முகவுரை -10-உவமைகள், உருவகங்கள், முரண் தோற்றங்கள்
உவமைகளுக்கும் உருவகங்களுக்கும்
முக்கியத்துவம் கொடுக்காது அறங்களை வலியுறுத்தும் நோக்குடன் மட்டுமே வள்ளுவர்
அவைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் குறள் முழுவதிலும் காணமுடிகிறது. ஓர் அதிகாரத்தில் நேர்மறையாகவோ புகழ்ந்தோ பயன்படுத்திய அதே உவமைகளையும்
உருவகங்களையும் மற்றொரு அதிகாரத்தில் எதிர்மறையாகவோ இகழ்ந்தோ பயன்படுத்த அவர்
தயங்குவதில்லை. இவ்வகையில் அறங்களை விளக்க முரண்போல்
தோன்றும் கருத்துகளையும் வேண்டுமென்றே அவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக,
*"கள்ளுண்ணாமை" அதிகாரத்தில் கள்ளின் தீமையை உரைக்கும் வள்ளுவர், "தகையணங்கு உறுத்தல்" அதிகாரத்தில் உள்ளன்பானது கள்ளைக் காட்டிலும்
மகிழ்ச்சியைத் தரவல்லது (குறள் 1090)
என்று
உள்ளன்பின் மேன்மையை உரைக்கக் கள்ளை உவமையாகப் பயன்படுத்துகிறார்.
*"செல்வத்துள் செல்வம் எது?"
என்ற
கேள்விக்கு "அருளுடைமை" அதிகாரத்தில் அருள் (குறள் 241) என்றும் "கேள்வி" அதிகாரத்தில் கேட்டல் (குறள் 411) என்றும் வள்ளுவர் பதிலுரைக்கிறார்.
*பிற அறங்களைக் கைவிட நேர்ந்தாலும்
எந்நிலையிலும் கைவிட முடியாத அறங்கள் என்று பிறன்மனை நோக்காமை (குறள் 150), புறங்கூறாமை (குறள் 181) வாய்மை (குறள் 297), என்று பலவற்றைச் சுட்டும் வள்ளுவர் முடிவாக வாய்மையைக் கூட இரண்டாம்
நிலைக்குத் தள்ளி கொல்லாமைக்கு முடிசூட்டுகிறார் (குறள் 323).
*"ஊழ்" அதிகாரத்தில் தமக்குரிய ஒன்றை ஒருவர் நீக்க முயன்றாலும் நீங்காது
(குறள் 376) என்றுரைக்கும் வள்ளுவர், "மடியின்மை" அதிகாரத்தில் தம் குடியோடு வந்த குற்றமும் மடி (சோம்பல்)
நீங்கின் நீங்கும் (குறள் 609) என்கிறார்.
*"மக்கட்செல்வம்" அதிகாரத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய பெரும் பேறாகச்
சான்றாண்மை மிக்க நன்மக்கட் செல்வங்களைக் கூறும் வள்ளுவர், "அடக்கமுடைமை" அதிகரத்தில் அது தன்னடக்கத்தால் பெறப்படும் ஒன்று
என்கிறார்.
முரண்போல் தோன்றும்
இவ்விடங்களுக்கிடையிலுள்ள அறத்தொடர்பினை உரையாசிரியர்கள் பதின்மரில் தொடங்கி அதன்
பின் வந்த பலரும் தங்களது உரைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். குறட்பாக்கள் 380 மற்றும் 620, 481 மற்றும் 1028, 373 மற்றும் 396, 383 மற்றும் 672 ஆகியவற்றிற்கு இடையிலுள்ள அறத்தொடர்பினை பரிமேலழகர் தனது உரையில்
தெளிவுபடுத்தியிருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
[திருக்குறள் - முகவுரை-11
அடுத்தவாரம் தொடரும்]
திருக்குறள்
தொடர்கிறது….
10.இனியவை கூறல்
👉குறள்
91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
மு.வ உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
கலைஞர் உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
👉குறள்
92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது
நல்லது
கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
👉குறள்
93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
மு.வ உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து
இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம்
ஆகும்.
கலைஞர் உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த
பண்பாகும்.
👉குறள்
94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
மு.வ உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத்
துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத்
துன்பம் தரும் வறுமை வராது.
கலைஞர் உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
👉குறள்
95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே
ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச்
சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
👉குறள்
96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச்
சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச்
சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
கலைஞர் உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
👉குறள்
97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து
நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
கலைஞர் உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத
சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
👉குறள்
98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
மு.வ உரை:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய
இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு
இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
கலைஞர் உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
👉குறள்
99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப்
பேசுவது என்ன பயன் கருதியோ?
கலைஞர் உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு
மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
👉குறள்
100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
மு.வ உரை:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான
சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத்
தின்பதைப் போன்றது .
சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
கலைஞர் உரை:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக்
கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச்
சமமாகும்.
👉 திருக்குறள்
அடுத்த வாரம் தொடரும்....
0 comments:
Post a Comment