"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]

டெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆகிய இருவருக்கும் 2014 ஆண்டு க்கான அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப் பட்டது.முன்பு பல தடவை இப் பரிசு பலருக்கு வழங்கப் பட்டு இருந்தாலும்,இம் முறை அவைக்கு முற்றிலும் வேறு பட்டது.குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபடும் கைலாஷ் சத்யார்த்தி க்கும்  மற்றும் பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் 17  வயது சிறுமி மலாலா யூசப்சாய் க்கும் கொடுத்தது ஒரு வரலாற்று நிகழ்ச் சியாகும்."என்னுடைய கல்வி உரிமையை நிறுத்த தலிபான்கள் யார்?" என பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2012ம் ஆண்டு, மத அடிப்படை வாதிகலான தலிபான் களால் [Taliban] சமயத்தின் பெயரில்,ஆண்டவனின் பெயரில் தலையில் சுடப்பட்டு உயிர் தப்பினவர் என்பது குறிப் பிடத்தக்கது.60 வயது நிரம்பிய இந்திய சமூக ஆர்வலர்,கைலாஷ் சத்யார்த்தி அனைத்துக் குழந்தை களுக்கும் கல்வி உரிமை என்பதை வலியுறுத்தி வருபவர்.அதற்க் காக பாடு படுபவர்.இந்த நோபல் பரிசு பெற்ற இருவரினதும் குறிக்கோள் கல்வி.'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.' என வள்ளுவர் போற்றிய எண்ணும் எழுத்தும்.'குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு' அந்த அழகை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களையும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும்,அவர்களின் அறியாமையில் இருந்து நீக்கி விழிப்புணர்வை ஊட்டி,அவர்கள் அனைவரையும் மேம்படுத்துவதே அவர்களின் முதன்மை நோக்கமாக
இருந்தது.உதாரணமாக கைலாஷ் மனப் போக்கு சமயம் சார்ந்தது அல்ல,'நான் மத வாதி அல்ல,கடந்த 40 ஆண்டுகளில், நான் ஆலயமோ அல்லது மசூதியோ போகவில்லை.நான் ஆலயத்தில் வழிபடுவதில்லை,ஏனென்றால் நான் குழந்தைகளை வழிபடுகிறேன்-அவர்களுக்கு விடுதலையையும் அவர்களின் குழந்தை பருவத்தையும் கொடுப்பதால்' என்கிறார்.[" I have not gone to a temple or mosque in the last 40 years. I don’t worship in temples because I worship children – by giving them freedom and childhood.”].தலிபான்கள் தங்கள் கடும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தொலைக்காட்சி, இசை நிகழ்ச்சிகள், கல்வி, ஏன் கடைக்குப் போவதில் கூட சமயத்தின் பெயரில் பெண்களுக்குத் தடை விதித்தார்கள்.அதை உடைத்து எறிந்தவள் தான் இந்த சிறுமி மலாலா.இருவருமே கடவுளுக்கு எதிரி அல்ல, ஆனால்,இருவரும் மனித வர்க்கத்தின் முக்கிய தேவைகளின் மேல் கவனம் செலுத்தினார்கள்.அல்லல் படும் உயிர்களுக்கு ஆறுதல் கொடுத்தார்கள்.இந்த மனித சேவை அங்கீகாரம் செய்யப் பட்டதையே இந்த நோபல் பரிசு எமக்கு எடுத்து காட்டுகிறது.எனவே தான் நாமும் ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள் என்கிறோம்.இந்த அவர்களின் செய்தி, மனித குலத்தின் நன்மைக்காகவும் செழிப்புக்காகவும்,ஒரு அர்த்த முள்ளதாக உலகளாவி பரவட்டும்!பல பல  மலாலா,கைலாஷ் தோன்றட்டும்!!

திருமூலர் தனது திருமந்திரம் 2104  இல்  "ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே" என்கிறார். குதம்பைச் சித்தர் தனது பாடல் 30  இல் "தாழ்வார மில்லை தனக்கொரு வீடில்லை,தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?" என்று உரத்த குரலில் கேட் கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்"என புறநானுறு கூறுகின்றது."ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்"என்று எம்மை அது வழி காட்டுகின்றது.அறம்,பொருள்,இன்பம், வீடு [வாழ்வில் நிறைவு அடைதல் ] என்ற நான்கு வழி பாதையை திருக்குறள்,தேவையற்ற சடங்குகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் தவிர்த்து  எடுத்து காட்டுகிறது. வையத்து வாழ்வாங்கு வாழ்வோம்
உலகத்து இயற்கையை அறிந்து வெல்வோம், புகழுடன் தோன்றுவோம் என்பதே குறிக்கோள்.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது .பல வகைப்பாடான கடவுள் தன்மையை[இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள/சந்திக்க நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது,அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும்.எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை[ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள்.மாணிக்கவாசகர் தமது  திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு,ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!"என்கிறார்.அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு,ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?.என கேள்வி கேட்கிறார். இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக் கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கை யும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது."சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் " என்று திருநாவுக்கரசர் கேட் கிறார்.மேலும் அவர், "கங்கை ஆடிலன் காவிரியாடிலன், கொங்கு தன்குமரித் துறையாடிலன் துங்கு மாகடலோத நீர் ஆடிலன் எங்கும் ஈசன் எனதாவர்க்கில்லையே" என்று முழக்கம் இடுகிறார்.இப்படியே சுப்ரமணிய பாரதியும் வள்ளுவர் இராமலிங்க சுவாமியும் உறுதிப் படுத்து கிறார்கள்.ஆமாம் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த கண் மூடித்தனமாக மூட நம்பிக்கைகளை அகற்ற வேண்டும். அப்படி அகற்றி, அங்கு மனிதத் தன்மை தழைத்தோங்க வழிசமைக்க வேண்டும்.வேறு பட்ட மக்களிடையில் ஒற்றுமையை உண்டாக்கி நல்ல மனிதர்களை வளர்த் தெடுக்க வேண்டும் . 

ஒரு குழந்தையின் காலில் இருக்கும் ஒரு சோடி சப்பாத்து போன்றது சமயம்.-முதலில்,அது புதுசாக இருக்கும் பொழுது,குழந்தை உலகத்தை சுற்றி பார்க்க,உறுதுணையாக இருந்தது. ஆனால்,சற்று கால த்திற்கு பிறகு,அந்த சப்பாத்தை விட,அவர்களின் கால்கள் கூட வளர,அவர்கள் புது சப்பாத்து மாற்ற வேண்டியுள்ளது-நல்ல சப்பாத்தாக,பெரிய சப்பாத்தாக.குழந்தைகள் மெல்ல மெல்ல முதிர,அந்த மாற்றிய சப்பாத்துக்களும் இறுக்க மாகின்றன,தேய்ந்து போகின்றன.மீண்டும் கூட வளர,மீண்டும் மாற்றப் படுகிறது.ஆனால்,பலர் சமயத்தை அப்படியே வைத்திருப் பதற்க் காக தங்களை கட்டுப்படுத்தி ஒரு வரம்பு போட்டு விடுகிறார்கள் ....அதனால்,காலத்திற்கு ஒவ்வாத பழைய முறையையே அப்படியே கடைப் பிடிக்கிறார்கள்.ஆகவே சமயத்தின் நிழலால் கவ்வப்ப படாமல், வாழ்க்கையின் அழகை என்று மனிதன் உணர்கிறானோ அன்று தான் மனிதனின் பெரு வெற்றியாகும்!

நான் மனிதனாக இருக்கவே கடவுள் எதிர்ப் பார்ப்பதாக நான் உணர்கிறேன்.நான் வேறாக இருக்க வேண்டும் என்று கட் டாயம் கடவுள் விரும்பி இருக்க மாட்டார்.ஏன் என்றால் நான் இப்படி இருக்கவே அவர் விரும்புவார் என்பதில் எனக்கு ஐயமில்லை.நான் கண்களை மூடி ,என்னை புனிதனாக அல்லது தூயவனாக மாற்று என கடவுளை நான் பிரார்த்திக்க வேண்டும் என அந்த கடவுள் கட் டாயம் விரும்ப மாடடார். ஏனென்றால்,அவர் தான் என்னை இப்படி மனிதனாக படைத்தவர். கடவுளுக்கு நான் மனிதன் என்பது முன்பே கட் டாயம் தெரியும்... ஆகவே நான் தான்,எனது முதல் உலகம் மானிடம்[humanity], இரண்டாவது உலகம் மனிதநேயம்[humanism]. மூன்றாவது உலகம் வெறுமனே ஒரு மனிதர்[human] என்பதை அறிய வேண்டும். நான் மனிதனாக இருப்பதையிட்டு பெருமைப் படுகிறேன்.நாங்கள் வேறு யாருமில்லை, மனிதர்களே.ஏன் நீங்கள் இப்ப ஒரு கிறிஸ்த வராகவோ அல்லது ஒரு இஸ்லாமியராகவோ அல்லது ஒரு இந்துவாகவோ அல்லது ஏதாவது ஒரு மதத்தினராகவோ இருக்கிறீர்கள் என்பதை ஒரு கணம்  சிந்தித்து பார்த்தீர்களா?உங்கள் மூதாதையர் அப்படி இருந்ததால் இப்ப நீங்களும் பெரும்பாலும் அதே சமயத்தில் இருக்கிறீர்கள்.நீங்கள் மாறி வேறு சமயத்தை கடைப் பிடிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து இருந்தால் ....இப்ப அந்த சமயத்தின் நம்பிக்கையாளராக இருந்திருப்பீர்.அந்த சமயத்தை நம்புவது மட்டும் அல்ல,அதுவே,அது ஒன்று மட்டுமே உண்மையான சமயம் எனவும் நம்புவீர்கள்.நாங்கள் கூட சிந்திக் கிறோம் ,ஆனால் கொஞ்சமாகவே உணரு கிறோம்....எம்மிடம் இயந்திர அமைப்பை விட மானிடம் வேண்டும்....அப்படியே கெட்டித்த தனத்தை விட,எங்களுக்கு இரக்கமும் சாந்தமும் வேண்டும்....இவைகள் எதுவும் இல்லா வாழ்க்கை, கட் டாயம் வன்முறையாகவே இருக்கும். நீங்கள் இயந்திரம் அல்ல,நீங்கள் மந்தைகளும் அல்ல...உங்கள் இதயத்தில் மனித குலத்தின் மேல் அன்பு இருக்கிறது.இந்த உலகம் எல்லா வசதிகளும் படைத்தது, அங்கு எல்லோருக்கும் இடமுண்டு....நாம் எல்லோரும் ஒவ்வொருவரினதும் மகிழ்ச்சியில் வாழவேண்டும், அவர்களின் துயரத்தில் அல்ல....நாங்கள் ஒருவரை ஒருவர் பகைத்தும் தூற்றியும் வாழ்த் தேவையில்லை... நாம் ஒருவரை ஒருவர் உதவ வேண்டும் ,மனித வர்க்கம் அப்படித் தான் இருக்க வேண்டும்... மனிதனாகிய உங்களுக்கு சக்தி உண்டு..இயந்திரத்தை உருவாக்க...மகிழ்ச்சியை உருவாக்க...மனிதனாகிய உங்களுக்கு வாழ்க்கையை சுதந்திரமாக இனிமையாக மாற்றி அதை ஒரு அற்புதமான பயணமாக மாற்ற சக்தி உண்டு.அதை உணருங்கள்! 

ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக கடமைகள் உண்டு.அவை முறையாக செய்யப் பட வேண்டும்.தமிழ் பண்பாடும் இதை அறிவுறுத்து கிறது. பண்டைய தமிழ் சங்க பாடல்கள் இதை வலியுறுத்து கின்றன.ஒவ்வொரு தனிப் பட்டுவரும் சுய சிந்தனையாளராக மாறவேண்டும்.இதற்கு முதற்கண்,இன்றில் இருந்து, நாம்,எம்மை சுயமாக சிந்திக்க விடாமல் மழுப்பும் ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறக்க வேண்டும் ,மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் அவன் எங்கு இருந்தாலும் படிப்பிற்கு முதல் இடம் கொடுக்கிறான். இதனால் தமிழன் பல மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் தனது சமுதாயத்தில் உண்டாக்கிறான். ஆனால்  ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை[dichotomy] உள்ளத்தில் கொண்டுள்ளார்கள்.இவர்கள் விஞ்ஞானத்தை படிக்கிறார்கள் அனால் அதில் அறிவியல் மனநிலை [scientific temper] இல்லாமல்.உதாரணமாக,வானியலைப் பற்றி படிப்பிக்கும் ஆசிரியர் அதை வகுப்பு அறையோட முழுக்கு போட்டு விட்டு ,சூரிய சந்திர கிரகணத்தின் போது குளத்தில் புனித நீராடுகிறார். இப்படியான சந்தேகத்திற்குரிய இரட் டை வாழ்க்கை தவிர்க்கப் படவேண்டும்.நாமும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் .தெளிவில்லாத வைதீக கோட் பாட்டின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை,எம்மை புதுமையாக,சமூகத்தின் மேம்பாட்டிற்க் காக சுயமாக சிந்திக்க விடாது.பொதுவாக சமய தலைவர்கள், அவர்களை பின் பற்றுபவர்களை சிந்திக்க விடமாட் டார்கள்.அங்கு நீங்கள் சுயமாக சிந்திக்கும் உரிமை கிடையாது. நீங்கள் உங்கள் பாட்டில் புரிந்து, ஒரு பிரச் சனையை தீர்க்கவும் முடியும் என்றால்,ஏன் கடவுளிடமோ அல்லது  கடவுளின் தூதுவர் என கருதப் படும் சாமி மாரிடமோ போக வேண்டும்? தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்.நீங்கள் உங்களையும் ஏமாற்ற வேண்டாம்,மற்றவர்களையும் ஏமாற்ற வேண்டாம்! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

முடிவுற்றது  

0 comments:

Post a Comment