திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../02/

 

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 


திரிகடுகம் தொடர்கிறது.....

 

வெண்பா:06

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

விளக்கம்: பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

வெண்பா:07

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்

செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்

அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்

துஞ்சு ஊமன் கண்ட கனா.

விளக்கம்: உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.

 

வெண்பா:08

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த

நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து

வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்

தாம் தம்மைக் கூறாப் பொருள்.

விளக்கம்: பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

 

வெண்பா:09

பெருமை உடையார் இனத்தின் அகறல்,

உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,

விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்

முழு மக்கள் காதலவை.   

விளக்கம்: பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

 

வெண்பா:10

கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்

நன்மை பயத்தல் இல.

விளக்கம்: கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, மூன்றும், இலக்கியங்கள், பதினெண், என்னும், இல்லாத, கல்வி, திரிகடுகம், கீழ்க்கணக்கு, அவையில், கூடியிருக்கும், தம்மைக், அவையுள், நன்மை, உரிமை, நல்ல, செய்வதும், தன்னை, பிறர், சங்க, பேசும்போது, வாளை, கண்ட, பிறத்தலும், கல்வியும்


0 comments:

Post a Comment