என் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]

வெண்ணிலாவின் கடந்த காலத்தை மீட்டிப் பார்த்து விட்டு மதி வெண்ணிலாவின் முகத்தை பார்த்தாள், வெண்ணிலா  தன்னையும்  மறந்து  கடைக்காரருடன் உரையாடிக்  கொண்டு இருந்தாள், அப்பொழுது மனோ  என்ற ஒரு போராளியின் மனைவி யசோ  கடைக்கு வருவதை  அவதானித்த கடைக்காரர்
 "பிள்ளை  எப்படி இருகிறாய், கண்டு கன நாள் ஆகுது ?எங்க தொலைவுக்கு எங்காவது  போய் வந்தனியோ?"என 
 "அண்ணை அதை ஏன் கேட்கிறீங்கள்  ? என்ர  மனுசனை ஆமி பிடித்து கொண்டு போயிட்டாங்கள் , அது தான் எங்கட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச்  சந்தித்து கதைச்சுப் போட்டு 
வாறன் ."என்று சொல்ல 
கடைக்காரர் .. "ஏன் பிள்ளை என்ன நடந்தது  உன்ர  கணவருக்கு ? அவருக்கு ஒரு காலும் இல்லை ,அதோட வேற தலையிலும்  காயம்  இருக்குது, துலைவார் ,அவனை ஏன் காணும்  பிடித்து கொண்டு போனாங்கள் "  . 
"அது ஒன்றும் இல்லை அண்ணா, உதவும்  கரங்கள் என்ற அமைப்பு ஊடக எங்களுக்கு கறவை   மாடு ஒன்று  தந்தவை, அதை வைச்சு தொழில் செய்து தான் குடும்பத்தை ஓரளவுக்காவது கொண்டு இழுத்தனான். ..அந்த மாடு வாங்க  யார் காசு தந்தது என்று கேட்டு என்று பசு மாட்டையும் , அவரையும் பிடித்து கொண்டு போயிட்டாங்கள் ,விசாரிக்க வேணுமாம் ." ..என்ர  பிள்ளைய எப்படி படிக்க வைக்க போறேன் என்று தெரியேல்லை அண்ணை ,  ஒழுங்கான  சாப்பாடுகள் இல்லை ,என்ன செய்யிறது என்றும் தெரியேல்லை ,தற்கொலை செய்து செத்துப் போகலாம் என்று தான் தோன்றுது அண்ணை . ஆரிட்டை போய் நிக்கிறது ,,ஆர் எனக்கு உதவி செய்யப் போகினம் "? என்று மன வேதனைபட்டபடி யசோ  சொல்லிக்   கொண்டு போக 
கடைக்காரர்
 " உந்த தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி தான் பிள்ளை வாக்கு கேட்டு வரும் போது மட்டும் தமிழ் தேசிய வாதம் பற்றி கதைச்சு ஒட்டுக் கேப்பினம் .உறுப்பினர் ஆகினாப் பிறகு 
திரும்பிக் கூட  பார்க்க மாட்டினம்   எதாவது கேட்டால் ஒரு சாட்டு சொல்வார்கள், ஜனாதிபதியோடு  கதைத்து இருக்கிறோம் , ஒரு முடிவு வரும் ..இல்லை என்றால் தாங்கள் தலை போட்டால் எங்களுக்கும் பிரச்சனை  வரும் என்று மழுப்பல் கதை தான் கதைப்பார்கள்,உவங்களை  விட  மனித உரிமையார்களிடம்  முறைப்பாடு கொடுத்து பார்க்கலாம்  பிள்ளை " என்று கூறவும் யசோவும் 
 "நாங்கள் என்ன தவறு செய்தோம் அண்ணா, எங்களை இப்படி 
போட்டு மிதிக்கிறாங்கள்"  என்று வேதனையுடன் சொல்ல 
"உவங்கள் மனச்சாட்சி இல்லாதவங்கள் பிள்ளை ,
எங்களை அடிமையாக வைச்சிருக்கத்  தான் விரும்புறாங்கள் போல, பிள்ளை எங்களால் என்ன செய்ய முடியும்? நீயே சொல்லு , எங்காளால அழ மட்டும் தான் முடியும். புலிகள் பலத்தோடு இருக்கும் போது வால்  பிடித்தவர்கள் எல்லாம்,  இப்ப கேட்க யாருமே இல்லாத அநாதையாகிப்   போனதால்  தமிழ் ஆக்களே தமிழனைக்  காட்டி கொடுகிறார்கள், இதற்கு தீர்வு தான் என்ன ,எல்லாம் எங்கட தலை  எழுத்து பிள்ளை" கூறவும் அருகில் இருந்த  வெண்ணிலாவும் 
"எங்களை கொல்லாமல் கொல்லுறாங்கள் அண்ணை , நாங்கள் தமிழர் மீண்டும் தளிர்  விடக்  கூடாது என்று அரசாங்கம் கண்ணும் கருத்துமாய் திரியுது. அதற்கு தமிழ் பச்சோந்திகளும் துணை நிக்கிறத்தைப் பார்க்கும் போது மிகவும்  வேதனையாக இருக்குத்து அண்ணை" எனக் கூறவும்  ,கடைக்காரர் , 
"நாங்கள் இப்படியே ஒவ்வொன்றாய்  இழந்து அழிந்து போக வேண்டியது தான் போல" என்று பெரு மூச்சு  விட்டபடி   தன் இளமை கால   போராட்ட வாழ்வை நோக்கி தன் சிந்தனையை திருப்ப தொடங்கினார்.................. 
தொடர் கதை /தொடர் 5.... தொடரும் ...[கவி நிலவன்]  

1 comments:

  1. அருண்Sunday, May 29, 2016

    நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்களை நினைவு படுத்தும் உங்கள் கதை அருமை.தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete