தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? பகுதி: 02


இன்று மக்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனையில் ஒன்று தற்கொலை ஆகும். உதாரணமாக 2016 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization] அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ  800,000 பேர் உலகில் தற்கொலை செய்கிறார்கள். இது உலகெங்கும் ஏற்பட்ட மொத்த மரணத்தின் 10 வது முக்கிய காரணியாக உள்ளது. இது சுமார் 0.5-1.4% உலக மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள் என்றும் வருடத்திற்கு 100,000 நபர்களுக்கு 12 பேர் என்ற வீதத்தில் இருப்பதாகவும் எடுத்து காட்டுகிறது. குழப்பமான இந்த தற்கொலை பிரச்சனைக்கு நாம் ஏதாவது ஒரு பொது "காரணம்" கண்டுபிடித்தால், நாம் ஒரு சிகிச்சையை அதற்கு திட்டமிடலாம் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால் தற்கொலை மரபணு [“suicide gene”] என்று ஒன்றையும் ஆய்வுகள் கண்டுபிடிக்கவில்லை. தற்கொலையானது பல காரணிகளின் ஒரு சிக்கலான எதிர் விளைவு என்பதால் [a complex interaction among many factors], அதை ஒரு  மரபணு குறியீட்டிக்கு குறைக்க முடியாது என்பது இன்றைய அறிஞர்களின் வாதம் ஆகும்.

தமிழர்களின் தாயகத்தை உள்ளடக்கிய இந்தியாவை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோம் என்றால், இந்தியாவின் பல பகுதிகளிலும் தற்கொலை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பதுடன், இது பெரும்பாலும் பொருளாதார நெருக்கடி, நோய், சமூக அழுத்தங்கள் குடும்ப பிரச்சினைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்துதல் [economic distress, illness, social pressures family problems, and ill-treatment by other family members] ஆகியவற்றால் ஏற்படுகிறது என அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. தேசிய குற்ற ஆவண பணியகம் [National Crime Records Bureau]  வெளியிட்ட இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 2012 ["Accidental Deaths and Suicides in India 2012"] என்ற அறிக்கையின் பிரகாரம், இந்தியா முழுவதும் ஆண்டு 2012 இல்  1,35,445 பேரும் ஆண்டு 2010 இல்  1,35,585 பேரும் தற்கொலை செய்துள்ளார்கள் என்றும், அதில் தமிழ் நாடு 16,927 பேருடன் முதல் இடத்தை பிடித்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் அங்கு சிலர் தற்கொலை செயலை அல்லது பயமுறுத்தலை, தீக்குளித்தல் அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளால் , அரசாங்கத்தின் அல்லது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து தனிப்பட்ட அல்லது சமூக காரணங்களை நிறைவேற்ற தமது விரக்தியின் இறுதி செயலாக ஈடுபடுகிறார்கள் எனவும் அறிகிறோம். இப்படியான செயல்கள் பண்டைய காலத்திலும் இந்தியாவில் நடைபெற்றதை வரலாறும் புராணங்களும் கூறுகின்றன.இதில் தமிழ் நாடு முதல் இடத்தில் இருக்கிறதாம்.

மருத்துவ ஆய்விற்கான இந்திய சபை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு [the Indian Council for Medical Research and the Ministry of Health and Family Welfare] தயாரித்துள்ள அறிக்கைகளும் 15-39 இடைப்பட்ட வயதினரின் தற்கொலையில் தென் இந்திய முதல் இடத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. உதாரணமாக இந்த வயதினரின் தற்கொலையில் தமிழ் நாடு முதல் இடத்திலும் கேரளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடுமையான சமூக நெறிகள் ஒரு படித்த, முற்போக்கான இளைஞர்களின் அபிலாஷைகளுடன் மோதுவதும், இளைஞர்களின் உயர்ந்த அபிலாசைகளினால்  ஏற்படும் மன அழுத்தமும் [rigid social norms clashing with the aspirations of an educated and progressive youth, as well as the greater experience of stress related to the higher aspirations of youth] முக்கிய பொதுவான காரணமாகிறது.

பொதுவாக தெற்கு மாநிலங்கள் வட மாநிலங்களை விட அதிகமான கல்வியறிவு பெற்றவை, கல்வி அறிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன, எதிர்பார்ப்பு கூடும் பொழுது ஏமாற்றமும் அதிகரிக்கின்றன. எனவே தற்கொலையும் அதிகரிக்கின்றன எனலாம். மற்றது பண்பாட்டு வித்தியாசம் ஆகும். உதரணமாக வட மாநிலத்தார் ஆப்கானியர்கள், மொகலாயர்கள், பிரித்தானியர்கள் [Afghans, Mughals, the British] போன்றவர்களுடன் பல போர்களில் ஈடுபட்டதால், அவர்களின் போக்கில் அதிக ஆக்கிரமிப்பு அல்லது தீவிரம் தெரிகிறது. அதே நேரத்தில் தென் மாநிலத்தார் இப்படி ஒன்றிலும் பெரிதாக ஈடுபடவில்லை. மேலும் சொல்லும் திறமையை அல்லது உணர்ச்சி வெளிப் பாட்டை பார்த்தாலும் வட மாநிலத்தார் தென் மாநிலத்தார்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளனர். எனவே, தென்னிந்திய மக்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கும் ஒரு போக்கு கொண்டுள்ளனர் எனலாம். ஆகவே அவர்களுக்குள்ளேயே கோபம் மற்றும் ஏமாற்றம் மிகவும் அதிகமாக அதிகரித்து போகும் பொழுது, தம்மை இழக்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் தற்கொலை ஏன் அதிகரித்திருக்கிறது என்பதற்கான ஒரு கோட்பாட்டு ரீதியான [theoretical explanations] வாதத்தை இங்கு காண்கிறோம்.

பதிவாளர் பொது அலுவலகத்தின் [Registrar General's office] புள்ளிவிபரங்களின்படி, சுதந்திரம் (1948) அடைந்த காலத்தில் இலங்கையில் தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 9 ஆகும். அதன் பின் 1970 களில் இது 100,000 க்கு 19 ஆக உயர்ந்தது.1980 களின் மத்தியில், அது மேலும் உயர்ந்து 100,000 க்கு 33 ஆக அடைந்தது. இலங்கையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தற்கொலை வீதம் 100,000 க்கு 15 என முன்னையதை விட குறைந்து இருப்பதை காட்டுகிறது. சில வேறு அறிக்கை 100,000 க்கு 20 எனவும் சொல்லுகிறது. எது எப்படியாயினும் தற்கொலை வீதம் உலக சராசரி வீதத்தை விட  அதிகமாகவே இன்னும் இருக்கிறது. வறுமை மற்றும் இழப்புக்களே [Poverty and deprivation] முக்கிய காரணமாகும். வவுனியா, யாழ்ப்பாணம் ஆகியவை மிக உயர்ந்த விகிதத்தில் உள்ள பகுதிகளாக இங்கு காணப்படுகின்றன. இவைகள் தமிழர் தயக்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (~1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் தமிழர்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர்.
என்றாலும் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை 1970 இல் கொண்டு வந்தார்கள்.அரசு நிறைவேற்றிய இந்த முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது.அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் பாதித்தது.அவர்களிடையே சடுதியாக ஏமாற்றங்கள் அதிகரிக்க தொடங்கின. எனவே  எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் 1970 இற்கு பின் அதிகரிக்க  தற்கொலையும் அதிகரித்தன எனலாம். என்றாலும் அவர்களின் வெறுப்பு மற்றும் விரக்தி 1980 இல் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக வெடிக்க, அவர்களின் கவனம் போராட்டம்  ஒன்றில் ஒற்றுமையாக திசை திரும்பின, எனவே அவர்கள் தமது மனஅழுத்தங்களுக்கு ஒரு வடிகால் அமைத்து விட்டனர். ஆகவே கட்டாயம் தற்கொலை வீதம் இனி குறையும் என யாரும் எதிர்பார்க்கலாம், அதைத்தான் மேற்கூறிய புள்ளி விபரமும் அத்தாட்சி படுத்துகிறது. ஆனால், யுத்தத்தின் பின் தமிழ் மக்கள் மீண்டும் முன்னைய நிலையையே அல்லது அதைவிட கேவலமான குறைந்த நிலையையே அடைந்தனர், பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அது மட்டும் இல்லை, சில விடயங்களில் முனையத்தை விட பின்தள்ளியே போய்விட்டார்கள்.
எனவே மீண்டும் தற்கொலை வீதம் கூடும் என்பது வெள்ளிடைமலை. அதைத்தான் புள்ளிவிபரமும் காட்டுகிறது. 

2009 மே மாதம் 30 வருடகால யுத்தம் முடிவிற்கு வந்தது, சமாதானம் திரும்பி விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்கொலை விகிதம் அதன் பின் உயர்ந்து விட்டதையே காண்கிறோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் பேராசிரியர் ஒருவர் [Professor of Psychiatry at Jaffna University] சேகரித்த புள்ளிவிபரங்கள் படி, ஈழ யுத்தம் நான்காவதின் தொடக்கத்தில், அதாவது 2005 இல், யாழ்ப்பாணத்தில், தற்கொலை விகிதம் 100,000 மக்களுக்கு 23 ஆகும். ஆனால் 2006 ல், யுத்தம் தீவிரமடைந்தபோது, ​​அது 20 க்குக் குறைவாகக் குறைந்தது. 2007 மற்றும் 2008 ல், போர் மேலும் மேலும் முன்னேறும் பொழுது, விகிதம் இன்னும் சரிந்து சரிந்து போனது. 2009 இல், போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​தமிழ் சமூகம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தபோது, ​​தற்கொலை விகிதம் கிட்டத்தட்ட 100,000 மக்களுக்கு 15 எனக் குறைந்து காணப்பட்டது. ஆனால் போருக்குப் பிறகு, தற்கொலை விகிதம் திடீர் என அதிகரித்து, 2011 இல் 25 யையும் கடந்தது, சமாதானம் எங்கே என்ற ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. இது 2012 ல் 25 விட சற்று குறைந்தது, எனினும்  2013 ஆம் ஆண்டில் அது மீண்டும்  2011 இன் நிலைக்கு வந்துவிட்டது, கவலைக்குரிய விடயமாகும். 2002-2004 சமாதான முன்னெடுப்புகளின் போதும் - இராணுவ நடவடிக்கை நிலவிய அந்த காலத்திலும் - தற்கொலை விகிதம், முன்னைய  காலத்தை விட அதிகரித்தமை குறிப்பிடத் தக்கது. போரின் போது, பலவிதமான துயரங்கள் மற்றும் அழுத்தங்களின் தாக்கத்தை, அங்கு அன்று நிலவிய ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பு முழுமையாக எந்த கெடுபிடியும் இல்லாமல் இயங்கி அவர்களின் துன்பத்தை தனித்ததுவே இதற்கு முக்கிய கரணம் என ஒரு பத்திரிகைக்கு பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார் [Explaining the phenomenon, Professor told that during the war, frustrations were better managed because there was a strong social support system cushioning the impact of various kinds of traumas and stresses].மேலும் இலங்கை இராணுவ முற்றுகையின் பொழுது, பொதுமக்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒன்றுகூடினர். ஆனால் போருக்குப் பின், சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவு [social cohesion and social support systems] அமைப்புகள் மெல்ல மெல்ல தேயத் தொடங்கின, எனவே குடும்பங்களும் உடைந்து சிதறத் தொடங்கியதும் தற்கொலை இன்று மீண்டும் அதிகரித்ததிற்கு ஒரு காரணம் எனலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்].............................................. -முடிவுற்றது.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க-click -
Theebam.com: தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? பகுதி: 01

0 comments:

Post a Comment