சித்தர் சிந்திய முத்துகள் .......3/42



சித்தர் சிவவாக்கியம் -287

அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை

குணமதாக உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்

முணுமுனென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும்

தினம் தினம் மயங்குவீர் செம்பு பூசை பண்ணியே.    

 

அணுவிற்கு அணுவாகவும் அண்டங்கள் அனைத்துமாகவும் எதனாலும் அளவிட முடியாத சோதியாகவும், இருப்பவன் ஈசன் அவனே! அவன் எண்குணத்தானாக இருப்பதை உணர்ந்து நற்குணங்கள் அதையே எண்ணி தியானிப்பவர்க்கு முக்தி நிச்சயம் வாய்க்கும். அதுவன்றி பிறர்  அறிய தனக்குள்ளேயே மந்திரங்களை முனுமுனுத்து விரல்களில் மனம் ஒன்றி எண்ணியும், செம்பு சிலைகளை வைத்து பூசைகள் பண்ணியும் தினந்தோறும் உலகத்தவரை மயக்கி மயங்குவாரேயன்றி உண்மையை உணரமாட்டார்கள்.

 

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -288

மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்

மூடமாக மூடுகின்ற மூடாமேது மூடரே

காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்

ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?

 

மூலமாய் இருக்கும் பிரம்மமே தெய்வப் பிரசாதங்களைப் படைப்பதற்கு முன்பே முகர்ந்து விடுகிறதே! அப்பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒருவரும் முகர்ந்து விடாமல் இறைவருக்கு படைப்பதாக திறந்து மூடி நேவேத்தியம் செய்யும் மூடர்களே! அதனை இறைவன் ஏற்றுக் கொண்டானா? மனிதர்கள் ஏற்றுக் கொண்டனரா? எமன் வந்து உயிரை எடுக்கும் பொழுது பஞ்ச பூதங்களும், பஞ்சாட்சரப் பொருளில் ஒடுங்கும்போது அவ்வுயிர் ஆதியோடு சேருமோ? அனாதியோடு சேருமோ?

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 290

வண்டுலங்கள் போலும் நீர் மனத்துமாக அறுக்கலீர்

குண்டலங்கள் போலும் நீர் குளத்துலே முழுகுறீர்

பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலன்

கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பார் காணுமே.

 

  .

தேன்வண்டானது வேறெந்த நினைவும் இன்றி நல்ல மனம் மிகுந்த பூக்களை மட்டுமே ரீங்காரமிட்டு தேடி தேனை எடுத்துச் சேர்ப்பதைப் போல் ஒரே நினைவோடு தியானம் செய்து மனத்தில் உள்ள குற்றங்களையும், பாவங்களையும் அன்பெனும் நீர் ஊற்றி அகற்றத் தெரியாமல் பாவம் போக்கவும் அழுக்கை அகற்றவும் மாடுகளைப் போல் குளத்தில் மூழ்குவதால் பலனுண்டா? ஈசனின் முடியைக் காண சபதம் செய்த பிரமன் பறந்து தேடியும் காண முடியாது திரும்பினான். பார்க்கும் இடத்திலேயே பார்ப்பானாக உனக்குள்ளே இருக்கும் பரம்பொருளைக் கண்டு அறிவையும், உணர்வையும் மனதையும் ஒன்றாக்கி தியானித்தால் ஈசன் உன்னோடு கலந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

          

 *****கே எம் தர்மா&கிருஷ்ணமுர்த்தி 

0 comments:

Post a Comment