எனக்கு முதலிலேயே தெரியும் . அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்கு தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமிழர் பண்பாட்டுக்கு அல்லது தமிழரை இழுவுபடுத்தும் எதையும் நான் ஏற்றுக் கொளவதில்லை. அது மட்டும் அல்ல தமிழர் சமயமான சைவ சமயம்  இந்து மதத்துக்குள் [வைதீக மதம்] உள்வாங்கப்பட்டதே, அது தன் தனித்துவத்தை இழக்க காரணம் என்பதே என் வாதம். உதாரணமாக முருகன்- ஸ்கந்தன் ஆகியதை அல்லது சிவன்- ருத்திரன் ஆனதை கூறலாம்.

நாம் இருவரும் இந்த விடயங்களில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் மிக அன்பாக, நட்பாக, விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை ஆரம்பித்தது. எந்தவித பிரச்சனையும் எமக்கிடையில் வரவில்லை. நல்ல புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வு நகர்ந்தது. அவர் ஒழுங்காக விரதங்கள், ஆலயம் போவது, எல்லாம் கடைப்பிடிப்பார். அது அவரின் தனிப்பட்ட விடயம். அவரின் சுதந்திரம். நான் தலையிடுவதில்லை. நான் பிறவியில் சைவம் [சைவ உணவு உண்பவன்] என்பதால், அது உண்மையில் என்னை தாக்கவே இல்லை.

இரண்டு மாதம் கழிய தீபாவளி நாள் நெருங்கி வந்தது. அவள் அது 'எமது' தலை தீபாவளி என்று பெரிதாக கொண்டாட வேண்டும் என ஒரு திட்டமே போடத் தொடங்கிவிட்டார். அவர் அதை கொண்டாடுவது பற்றி எனக்கு கவலை இல்லை. அதற்குத் தேவையான பணம், நேரம் ஒதுக்கி கொடுப்பதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் அது 'எமது' என்று என்னையும் அதற்குள் இழுப்பதில் தான் பிரச்சனையாக எனக்கு இருந்தது. என் மனச் சாடசிக்கு விரோதமாக என்னால் என்னை ஈடுபடுத்த முடியாது. அது அவளுக்கும் தெரியும். என்றாலும் அவள் பிடிவாதமாக அதில் இருந்தாள்  

தீபாவளி என்ற பெயரில்,உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு  தமிழ் [திராவிட] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?  அது தான் என் கேள்வி . உதாரணமாக காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீ  எவ்வாறு முகம் கொடுப்பாய் ? இதைத்தான் நான் அவளிடம் விளக்கமாக கேட்டேன். 

ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் தமிழர்களின் [திராவிடர்களின்] பிரதிநிதியாக கருதப்படும் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே  உதவும் என அவளுக்கு விரிவாக எடுத்து கூறினேன். ஆனால் அவள் அதில் விட்டுக்கொடுப்பு செய்ய மறுத்துவிட்டாள்.

தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். நீங்க எங்கள் வீட்டிற்கு வந்து அப்பா அம்மா என் சகோதரர்களுடன் அதில் பங்குபற்றவேண்டும். இது நான் கல்யாணத்துக்கு முன்பே கண்ட கனவு! என் நம்பிக்கை!! . அவள் கோபமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போய் படுத்துவிட்டாள் !

எனக்கு இது தலை தீபாவளியா அல்லது தலை போகும் தீபாவளியா புரியவில்லை. அன்று என்னுடன் சமயமா ? மானிடமா ? என்ற விவாதத்தில் தோற்று கண்ணீருடன் கோபமாக போனது ஞாபகம் வந்தது. நான் ஏளனச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு கைதட்டிக் கொண்டு இருந்தேன் . ஆனால் இன்று நிலைமை வேறு? ஆனால் நாம் தமிழர். உலகின் மூத்த குடிகளில் ஒருவன். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு  முன்பே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பறைசாற்றிய இனம் என்ற கர்வமும் என்னை விட்டு விலகவில்லை?  

அவள் இரவு சாப்பாடு சாப்பிடவும் இல்லை, ஏன் இரவு உடை கூட மாற்றவில்லை, அப்படியே கட்டிலில் குறுக்காக படுத்து இருந்தாள். நான் ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு, இரவு செய்திகளை பார்த்துவிட்டு அறைக்கு வந்தேன். அவள் குறுக்காக மட்டும் அல்ல, கைகளையும் நீட்டி, நான், தனக்கு பக்கத்தில் படுக்காதவாறு போர்வையால் மூடி படுத்து இருந்தாள். உண்மையில் நித்திரையா ஊடலா எனக்கு தெரியாது?

"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே"

என்ற வரி என் நெஞ்சில் மின்னலாக வந்தது. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல் என்றது இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதே. பிறப்பு இறப்பு போல இன்ப துன்பமும் உண்டு என எச்சரிக்கையும் விட்டது. அது உண்மையில் அவளுக்கு சொல்ல வேண்டியது. தேவையில்லாமல் தானே தன் தலைக்கு வலிய துன்பத்தை வாரிப் போட்டுக்கொண்டு, மற்றவரையும் படுக்கவிடாலால் வருத்திக் கொண்டு படுத்து இருப்பவள் அவள்தானே!  
  
குடும்பம் என்றால், ஒருவரை ஒருவர் வீட்டுக் கொடுத்து நடக்கவேண்டும். ஆனால் அதற்காக எம் மானத்தை விற்கமுடியாது. எனவே காலை நாம் இருவரும் அவளின் தாய் வீட்டுக்கு போவதாகவும், என்றாலும் ஏதாவது சாட்டு சொல்லி, கொண்டாட்டத்தின் பொழுது அதில் இருந்து விலகுவதாகவும் யோசித்தேன்.  நான் மற்ற அறையில், அவளை குழப்பாமல் படுத்துவிட்டேன். 

ஆனால் எனக்கு நித்திரை வரவில்லை. கண் மூடி சும்மா படுத்து இருந்தேன். ஓர் சில மணித்தியாலத்தில் பின், யாரோ என் கதவை மெல்ல திறப்பது கேட்டது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். அவள் தான் ! இரவு உடையில், அழகு தேவதையாக, என் கிட்ட  வந்து, என்னை தட்டினாள். "சரி நாம் இறப்பை கொண்டாடாமல் முடிசூட்டு விழாவை மட்டும் கொண்டாடுவோம், இப்ப எழும்பு வாங்க சாப்பிட " என்று கையை பிடித்து இழுத்தாள்!  

இருவரும் சாப்பிட்ட பின், அவள்  திருஞானசம்பந்தர் தேவாரம் ஒன்றை  எனக்கு கேட்கக்கூடியதாக

"வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்"

பாடிக்கொண்டு, மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அழாக்குறையாக கேட்டாள். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. கபாலீச்சரம் என்னும் கோயிலில் [சிவன் கோவில்] விளங்கும் பெருமானைக் என்று குறிப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை போலும்.    

"மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய           
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!"
[அகநானுறு 141]

தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை [தீபம் + ஆவளி / விளக்கு வரிசை] கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும் என்ற அவளின் ஏக்கம் முழுதாக தேவாரத்தை பார்க்க விடவில்லை போலும்.

தலை தீபாவளி, தலை போகாமல் , புரிந்துணர்வுடன் அவள் தீபாவளியாகவும் நான் கார்த்திகை விளக்கீடாகவும் ஒன்றாக இரு தரப்பு குடும்பகங்களுடனும் ஆனால் மரணத்தை, இழவு படுத்துதலை தவிர்த்து மகிழ்வாக கொண்டாடினோம்!  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]


 


0 comments:

Post a Comment