"தமிழ் புத்தாண்டு"[பகுதி:01]

"தமிழ் புத்தான்டு,சிக்கலாகி போனது 
ஜனவரியா?ஏப்ரலா? ஒரே முழக்கம்
என்னை குழப்பி,தடுமாற்றிப் போனது
வாழ்த்துச் சொல்ல,தடுத்துப் போனது!"  

"பட்டி மன்றம்,விவாதம்,பல கேள்விகளோடு
தையா?சித்திரையா? ஒரே அலசல்
சித்திரை,ஒரு மத விழா?,ஆனால் தையோ   
எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தமிழர் விழா!" 

"கொஞ்சம் மறந்து,இன்று கொண்டாடுவோம்,
பழையன கழியட்டும்,புதியன மலரட்டும்  
இனிப்புடன் காக்கை கரைதலும் கேட்கட்டும் 
வசந்தம் வீசட்டும்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

தமிழ் புத்தாண்டு ஜனவரி[தை] 14 /15 /16 அல்லது ஏப்ரல்[சித்திரை] 14 /15 /16 என்பதில் ஒரு கருத்து மாறுபாடு காணப்படுகிறது .பல ஆண்டுகளாக நாம் தமிழ் மாதம் சித்திரை முதலாம் திகதி புத்தாண்டை கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாக இருந்துள்ளது.என்றாலும் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும்.அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்?. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள்.இந்தியாவில் / அதன் பின் தென்னாட்டில், ஆரியர்களின் ஊடுருவலால், தமிழரின் சைவ மதம் இந்து மதத்திற்குள் உள்வாங்கப் பட்டதால், இந்த ஆண்டுமுறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப் பட்டது எனலாம். அதனால் தான் இன்னும் ஆண்டின் பெயர்கள் வட மொழி பெயர்களாக காணப் படுகின்றன.60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப்படுகிறது. இதன்  விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். சென்னையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக்களஞ்சிய நூலை 1910-ல் வெளியிட்டார். அவரது மகன் 1934-ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது இந்தக் கதை அங்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனினும்,இந்த ஆரியக் கதையை தவிர்த்து,இந்த 60 ஆண்டுகள் நாட்காட்டி[காலண்டர்] முறையை ஆய்வு செய்யும் பொழுது,இது காலத்தைப்பற்றிய மனிதஅறிவின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே என நாம் கருதலாம். இன்றைய இராக்[Iraq] எனப்படுகிற நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த  தமிழர்களின் [திராவிடர்களின்] மூதாதையர் என கருதப்படும் சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட ஒரு முறையை பயன்படுத்தியுள்ளனர். அதே போல,இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில், கி.மு., 2500 முதல் கி.பி., 950 வரை  வாழ்ந்த, மாயன் நாகரிக மக்களும்  60 ஆண்டுகள் சுழற்சிமுறையைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் தகவல்கள் உள்ளன.அது மட்டும் அல்ல,இந்த மாயன்களால், 'குக்கிள்கான்'[குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில்/Kukulcan or Quetzalcoatl/Maya snake deity ,பாம்புக் கடவுள், the Mayan’s supreme god] என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் சிசேன் இட்ஷா பிரமிட் [சிசென் இட்ஸா/Chichen Itza  pyramid] கட்டப்பட்டது.உண்மையில் இந்தக் குக்கி ள்கான்/குகுல்கன் ஒரு
கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்று கருதப் படுகிறது. இந்தக் குக்கிள்கான்/குகுல்கன் தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறா ர்கள் . வெளிரிய மங்கலான தோற்றமும் தாடியும் கொண்ட இந்த குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில் அல்லது எவராயினும் ,இவர் ஒருவர் அல்ல, அதிகமாக பல நபர்களை கொண்ட ஒரே இனத்தை சேர்ந்த ஒரு கூட்டம்  என கருதப் படுகிறது.பண்டைய மாயன் மக்களின் சிலம் பலம் (Chilam Balam /அவர்கள் மொழியில் சிறுத்தையை "பலம்" என்றும்  , சிலம்  என்பதை  பூசாரி என்றும் சொல்வார்கள்.) என அழைக்கப் படும் மத புத்தகம், மெக்ஸிகோ நாட்டின் உள்ள யுகடான் [Yucatan] பகுதியினை வாழிடமாக கொண்ட முதல் மக்கள், நாக மக்களென்றும் [நாகர் /People of the serpent] அவர்கள் கிழக்கில் இருந்து படகில் அங்கு தமது தலைவர் இட்ஸாமான [Itzamana]  வுடன் வந்தவர்கள் என்கிறது.அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்தால்,அந்த கால பகுதியில்,இரண்டே இரண்டு விடைகள் தான் உண்டு.ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை ஆகும்.என்றாலும் பத்து வருடம் அங்கு தங்கி இருந்து ஆட்சி செய்த பின்,அவர்கள் வந்த வாறே, அவர்கள் சூரியன் உதிக்கும் திசை நோக்கி மறந்து போனார்கள் என்கிறது. சீனா விலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.எது எப்படி ஆயினும்,1921 ஆண்டிலும் அதன் பின்பும் தமிழ் அறிஞர்களால் தை பொங்கலே தமிழர் புத்தாண்டு என கோரிக்கை விடப்பட்டுள்ளது .

தமிழறிஞர்கள் பலர் 1921 இல்,சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒருங்கே கூடி......தமிழ் ஆண்டு பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்! மறை மலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர் ஒன்று கூடி இந்த ஆய்வு நடைப் பெற்றது.!ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அதில் சொல்லியிருப்பது :

* இப்போது சொல்லப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபதாண்டுகள், தமிழ் அல்ல!
* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

எனினும் திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் கூறுகிறார்.திருக் குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயம் நாம் உணரலாம்.ஆகவே சரியாக திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இன்னும் இருக்கிறது? 

மீண்டும் சில ஆண்டுகள் கழித்து,திருச்சி அகிலத் தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா.மீனாட்சி சுந்தரனார்,புலவர் கா.ப.சாமி, திரு வி.க. மறைமலை அடிகள, தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஏப்ரல் 14 ஐ,பொதுவாக இந்து புத்தாண்டு[Hindu New year] எனவே கூறுகிறார்கள்.இலங்கை நாட்காட்டியில் இந்து,சிங்கள புது வருடம் என குறிக்கப்பட்டு இருப்பதையம் கவனிக்க.அது மட்டும் அல்ல,இது,இந்து ,புத்த புது வருடம் என குறிக்கப்படவில்லை என்பதையும் நாம்  கவனிக்க வேண்டும் .இது ஏன் என்றால் வேறு நாடுகளில் உள்ள மற்ற பவுத்தர்கள் தங்களுக்கு என வேறு புது வருட திகதிகள் வைத்திருப்பதால் ஆகும் .

இந்துக்களால் நம்பப்படும் புராணத்தை இனி இங்கு சற்று விரிவாக ஞாபகப்படுத்துவது நல்லது என நம்புகிறேன்.ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை நோக்கி,"நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "என்னுடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து வாழ விரும்பு கிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து, அறுபது மகன்களைப் பெற்றார்.பிராமண,ஆரிய சமூகம் எவ்வளவு தூரம் ஆணை மையமாக கொண்ட,தந்தை வழிச் சமூகம் என்பதை இது தெட்டத் தெளிவாக காட்டுகிறது.இந்த அறுபது பிள்ளைகளிலும் ஒரு மகள்-பெண்-கூட கிடையாது?.தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம். இந்த நாரதர் பெற்ற அறுபது மகன்களும்,  'பிரபவ'[Prabhava] தொடங்கி 'அட்சய'[Akshaya] வரை பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.இந்த கதை உண்மையோ பொய்யோ என்பதை விட ,இப்படியான அருவருக்க தக்க வரலாற்றின் அடிப்படையில் புத்தாண்டை நிர்ணயிப்பது, அறிவியல், பொது விவேகம் இவைகளுக்கு ஏற்புடையவை அல்ல.அது மட்டும் அல்ல இந்த 60 பெயர்களும் தமிழ் பெயர் அல்ல.அப்படியாயின் இது எவ்வாறு தமிழ் புது வருடமாக இருக்கக்கூடும் ?

"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "அட்சய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் வட இந்தியா மன்னன் சாலிவாகனன் என்பவனால் [ கி.பி 78-இல்] ஏற்பட்டவை என்பது இன்னும் ஒரு கருத்து. இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள்.தொடர் ஆண்டுகள் அல்ல.அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும்.எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிடமுடியாது.உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று கூறினால், அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்து விடுகிற தல்லவா? எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது.இதனால் சரித்திர முக்கிய நிகழ்வுகளை சரியாக பதிய இயலாமல் போகிறது .மேலும் ஆலயத்தில் இன்னும்  புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை தமிழ் பக்தர்களுக்கு ஓதுவது போல, இந்த பெயர்களும் பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ....என போகிறது?அது மட்டும் அல்ல,இந்த ஆண்டுகளின் பெயர்களும் பெருமை படக் கூடியதாகவும் இல்லை.உதாரணமாக, மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது, இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி", எதிரி என்பதாகும், முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி". அழகற்றவன் என்பதாகும், முப்பத் தெட்டாவது ஆண்டு "குரோதி",பழிவாங்குபவன் என்பதாகும்,ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி" கெட்டபுத்தி என்பதாகும்.உதாரணமாக, ஆண்டுகள் என்பது வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை மேலும் குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இனி பிந்திய சங்க காலத்தில் தொடங்கிய தமிழ் மாதம் தை ஒன்றின் கொண்டாட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 

சங்க இலக்கிய படைப்பான பரிபாடலின் படி,திருவாதிரை நோன்பு (விரதம்) கொண்டாட் டத்துடன் இந்த நாள் தொடர்புபடுகிறது.மார்கழி மாதம் முழுவதும் கடவுளை வழி பட்டு, நோன்பு விரதம் இருந்த கன்னிப்பெண்கள், இறுதி நாளான தை ஒன்றில் ,தை நீராடளுடன் முடிக்கிறார்கள். கலித்தொகை பாடலின் படி ,மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருப்பது தங்களால் விரும்பத்தக்க சிறந்த தலைவனைப் பெற்று,அவருடன் தங்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்ற ஒரு நம்பிக்கையே என்கிறது.அத்துடன் சூரியனை ஒரு தெய்வமாகவும்  இது சொல்லுகிறது.

ராஜராஜ சோழன் காலத்தில் தான் பொங்கல் பண்டிகை "புதியீடு" என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது.அதாவது,ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள்.இதை 'புதியீடு விழா' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
மார்கழி மாத நோன்பு விரதமும் தை முதல் நீராடலும் இன்றும் கொண்டாடப் படுகிறது. இந்த  உலகியல் சார்ந்த சடங்குமுறையே ,9 ஆம் நூற்றா ண்டில் வாழ்ந்த  ஆண்டாளையும் ,மாணிக்கவாசகரையும்  திருப்பாவை - திருவெம்பாவை பாட தூண்டியது .சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது. திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.
திருப்பாவையில்,
''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''

பாவை நோன்பை கடைப்பிடிப்பதற்காக அதிகாலையில் துயில் கலைந்து எழுந்த ஆண்டாள், தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீராடச் செல்வதற்க்காக,அவர்களைப் பார்த்து,  "அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், என்னுடன் வாருங்கள்,நாம் ஒன்றாக போகலாம் [In this month of Marghazhi,On this day filled with the light of moon,Come for bathing,Oh ladies who are richly dressed,And Oh ladies in rich homes of cowherds]என்கிறாள்.
திருவெம்பாவையில்,
'' போற்றியாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய் ''

இறைவன் திருவடிகளே எம்மை  ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய் [Let those golden feet bless us. Let this festival of bathing in the month of Markazhi be blessed. Let us all sing together.]என மாணிக்கவாசக சுவாமிகள் அறை கூவல் விடுகிறார்.tamil newyear

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:02  தொடரும் 


2 comments:

  1. சித்தா்கலின் வானவியல் ஆதாரப்படி,
    தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மேழ(சித்திரை) மாதம் தான்.
    ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மேழ(சித்திரை) மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் .
    "மடங்கல்(ஆவணி) தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது
    தொல்காப்பியம் கூறும் தமிழ்ப்புத்தாண்டு.
    "சங்க தமிழாின் தமிழ் மாத பிறப்புககளை கொண்டாடுவோம்"
    "மீட்டிடுவோம் சங்கதமிழ் பண்பாட்டை"
    "மேழ(சித்திரை) மாத பிறப்பு வாழ்த்துக்கள் "
    மேழ(சித்திரை) மாத பிறப்புசிறப்பு
    மேழ(சித்திரை) மாத பிறப்புசிறப்பு-
    மேழ மாத என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் மேழ மாத(சித்திரை மாதம்). சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை
    சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
    அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார்.
    இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்
    கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார்.
    கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில்
    வருணிக்கப்பட்டுள்ளது.
    "மடங்கல்(ஆவணி) தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது
    தொல்காப்பியம் கூறும் தமிழ்ப்புத்தாண்டு.
    தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கணித் தல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஞாயிறு எனப்படும் சூரியனுக்கு உரிய ஓரை ஆவணி ஓரையாவது சிங்க ஓரை யாகும். அதற்குரிய திங்கள் ஆவணி யாகும். எனவே ஆவணி தொடங்கி மாதங்களை எண்ணுதல் ஒருமுறையாகும்.
    "ஆவணி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது வரலாற்று உண்மை.
    தொல்காப்பியத்தில்
    காரும் மாலையும் முல்லை குறிஞ்சி உதிர்யாமம் எண்மார் புலவர்
    என்று கூறப்பட்டுள்ளது.
    கார்காலம் புரட்டாசிக்கு முந்திய ஆவணி. எனவே இந்த வரிசையில் ஆவணி புத்தாண்டாக இருந்துள்ளது .
    நெடுநல்வாடையில் அரசமாதேவி காணும் காட்சி ஒன்று குறிப்பிடப்படுகிறது.
    திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
    விண்ணுர்புதிர்தரும் வீங்குசெல்ல மண்டிலத்து
    முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
    உரோகிணி நினைவினன் நோக்கிறெழது உயிரா
    உ 166-113
    திருஞான சம்பந்தர் திருமயிலையில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய திருப்பதிகத்தில் இரண்டாம் திருமுறை - 47ஆம் பதிகத்தில், ஐப்பசி ஓணம், கார்த்திகை, நாள் விளக்கீடு, ஆதிரை நாள், தைப்பூசம், மாசிக்கடலாட்டு, பங்குனி உத்திரநாள் என்று திருவிழாக் களை யெல்லாம் கூறி ௨ள்ளாா்
    சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை கப்பலேறிப் போயாச்சு .
    இனிய தமிழ் மேழ(சித்திரை) மாத பிறப்பு (புதுவருட )வாழ்த்துக்கள்
    வாழ்க வழமுடன்
    அருள்செல்வன்,
    அருளகம்,
    தமிழ்தேசியம்,
    சிவபுரம்-

    ReplyDelete
  2. சித்தா்கலின் வானவியல் ஆதாரப்படி,
    தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மேழ(சித்திரை) மாதம் தான்.
    ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மேழ(சித்திரை) மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் .
    "மடங்கல்(ஆவணி) தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது
    தொல்காப்பியம் கூறும் தமிழ்ப்புத்தாண்டு.
    "சங்க தமிழாின் தமிழ் மாத பிறப்புககளை கொண்டாடுவோம்"
    "மீட்டிடுவோம் சங்கதமிழ் பண்பாட்டை"
    "மேழ(சித்திரை) மாத பிறப்பு வாழ்த்துக்கள் "
    மேழ(சித்திரை) மாத பிறப்புசிறப்பு
    மேழ(சித்திரை) மாத பிறப்புசிறப்பு-
    மேழ மாத என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் மேழ மாத(சித்திரை மாதம்). சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை
    சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
    அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார்.
    இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்
    கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார்.
    கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில்
    வருணிக்கப்பட்டுள்ளது.
    "மடங்கல்(ஆவணி) தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது
    தொல்காப்பியம் கூறும் தமிழ்ப்புத்தாண்டு.
    தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கணித் தல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஞாயிறு எனப்படும் சூரியனுக்கு உரிய ஓரை ஆவணி ஓரையாவது சிங்க ஓரை யாகும். அதற்குரிய திங்கள் ஆவணி யாகும். எனவே ஆவணி தொடங்கி மாதங்களை எண்ணுதல் ஒருமுறையாகும்.
    "ஆவணி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது"என்பது வரலாற்று உண்மை.
    தொல்காப்பியத்தில்
    காரும் மாலையும் முல்லை குறிஞ்சி உதிர்யாமம் எண்மார் புலவர்
    என்று கூறப்பட்டுள்ளது.
    கார்காலம் புரட்டாசிக்கு முந்திய ஆவணி. எனவே இந்த வரிசையில் ஆவணி புத்தாண்டாக இருந்துள்ளது .
    நெடுநல்வாடையில் அரசமாதேவி காணும் காட்சி ஒன்று குறிப்பிடப்படுகிறது.
    திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
    விண்ணுர்புதிர்தரும் வீங்குசெல்ல மண்டிலத்து
    முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
    உரோகிணி நினைவினன் நோக்கிறெழது உயிரா
    உ 166-113
    திருஞான சம்பந்தர் திருமயிலையில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய திருப்பதிகத்தில் இரண்டாம் திருமுறை - 47ஆம் பதிகத்தில், ஐப்பசி ஓணம், கார்த்திகை, நாள் விளக்கீடு, ஆதிரை நாள், தைப்பூசம், மாசிக்கடலாட்டு, பங்குனி உத்திரநாள் என்று திருவிழாக் களை யெல்லாம் கூறி ௨ள்ளாா்
    சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை கப்பலேறிப் போயாச்சு .
    இனிய தமிழ் மேழ(சித்திரை) மாத பிறப்பு (புதுவருட )வாழ்த்துக்கள்
    வாழ்க வழமுடன்
    அருள்செல்வன்,
    அருளகம்,
    தமிழ்தேசியம்,
    சிவபுரம்-

    ReplyDelete