எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா?


காஞ்சிபுரம்(Kancheepuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளகாஞ்சிபுரம்மாவட்டத்தில் இருக்கும்ஒரு நகராட்சி ஆகும்.பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.
முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
வரலாறு
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின்தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள்ஆட்சிக்குமுன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும்திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமணசமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி யால் 1969இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு 1981ம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா,கருநாடகம் மற்றும்கேரளாவிலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர்.
 தொகுப்பு:ஊர்க் குருவி 





0 comments:

Post a Comment