அக்காவுக்கும் அத்தானுக்கும் இடையில்....

கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....
அன்புள்ள அப்புவுக்கு,                                14.04.2014
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.உங்கள் கடிதம் கிடைத்தது.உங்கள்சுகம் அறிந்து மகிழ்ச்சி.
அப்பு, உங்கள் கடிதம் படித்துக் கவலை அடைந்தேன்.அக்காவுக்கு அத்தானுக்கும் என்ன பிரச்சனை என்று நான் அலச விரும்பவில்லை. ஏனெனில் பிரச்சனை என்பது வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல குடும்பத்தில் எல்லா வீடுகளிலும் உள்ளதுதான்.அவர்களுக்குள் பிரச்சனை பெருப்பதும், சமாதானமாவதுவும் அவர்கள் அப்பிரச்சனையினைக் கையில் எடுக்கும் விதத்திலும் அவரவர் வார்த்தைகளில் தான் தங்கியுள்ளது.எல்லா வற்றிற்கும் மனம்தான் காரணம் என்று கூறுவார்கள்.
இதிலும் பக்கத்துவீட்டார் தலையீடு இருக்குமெனில் குடும்பத்தினுள் இருக்கும் பிரச்சனையினை ஏதோ அக்கறையோடு தலையிடுபவர் போல் தலையிட்டு உள்ள பிரச்னையை ஊதிப் பெருப்பித்து விடுவார்கள்.அப்படி சீரழிந்த குடும்பங்கள் எம்மத்தியில் இல்லாமலில்லை.
அப்பு, திருப்தியோடு வாழக் கற்றுக்கொண்டால் நாம் வாழ்க்கையில் என்றும் சந்தோசமாகவும்,நலமுள்ளவர்கலாகவும் வாழலாம்.
அக்கா தனக்கு வந்த பிரச்சனைகளை உலகத்தில நடவாத ஒன்றாக எண்ணியதே தவறான சிந்தனையாகும்.அதனை அத்தானோடு மென்மையான முறையில் பேசி தீர்க்க முயற்சி செய்யாது தன் மனக்குறைகளை அடுத்த வீட்டாரோடு பேசியது அக்காவின் அடுத்த தவறாகும்.மேலும் பக்கத்து வீட்டாரின் சொல்லைக் கேட்டு அத்தானுக்கு மாறாய் நடந்தது பெருந் தவறாகும்.
அப்பு,வாழ்க்கை என்பது கணவனும் மனைவியும் இணைந்ததுதான். இருவரும் நான் பெரிது,நீ பெரிது என்று சண்டைபிடிக்க இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சியல்ல.ஒருவரோடு முறைத்துக்கொள்வது இருவரும் தத்தம் சந்தோசத்தை,நிம்மதியைக் கெடுத்துக்கொள்வதேயாகும். இருவருமே தத்தம் வாழ்க்கைக்கு அடுத்தவரை சார்ந்தவர்கள் என்பதனையும் ஒருவர் இல்லாது அடுத்தவர் தனித்து வாழல் வாழ்க்கை இல்லை என்பதனையும்  உணரவேண்டும்.
அப்பு,நான் உங்களுக்கு கூறித்தான் புரியும் என்றில்லை.அக்கா வன்மையாக பேசி எதையும் சாதிததுமில்லை,சாதிக்கபோவதுமில்லை.மென்மையாக பேசுவதால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. வீண் வாதங்களையும் ,அகம்பாவங்களையும் விட்டு அவர்களை வாழச்சொல்லுங்கள்.
அப்பு , மனிதர்கள் பலவிதம் .அவர்களின் விருப்பு வெறுப்புக்கள் வெவ்வேறானவை.எந்த ஒரு மனிதனைப்போல் இன்னொருவன் பழக்க வழக்கங்கள் முதலானவற்றில் ஒன்றாக இருக்க முடியாது.

எண் சோதிடத்தினையும் அக்கா நம்புவதாகத் தெரிகிறது. சிலர்  எண் சோதிட வழியில் குறிப்பிட்ட எண் கொண்டோருக்கு ஒரே மாதிரியான எதிர்காலம் ,குண டையளை கூறுவர்,ஆனால் அவ்   எண் சோதிடம் கூறுவது போன்று எம்மோடு வாழும் குறிப்பிட்ட ஒரே இலக்க மனிதரிடம் அப்படியான முழு ஒற்றுமையினை என்னால் காண முடிவதில்லை.
அப்பு, இத்துடன் எனது கடிதத்தினை நிறுத்துகிறேன்.உங்கள் தேவைகளையும் சுகத்தினையும் எழுதுங்கள். படிக்கக்  காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
அன்பின் மகன்
செ..வேந்தன்

  

0 comments:

Post a Comment