சித்தர் சிந்திய முத்துகள் ....3/57

 


சித்தர் சிவவாக்கியம் -476

உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென்

திரும்பிலென் திகைக்கிலென் சில திசைகள் எட்டிலென்

புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய்

நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதுமில்லையே.                      

உறங்குவது எது? விழிப்பது எது? உணர்வு சென்று ஒடுங்குவது எங்கு? திரும்பிப் பார்ப்பது எது? திகைப்பு ஏற்படுவது எது? திசைகள் எட்டும் எட்டான அகாரமாக நிற்பது எது, என்பதை அறிந்து கொண்டு அது மெய்ப்பொருளே என்பதனை உணர்ந்து கொண்டு அதிலேயே தங்கள் உடம்பில் வெளியாகவும் உள்ளத்தின் உள்வெளியான மனமாகவும் பொருத்தி சூட்சம தேகத்திலேயே நினைவை நிறுத்தி தியானித்திருக்கும் ஞானிகள் இறைவனைத் தவிர வேறு ஒன்றை நினைப்பது இல்லை.

 

சித்தர் சிவவாக்கியம் -477

அங்கலிங்கம் பூண்டு நீரகண்ட பூசை செய்கிறீர்

அங்கலிங்கம் பூண்டு நீரமர்ந்திருந்த மார்பரே

எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்கிறீர்

செங்கல் செம்பு கல்லெலாஞ் சிறந்து பார்க்கும் மூடரே.

உங்களுக்குள் இருக்கும் ஆத்மலிங்கத்தை உணராமல், உங்கள் அங்கத்தில் லிங்கத்தை மாலையாகக் கட்டி அதை மார்பில் அணிந்து கொண்டு நீங்கள் மிகவும் பிரம்மாண்டமாக சிவபூசை செய்கிறீர்கள். ஈசன் எங்கெங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து எல்லாத் தலங்களும் ஓடியோடி வணங்கித் தேடுகின்றீர்கள். உங்கள் உடலுக்குள்ளே கட்டாத லிங்கமாய் ஈசன் இருப்பதை அறியாமல் எங்கும் அலைந்து ஈசனைக் காணாமல் ஈடில்லா உயிரை இழக்கின்றீர்கள். செங்கல்லால் ஆன சுதைகளிலும், செம்பு, கருங்கல்லால் செய்த சிலைகளிலும் சிவன் இருக்கின்றான் என்று சிறப்பாக சொன்ன நூல்களை எல்லாம் ஆராய்ந்து அங்கெல்லாம் சென்று பார்க்கின்றீர்கள். உங்கள் அங்கத்திலேயே அவன் லிங்கமாகி நிற்பதை ஆராய்ந்து பார்க்காத மூடர்களே!  

****************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -478

தீட்டந்தீட்டமென்று நீர் தினமுழுகும் மூடரே

தீட்டமாகி யல்லவோ  திரண்டு காய மானதும்

பூட்டகாயமும்முளே புகழுகின்ற பேயரே

தீட்டு வந்து கொண்டாலோ தெளிந்ததே சிவாயமே.                      

எதெற்கெடுத்தாலும் தீட்டு தீட்டு என்று கூறிக் கொண்டு தினமும் நீரில் மூழ்கி குளித்துவிட்டு ஆச்சாரமாக இருப்பதாக சொல்லும் மூடர்களே! தீட்டினால் தானே உயிர் உருவாகி உடம்பு திரண்டு உண்டாகியுள்ளது. அதே தீட்டில் பூடகமாக பொருந்தியிருக்கும் சூட்சம உடம்பையும் மெய்ப் பொருள் உண்மையையும் உணர்ந்து அந்த ஒன்றையே பேணிப் புகழ்ந்து இருக்கும் பேயர்களான ஞானிகள், தீட்டாக வந்து நின்ற அதற்குள்ளேயே தியானித்திருந்து தெளிந்து கண்ட சோதியே சிவம் என்பதை அறிந்து அடைவார்கள்.

***************************************************

அன்புடன் கே எம் தர்மா.


0 comments:

Post a Comment