கம்பனின் அறிவியல் ஆழம்:



மேற்கே உதித்த சூரியன்!

இராவண-இராம யுத்தத்தின் போது , ராம லட்சுமணர்கள்  உட்பட ஒட்டுமொத்த வானர சேனைகளும் மாண்டுபோயினர். இவர்களை உயிர்ப்பிக்க, மருந்து மலையிலிருக்கும் மூலிகையை விடியுமுன் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற நிலைஅம்மூலிகையைக்  கொண்டு வருவதற்காக அனுமான் புறப்படுகிறான். இலங்கையில் இருந்து வட திசையில் மிகப் பெரிய தொலை தூரம் ஐந்து பெரு மலைகளைத் தாண்டிப்  போயாகவேண்டும். முதலில் இமயமலை (9,000 யோசனை தூரம்), பொன்மலை (11,000 யோ.), செம்மலை (9,000 யோ.), மேருமலை (9,000 யோ.) எல்லாம் தாண்டி உத்தரகுரு நாடு என்னும் போக பூமியை அடைகிறான். இன்னும் நெடுத மலையைத் தாண்டினால்தான் மருந்து மலையை அடையலாம். ஆனால் அந்நாட்டில் சூரியன் தனது மேற்குத் திசையில் உதயமாகி எழுவது கண்டு அதிர்ந்து போனான். ஐயையோ, பொழுது விடிந்து விட்டதே! தனது முயற்சி தோல்வியில் முடிந்ததே! என்று ஒரு கணம் மனம் கலங்கினான். அடுத்த கணமே, தான் மறை வல்லோரிடமிருந்து கற்றுததெரிந்த உண்மை ஒன்று நினைவில் வரவே அவன் சாந்தமானான்.
இதை விளக்க, முதலில் ஒரு அறிவியல் உண்மை ஒன்றை ஆராய்வோம்.

நமது பூமி உருண்டை வடிவானது என்று நமக்குத் தெரியும்.-ஆனால், கம்பனுக்குமா?-. நாம் மேற்குப் பக்கமாகப் பயணம் செய்யும்போது, நமக்கு முன்னால் மேற்கு, பின்னால் கிழக்கு, வலப்பக்கம் வடக்கு, இடப்பக்கம் தெற்கு. இது பூமியை ஒரு முழுச் சுற்று சுற்றி வந்தாலும் மாறாது.

சரி, இப்போது பூமத்திய ரேகையில் இருந்து இப்போது வடக்கே போவோம். இப்போது, நமக்கு முன்னால் வடக்கு, பின்னால் தெற்கு, வலப்பக்கம் கிழக்கு, இடப்பக்கம் மேற்கு. அனுமான் வெளிக்கிடும் பொது இடப்பக்கம் சூரியன் மறைவதை கண்டான். வடதிசை மேலே செல்லச்செல்ல அட்ச ரேகையின் சுற்றளவு குறைந்து கொண்டே போவதால் கிழக்கு, மேற்கு திசைகள் என்று சொல்லக்கூடிய தூரங்களின் அளவு குறைந்து கொண்டே போகும். கடைசியில் வடதுருவத்தை அடைந்து, அதையும் தாண்டி மறு பக்கம் இறங்கிச் சென்றால் என்ன நடக்கும்
அப்போது, நமக்கு முன்னால் இருப்பது தெற்கு (வடக்கல்ல!), பின்னால் வடக்கு, இடப்பக்கம் கிழக்கு, வலப்பக்கம் மேற்கு. அனுமான் வடமுனை தாண்டி மறு பக்கம் சேர்ந்ததும், ஊரில் வெளிக்கிடும்போது  இடப்பக்கம் மறைந்த சூரியன் அடுத்த பக்கத்தில் உதயமாகுவது அவனது இடப்பக்கம் என்பதால், முதலில் அது மேற்கில் உதிப்பதாக எண்ணிவிட்டான். பின்புதான் அந்த உத்தரகுரு நாட்டில் - அதைத் தாண்டிய மேருமலையிலும் - அது கிழக்குத் திசையே என்று தெளிவுற்று, இலங்கையில் சூரியன் உதிக்க இன்னமும் பல நாழிகைகள் ஆகும் என்று அமைதி கொண்டு தன்  பயணத்தைத் தொடரலானான்.

அப்பாடா! இப்படி ஒரு விளக்கம், மூலப் பிரதியான வால்மீகி இராமாயணத்தில் காணப்படவே இல்லையாம்! இது கமபனின் சொந்தக் கற்பனை! கற்பனையல்ல, அறிவியல் உண்மை!
இதற்கான பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் காண்க:

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல்திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன் வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் மிக்கான். - (கம்ப.8891)

தவத்து மிக்கான் - தவத்தாற் சிறந்தவனும்
கால் திசை சுருங்கச்செல்லும்  கடுமையான்  -  காற்றின் வேகம்  குறையுமாறும் திசையின்
தொலைவு சுருங்குமாறும்   செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய அனுமன்;
கதிரின் செல்வன்  மேல்  திசை  எழுவான்  அல்லன் - கதிரினைச் செல்வமாக உடைய  சூரியன்  மேற்குத் திசையில் எழுகின்ற இயல்புடையவன்  அல்லன்
விடிந்ததும்  அன்று - இப்போது    விடியற்காலமுமில்லை;
மேருமாற்றினன்மேருவில்    தன்   செலவை மாற்றினவனாய்;
வடபால் தோன்றும் என்பது  மறைகள் வல்லோர் சாற்றினர்  - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்)   தோன்றும் என்பது,   வேதம்  பயின்றவர்கள்  கூறியுள்ளனர்
என்ன,   துன்பம் தவிர்ந்தனன் - என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.

செல்வதுரை சந்திரகாசன்

5 comments:

  1. புராணக் கதைகளில் ஆரியர்கள் தங்களை உயர்த்தியும் அவர்களுக்கு சாதகமாகவும் தான் இக் கதைகளை வரைந்தார்கள்.அவற்றில் ஒன்றுதான்-
    "இராவணனின் படை வலிமையினால் இராமர் சேனை மாண்டனர்"என்பதனை "இராவணனின் வஞ்சனையால் இராமர் சேனை மாண்டனர்"என மாற்றிக்கொண்டார்கள்.
    இருந்தாலும் கம்பனின் அறிவு மெச்சத்தக்கது.

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, February 14, 2013

    [1]"ஜிரா" வின் விரிவான காணொலியை ஒரு மேலதிக தகவலாக இங்கு இணைக்கிறேன்
    http://www.youtube.com/watch?v=-4GFHS7Z_U0
    [2]கம்பர் கூறிய இராவணனின் படை வலிமைக்கு ஒரு சிறு உதாரணம் :

    இராவணனின் சேனையைப் பார்த்து அஞ்சிய வானவர்கள்

    9461. ‘ஒருவரைக் கொல்ல, ஆயிரம்
    இராமர் வந்து, ஒருங்கே
    இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று
    அமர்செய்தால், எனாம்?
    நிருதரைக் கொல்வது, இடம்பெற்று ஓர்
    இடையில் நின்று அன்றோ?
    பொருவது, இப்படை கண்டு, தம்
    உயிர் பொறுத்து அன்றோ? ‘

    [இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர் செய்தாலும் என்ன விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட முடியாது); அரக்கர்களைக் கொல்வதென்பது;நிற்பதற்குப் போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில் நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை )போர் செய்வதென்பது; இந்தப் படையைக் கண்ட பிறகும்; தங்கள் உயிரைத்
    தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ?]

    ஓடிய வானரங்களின் அச்சச் சொல்

    9465. ‘அடைத்த பேர் அணை அளித்தது
    நமக்கு உயிர்; அடைய
    உடைத்துப் போதுமால், அவர்
    தொடராமல் ‘என்று, உரைத்த;
    ‘புடைத்துச் செல்குவர் விசும்பினும் ‘
    என்றன; போதோன்
    படைத்த திக்கு எலாம் பரந்தனர் ‘
    என்றன, பயத்தால்.

    [ கடலைத் தூர்ப்பதற்காக நாம் அமைத்த பெரிய அணை இப்போது நமக்கு உயிர் அளித்தது; நம்மைப் பிடிப்பதற்கு அந்த அரக்கர் தொடர்ந்து வர முடியாமல் அணை முழுவதையும் உடைத்துக் கொண்டே போவோம்.தப்பி ஓடுகின்ற நம்மை ஆகாய
    வழியிலும் வந்து அடித்துப் போடுவார்கள்;தாமரை மலரில் உள்ள நான்முகன் படைத்த எல்லாத் திசைகளிலும் அவ் அரக்கர்கள் பரவியுள்ளனர்; பயங்கொண்டமையால் இவ்வாறு (வானரங்கள்) கூறின. ]

    இப் பெரும்படை எங்கிருந்து வந்துளது? சொல்லுக ‘என இராமன் கேட்க, வீடணன் மூலமாத் தானையைப்பற்றி எடுத்துரைத்தல்[ஒரு காட்டிக்கொடுக்கும் வஞ்சனை???]

    9467. ‘இக் கொடும் படை எங்கு உளது?
    இயம்புதி ‘என்றான் :
    மெய்க் கடுந் திறல் வீடணன்
    விளம்புவான் : ‘வீர!
    திக்கு அனைத்தினும், ஏழு
    மாத்தீவினும், தீயோர்
    புக்கு அழைத்திடப் புகுந்துளது,
    இராக்கதப் புணரி.

    ['இதுவரை இல்லாமல் திடீரென இப்போது தோன்றியுள்ள இந்தக்
    கொடிய படை எங்கே இருப்பது என்று இராமன் கேட்டான்;சத்தியமாகிய வலிய ஆற்றலனாகிய வீடணன் விளக்கமாகச் சொன்னான்;.........................]

    ReplyDelete
    Replies

    1. TO WATCH VIDEO
      JOIN THEEBAM FACEBOOK
      THANKS

      Delete
  3. இராமாயணத்தில் ஆரியர்கள் திராவிடர்களைத் தாழ்த்தி மதித்து எழுதினாலும் விரும்பியோ, விரும்பாமலோ பல்வேறு இடங்களிலும் திராவிடர்களின் அபார சக்திகளை அவர்களால் மறைத்துவிட முடியவில்லை. அவற்றுள் சில:
    - வாலி, இராமனிலும் பலமுள்ளவன்.
    - இராமன் யுத்தத்தில் வெல்ல இன்னொரு திராவிடப் படை தேவைப் பட்டது.
    - மேலும் இதற்கு ஒரு திராவிட எட்டப்பனும் தேவைப்பட்டது.
    - மாரீசன், சூர்ப்பனகை, விபீசணன், மேலும் பல அரக்கர்கள், அனுமான் எல்லோரும் பலமுறை நொடிப்பொழுதில் தாண்டக்கூடியதாக இருந்த கடல்பரப்பைக் கடக்க இராமனுக்கு ஒரு பாலம் தேவைப்பட்டது..
    - இப்பாலத்தைக் கட்டவும் திராவிடர்கள் தேவைப்பட்டது.
    - அரக்கர்களிடம் இருந்த விமான வசதி இராமனிடம் இல்லை.
    - அரக்கர்க்ளிடமுள்ள பறக்கும் திறனும் இராமனிடம் இல்லை.

    ReplyDelete
  4. அன்று தமிழர் அரக்கர்கள்,குரங்குகள்,இன்று பயங்கரவாதிகள்

    ReplyDelete