சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?[பகுதி:01]


முதலில் இந்து[ஹிந்து/Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும் பொருளையும் பார்ப்போம். ஹிந்து/Hindu என்ற சொல் பிழையாக விளங்கப் பட்டு,பிழையாக பாவிக்கப் படுகிறது.பலருக்கு இதன் மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது.இன்று இந்தியாவில் இந்து, இந்துத்துவா [இந்துத்துவம்/Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில் பாவிக்கப் படுகிறது.மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்படவில்லை. ஆனால், உண்மையில் இந்து,இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது.அது மட்டும் அல்ல "இந்து" ஒரு மதத்தை குறிக்கும் சொல்லே இல்லை.இது எந்த ஒரு பண்டைய வேதத்திலும்[Ancient Vedic Scriptures] கூட குறிக்கப் படவும் இல்லை .
இந்து[Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து[Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது.அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல்,"S" க்கு  பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது "இந்து"["Hindu "]வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள்.பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா[ஜெந்த் அவெஸ்தா/Zend Avesta] வும்  ,"இந்து" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப் பிடுகிறது,இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது  குறிப்பிட வில்லை. கி.மு.546  ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம்[பேரரசு]  இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது .மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள்.இந்த மக்களை பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது.அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [ Alexander the Great ] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து[Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம்.கி மு 325  இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய  மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை,இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு,வேத கால பெயர் பாரத்[பாரத/Bharat ] ஆகும்.
ஆகவே,இந்து என்ற மூல[வேர்] சொல்,சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே.சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான்.மற்றும் படி ஒன்றும் இல்லை.என்றாலும் வேறு ஒரு பார்வையில்,இந்து  [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு.

உதாரணமாக,இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்,ஆரிய சமூகத்தை அவமானப்படுத்தும் பொருட்டு ,தரக்குறைவாக அவர்களை குறிக்க இந்த சொல்லை பாவித்தார்கள். 'பெர்ஷியன்' மொழியில் இதற்கு  அர்த்தம் என்னவென்றால்,அடிமை [ slaves],திருடன் [thief], வழிப்பறிக்காரன் [dacoit],வழிப் போக்கர்களைக் கொள்ளையடிக்க மறைவில் ஒளிந்து தாக்குபவர் [waylayer] ஆகும்.மற்றும் வேறு சில கீழ்ப்படிந்த வேலைக்காரன் (obedient servant), கருத்த நிறம் (black colour),கருப்பு  (black). என இகழ்கிறது.[a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964,and another dictionary, Urdu-Feroze-ul-Laghat (Part One, p. 615)]

உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு தவிர்க்க இயலாத
ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவ வழிபாடு செய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டு செல்லும் அம்சமாகவே இருக்கின்றது.உதாரணமாக, அல்வார் நகரத்திற்கு ஒரு முறை சுவாமி விவேகானந்தர் மங்கள் சிங்கை சந்திக்க அவரின் அரண் மனைக்கு சென்றார். அப்பொழுது  மங்கள்  சிங் ஏளனமாக சிரித்துக் கொண்டு விவேகானந்தரிடம் கூறினார்:"நீங்கள் வழிபடும் விக்கிரகம் [உருவச்சிலை] ஒன்றும் பெரிதாக இல்லை,அவை வெறும் களி மண்,கல்,அல்லது உலோகம் மாத்திரமே?நான் நினைக்கிறன்,ஆகவே, உங்கள் உருவ வழிபாடு அர்த்தமற்றது என்று?".விவேகானந்தர் அங்கு ஒரு உருவப்படம்[ஓவியம்] சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார்.விவேகானந்தர் அந்த ஓவியத்திற்கு கிட்ட போய்,அதை சுவரில் இருந்து கீழே எடுக்கும் படி அரமனை தீவானிடம் கேட்டார் .அந்த ஓவியம் மங்கள் சிங்கின் இறந்து போன தந்தையாருடையது.தீவான் அதை கீழே எடுத்ததும்,அந்த ஓவியத்தின் மேல் துப்பும் படி விவேகானந்தர் கூறினார்.இதை கேட்ட அரசன் சீற்றம் கொண்டு:"எந்த தைரியத்துடன்,என் தந்தையின் மேல் துப்பும் படி நீ கேட்பாய்" என்று ஆவேசமாக கேட்டார்.ஆனால் அமைதியாக, சிரித்த படி, விவேகானந்தர் பதில் அளித்தார்:"உங்கள் தந்தை எங்கே?இது ஒரு வெறும் ஓவியமே?-ஒரு துண்டு காகிதமே,உங்கள் தந்தை இல்லையே?". அரசனின் முன்னைய உருவ சிலை பற்றிய கருத்துக்கு ஒரு விளக்கமாக விவேகானந்தரின் பதில் அமைந்து இருந்தது.எனவே,அரசன், குழப்பத் துடனும் பேச முடியாமலும் அப்படியே இருந்து விட்டார்.விவேகானந்தர் அப்பொழுது அரசனிடம் :" மகாராஜா அவர்களே,இது உங்கள் தந்தையின் ஒரு ஓவியம்,ஆனால்,நீங்கள் அதை பார்க்கும் பொழுது ,இது உங்கள் தந்தையை நினைவூட்டுகிறது.இங்கு இந்த ஓவியம் ஒரு சின்னமாகும். அப்படியே,ஒரு இந்து அல்லது சைவ பக்தர் உருவச் சிலையை வழிபடும் பொழுது,அந்த சின்னம் அவர்களுக்கு அவர்களின் அன்பு தெய்வத்தை நினைவூட்டுவதுடன்,அவர்கள் அந்த தெய்வம் உருவச் சிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்."என்று விளக்கினார்.
இதனாலேயே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.அவை பண்பாடு,கலைகள்,வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம் வளர்க்கும் உன்னத நிலையங் களாகவும் விளங்கி வருகின்றன. எப்படி, கட்டிட கலைக்கு இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc.Eng), மருத்துவத்திற்கு மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு (M.B.B.S),கலைகளுக்கு இளநிலைப் பட்டமான  நுண்கலை பட்டப்படிப்பு (B.A,fine arts) என்று ஒவ்வொரு அறிவியல் பாடங்கள்  இருக்கின்றதோ அதுபோலவே,திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு அறிவியல் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.சைவ மதம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம்.இங்கு ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும்.ஆகமம் என்பதற்கு  மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது;வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது. சடங்குகளைப் பொருத்த வரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்கினிச் [தீ] சடங்குகள் . ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்கினி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்வதாக இங்கு கருதப் படுகிறது. ஆகம வழி பாட்டில், அக்கினிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டி விட்டு எடுத்து விடலாம். மேலும்  வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன் படுத்தலாம்,ஆகம வழிபாட்டில் பெரும் பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நான் வணங்கு கிறேன் என்று சொல்வது தான்.வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது;ஆகவே, ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினராக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல.அது மட்டும் அல்ல, ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை.பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ [பிஷ்டம் -- மா] பயன்படுத்தப்பட லாயின.

சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்[Dr.Pope]"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்தி ற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார் .தமிழர்களின் படிப் படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி,அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும்,நான்கு வேதங்களின் சிந்தனை களாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறு பட்டது.ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது.பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின்,முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும்.திராவிட குழுக்களிலும் தமிழரே,வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள்.ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும்.எனவே,சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது. எடுத்ததற்க் கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும்.ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்க வில்லை.கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே , தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக,மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளை யும் தாண்டி,சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார்.அதற்கு முன்,திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன்,இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக,ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின.இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும்.இது மிக உயர்ந்த கருத்துக்களும்,மறைபொருட்களும் கொண்ட,ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. இங்கு தான், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது என்று கருதப் படுகின்றது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"என்று முழங்கிய திரு மூலர்,முதல் முதலில் தனது செய்யுள் வரி-1421 யில்,சைவ சித்தாந்தம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.  "கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்,முற்பத ஞான முறைமுறை நண்ணியே,சொற்பத மேவித் துரிசற்று மேலான,தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே." என்று அந்த திரு மந்திரம் கூறுகிறது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]    

பகுதி:02  தொடரும்.

0 comments:

Post a Comment